சென்னை:ராமச்சந்திரா பல்கலைக்கழகம், "புற்றுநோய் சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள்' எனும் தலைப்பில், சர்வதேச கருத்தரங்கை, சென்னையில், நேற்று நடத்தியது.
இதுகுறித்து, பல்கலைக்கழகத்தின், புற்றுநோய் மருத்துவத் துறை பேராசிரியர் அனிதா ரமேஷ் கூறியதாவது:
கர்ப்பப் பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், ரத்த புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட, 70 வகை புற்றுநோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர்.
இவற்றுக்கு, அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, மருந்து முறை சிகிச்சை ஆகியவை தரப்
படுகின்றன.
மருத்துவமனைகளில் உள்ள சிகிச்சை வசதி மற்றும் மருத்துவர்களின் அனுபவத்தை பொறுத்து, புற்றுநோய்களுக்கு தரப்படும் சிகிச்சை மாறுபடுகிறது.
இதனால், புற்று நோயாளிகள், ஓரிடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு சென்று சிகிச்சை பெறுவதில், சிக்கல் ஏற்படுகிறது.
இச்சிக்கல் தீர, புற்றுநோய்களுக்கு, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ஒரேவித சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
புற்றுநோய் சிகிச்சை நிபுணர்களுக்கு,
அதற்கான வழிகாட்டுதல்களை, இக்கருத்தரங்கம் அளிக்கிறது.
வழிகாட்டுதல் நெறிமுறைகளை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வகுத்துள்ளது.
இவ்வாறு, அனிதா ரமேஷ் கூறினார்.
இக்கருத்தரங்கில், பல்வேறு மாநிலங்களின், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த, 350க்கும் மேற்பட்ட புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர்.