சென்னை : வங்கியில், 52 லட்ச ரூபாய் முறைகேடு செய்தது தொடர்பாக, பணியில் இருந்து விலகிய வங்கி அதிகாரியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் கிரீஷ்குமார், 35. எழும்பூர் மாண்டியத் சாலையில் உள்ள, தனியார் வங்கி ஒன்றில், மக்கள் தொடர்பு மேலாளராக பணியாற்றி வந்தார். பின், வங்கியின் துணை தலைவராக பதவி உயர்வு பெற்றார். பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய இவர், வங்கியில் பண முதலீடு, கடன் தொடர்பான விவகாரங்களில் முகவர்களிடமிருந்து கிடைத்த, 52 லட்ச ரூபாய் பணத்தை, வங்கியில் செலுத்தாமல், தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் காசோலை கொடுத்து, முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது. இவருக்கு பின், வங்கி துணை தலைவராக பொறுப்பேற்ற சுரேஷ், மோசடி குறித்து எழும்பூர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து, வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வந்தனர். இதில், நடவடிக்கை எடுக்க கோரி, கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, அயனாவரத்தில் வசித்து வந்த, கிரீஷ்குமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.