சென்னை:பகுதி நேரம் மட்டுமே செயல்பட்டு வந்த மாநகர பூங்காக்களை, அதிகாலை 5:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை திறந்து வைக்கும் முடிவுக்கு, மாநகராட்சி வந்துள்ளது. சென்னை வாசிகளுக்கு, இது பெரிதும் பயனளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இயந்திரத்தனமான வாழ்க்கையில், சிறிது இளைப்பாறவும், புத்துணர்வு பெறவும், குடும்பத்தினர், நண்பர்களுடன் சென்று, கவலையை மறந்து, பல கதைகள் பேசும் வகையிலும், சென்னை முழுவதும் பூங்காக்கள் அமைக்கப் பட்டுள்ளன. மாநகரில், 260 பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன.பெரிய அளவிலான பூங்காக்களில், நடைபாதை வசதி உள்ளது. இந்த பூங்காக்கள், ஓரளவு பராமரிக்கப்பட்டும் வருகின்றன.வழக்கமாக,டூ அதிகாலை 5:00 மணி முதல், 10:00 மணி வரையிலும்டூ மாலை 4:00 மணி முதல், இரவு 8:00 மணி வரையிலும்
மட்டுமே பூங்காக்கள் திறந்து வைக்கப்படுகின்றன. மற்ற நேரங்களில் மூடப்படுகின்றன. இதனால், குறித்த நேரத்தில் செல்வோர் மட்டுமே, பூங்காவை பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்து வருகிறது.
காலை 10:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை, பூங்காக்களை யாரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அலுவலகம் செல்வோரை கருத்தில் கொண்டே, பூங்காக்கள் செயல்பட்டு வருகிறதோ என்ற, சந்தேகம் எழுகிறது.சமீபத்தில், மேயர், சில பூங்காக்களை ஆய்வு செய்த போது, பொதுமக்கள் இதுகுறித்து முறையிட்டனர்.மாநகராட்சி முடிவுஇதையடுத்து, நாள் முழுவதும் பூங்காக்களை மக்கள் பயன்படுத்தும் வகையில், மாநகராட்சி முக்கிய முடிவு எடுக்க உள்ளது. இதன்படி, அதிகாலை 5:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, பூங்காக்கள் அனைத்தும் திறந்து வைக்கப்படும். பெரிய பூங்காக்கள் மட்டுமின்றி, சிறிய பூங்காக்களிலும் இந்த நடைமுறையை பின்பற்ற, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.வரும் 27ம் தேதி நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில், இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த முடிவு, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பூங்காவிற்குள் செல்வதற்காக ஒரு காலத்தில் இருந்த கட்டணம், ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
100 பூங்காக்கள் என்னாச்சு?சென்னையில் பூங்காக்கள் உள்ளதுபோல், விரிவாக்க பகுதிகளில், 100 பூங்காக்கள் அமைக்கப்படும் என, பட்ஜெட்டில் மாநகராட்சி அறிவித்திருந்தது. அறிவிப்பு வெளியாகி ஒன்பது மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் மந்த நிலையிலேயே உள்ளன.
இதுகுறித்து, மாநகராட்சி பூங்கா துறை அதிகாரிகள் கூறுகையில், ""முதற்கட்டமாக, 60 பூங்காக்கள் அமைக்கும் பணி துவங்கி உள்ளது. இவை, இன்னும் ஓரிரு மாதத்தில் முடியும். அடுத்த கட்டமாக, 40 பூங்காக்களும் அமைக்கப்படும். இதுதவிர, இன்னும் எந்தெந்த இடங்களில் அமைக்கலாம் என்பது குறித்தும், ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.போதுமா பசுமை சூழல்?சென்னையில், தேவையான அளவில் பூங்காக்கள் இல்லை. இதுகுறித்து, வன துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை மாநகரில், தொழில் நிறுவனங்கள் அதிகரிப்பு, வாகன போக்குவரத்து அதிகரிப்பால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. பொதுவாக, ஒரு நிலப்பகுதியில், தாவர இயற்கை சூழல் சமன்
(ecological balance) 33 சதவீதம் இருக்க வேண்டும். சென்னையில், 23 சதவீதம் மட்டுமே உள்ளது.
இதை கருத்தில் கொண்டு, வாய்ப்புள்ள இடங்களில், மர கன்றுகளை அதிகம் நட வேண்டும். திறந்த வெளி நிலங்கள், அரசுக்கு சொந்தமான காலியிடங்களில், புதிய பூங்காக்களை உருவாக்குவதிலும், மாநகராட்சி சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.அனுமதி மறுக்கும்தனியார் நிறுவனங்கள்
சில பெரிய தனியார் கட்டுமான திட்டங்களில், குறிப்பிட்ட அளவு நிலத்தை, மாநகராட்சிக்கு திறந்த வெளி நிலமாக கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இவற்றில், பூங்கா அமைத்து பராமரிக்க, அந்த நிறுவனங்களுக்கு, மாநகராட்சி அனுமதி அளித்து வருகிறது. இப்படி உள்ள பூங்காக்களை, பொதுமக்கள் பயன்படுத்துவதில் எந்த சிரமமும் ஏற்பட கூடாது என, நிபந்தனை விதிக்கப் பட்டு உள்ளது.கிண்டி, ஐ.டி.சி., நிறுவனத்துக்கு, திறந்த வெளி பூங்கா பராமரிப்புக்கு, 2011 நவம்பரில் அனுமதி அளிக்கப்பட்டது. பூங்கா பராமரிப்பை இந்த நிறுவனம் மேற்கொண்டாலும், பொதுமக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. பூங்காவும் பூட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மீது, மாநகராட்சி எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.