கடலூர்:சுனாமி பேரலை தாக்கி 8 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நேற்று கடற்கரை கிராமங்களில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரழிவால் கடலூர் மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்டோர் சுனாமி பேரலைக்கு பலியாகினர். சுனாமி தாக்கிய நாளான நேற்று இறந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலங்கிய உள்ளத்தோடு அஞ்சலி செலுத்தினர்.
நினைவு அஞ்சலி
சுனாமியால் பலியானவர்கள் ஆத்மா சாந்தியடைய நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மீனவர் பேரவை சார்பில் ஊர்வலம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
மீனவர் பேரவை மாநில துணைத் தலைவர் மாரியப்பன் தலைமையில் பெரியார் கல்லூரியில் இருந்து மீனவர்கள் ஊர்வலமாகச் சென்று கடற்கரையில் பாலூற்றியும், பூக்களைத் தூவியும் அஞ்சலி செலுத்தினர். கடற்கரையோரத்தில் பலியான குழந்தைகளின் உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கலெக்டர் அஞ்சலி
சுனாமி பேரலையால் பெற்றோர்களை இழந்து அரசு சேவையில்லத்தில் வசித்து வரும் குழந்தைகளுடன் நேற்று கலெக்டர் கிர்லோஷ்குமார் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். பின்னர் குழந்தைகளுக்கு உணவு வழங்கி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதியளித்தார் . மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி உடனிருந்தார்.
மீன் பிடிக்கச் செல்லவில்லை
இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தம் விதமாக கடலூரில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் துறைமுகத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
கிள்ளை: கிள்ளை, பில்லுமேடு, சின்னவாய்க்கால், பிச்சாவரம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களில் உள்ள நினைவு கல்வெட்டுகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.