சென்னை:நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் துவக்கப்பட்ட கண்காட்சியில், பல வண்ண கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள், மகளிர் சுய உதவி குழுவினர் தயாரித்த பொருட்கள் இடம் பெற்றுள்ளன.கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுய உதவி குழுவினர் தயாரித்த பொருட்களின் கண்காட்சி, நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் சமீபத்தில் துவங்கியது.மூன்று கட்டங்களாக கண்காட்சி நடக்கிறது. முதல் கட்டமாக அரியலூர், கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல் உள்ளிட்ட, 11 மாவட்டங்களை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள், முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.சென்னையிலிருந்து, செயற்கை ஆபரணங்கள், கிறிஸ்துமஸ் பொம்மைகள், பேப்பர், களிமண் பொம்மைகள், சணல் பொருட்கள், திருப்பூர் ஆயத்த ஆடைகள், பருத்தி புடவைகள், சுடிதார் வகைகள், தூத்துக்குடி கருப்பட்டி, கடலை மிட்டாய், சுக்கு, பருப்பு பொடி, வடகம், வீட்டு உபயோக பொருட்கள், தானிய வகைகள், வாழை நார் பொருட்கள், பத்தமடை பாய், கம்பளி ஆடைகள், கொசு வலை, திரை சீலைகள், அகர்பத்திகள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.கண்காட்சியில், 50 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை பொருட்கள் கிடைக்கின்றன. வரும் ஜனவரி, 20ம் தேதி வரை, காலை 10:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை மக்கள் பார்வையிடலாம்.