சென்னை : ""இந்தியா - பாகிஸ்தான் இடையே, சேப்பாக்கம் மைதானத்தில், நாளை நடக்கும், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியையொட்டி, காலை 7:00 மணி முதல், போட்டி முடியும் வரை, அப்பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படு
கிறது,'' என, போக்குவரத்து இணை கமிஷனர் தினகரன் தெரிவித்தார்.
நேற்று, நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
இந்தியா - பாக்., கிரிக்கெட் போட்டியையொட்டி, 30ம் தேதி (நாளை) பெல்ஸ் சாலை, காலை 7:00 முதல், 11:00 மணி வரை, ஒரு வழிச்சாலையாக மாற்றப்படும்.
பாரதி சாலையில் இருந்து, பெல்ஸ் சாலை வழியாக மட்டுமே, வாகனங்கள் அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையில் இருந்து, பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாலை 4:00 முதல், 6:00 மணி வரை, வாலாஜா சாலையில் இருந்து, பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்லலாம். பெல்ஸ் சாலையில் இருந்து, பாரதி சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
போட்டி முடிந்தவுடன், பாரதி சாலை சந்திப்பில் இருந்து, கண்ணகி சிலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பி.டி.டபுள்யூ.வி., வாகன அனுமதி அட்டை வைத்திருக்கும் வாகனங்கள் மட்டும், கெனால் சாலை மற்றும் பாரதி சாலையில் அனுமதிக்கப்படுவர். போட்டி முடியும் வரை, வாலாஜா சாலையில் இருந்து, கெனால் மற்றும் பாரதி சாலையில் செல்ல அனுமதி இல்லை.
அண்ணா சாலையில் இருந்து, எம்.பி.டி.டபுள்யூ.வி., ஆகிய
அனுமதி அட்டை கொண்ட வாகனங்கள், வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை
சந்திப்பு, பாரதி மற்றும் கெனால் சாலை வழியாக, அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு சென்றடையலாம். பி.ஆர்., வாகன அனுமதி அட்டை வைத்திருக்கும் வாகனங்கள், வாலாஜா சாலை வழியாக, வாகன நிறுத்துமிடங்களுக்கு
செல்லலாம்.
போட்டி முடிந்தவுடன், வாலாஜா சாலையில் இருந்து, பெல்ஸ் மற்றும் பாரதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
காமராஜர் சாலையில், போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக, பி.டி.டபுள்யூ.வி., அனுமதி அட்டையுடைய வாகனங்கள், பாரதி சாலை வழியாக கெனால் சாலையை அடைந்து, வாகன நிறுத்துமிடங்களுக்கு
செல்லலாம்.
அனுமதி அட்டை இல்லாமல் வரும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள், வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக, கடற்கரை உட்புறச்சாலையில் வாகனங்களை நிறுத்தலாம்.
போர் நினைவு சின்னத்தில் இருந்து வரும் வாகனங்கள், காமராஜர் சாலை வழியாக, பி.டபுள்யூ.டி., அலுவலகத்திற்கு முன், கடற்கரை உட்புற சாலையில் வாகனங்களை நிறுத்தலாம்.
காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள், காமராஜர் சாலை வழியாக சீரணி அரங்க உட்புற சாலை வழியாக, கடற்கரை உட்புற சாலையை அடையலாம்.
இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.
பாதுகாப்பு பணியில் 7,000 போலீசார்
இந்தியா - பாக்., அணிகளுக்கிடையே, கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதையொட்டி, மைதானத்திற்கு, ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில், 7,000
போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பாரதி, பெல்ஸ், வாலாஜா, கெனால் சாலை மற்றும் விக்டோரியா விடுதி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் மைதானத்தை சுற்றியுள்ள, 18 நுழைவாயில்களில்,
மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். மைதானத்தில் உள் மற்றும் வெளிப்
புறம் என, 218க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
விளையாட்டு மைதானத்திற்குள் துண்டு பீடி, சிகரெட், பட்டாசு, தீப்பெட்டி, மது பாட்டில்கள், மரக்குச்சியில் இணைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் பதாகைகள், பை, தின்பண்டங்கள், தண்ணீர் பாட்டில்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அலைபேசி எடுத்து செல்லலாம்; அதில் படம் எடுக்க முயற்சித்தால், பறிமுதல் செய்யப்படும்.