மதுரை : "பெண்ணுரிமை
சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு இல்லாததே பிரச்னைகளுக்கு காரணம்,' என,
மதுரையில் போலீஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை,
விருதுநகர் மகளிர் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்களுக்கான "பெண்களும்
சட்டங்களும்' தலைப்பில் இம்முகாம் நடந்தது. டி.எஸ்.பி., ராமநாதன் தலைமை
வகித்தார். இன்ஸ்பெக்டர் சின்னராக்கு முன்னிலை வகித்தார்.
ஐகோர்ட்
வக்கீல் ஆர்.காந்தி பேசியதாவது: தேசிய குற்றப்பதிவேடு ஆவண
புள்ளிவிவரங்களின்படி, ஆண்டுதோறும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் 4.8
சதவீதம் அதிகரிக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், நாட்டில்
டில்லி மாநிலத்தில்தான் அதிகம் நடக்கிறது.
பெண்களுக்கு எதிரான
கொடுமைகள் நடக்காமல் தடுப்பதும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்டப்படியான
உரிய நிவாரணம் பெற்று தருவதும் போலீஸ் கடமை. சட்ட ரீதியாக பாதிக்கப்படும்
பெண்களுக்கு உதவ, சட்டங்கள், சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் அவ்வப்போது
வெளியிடும் தீர்ப்புகளை அறிந்திருப்பது அவசியம். பெண்ணுரிமை சட்டங்கள்
குறித்து விழிப்புணர்வு இல்லாதது பிரச்னைகளுக்கு காரணம். பெண்கள் குறித்த
சட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலுள்ள சிக்கல்களை போலீஸ் அதிகாரிகள் கவனமாக
களைய வேண்டும். பாலியல் பலாத்கார வழக்குகளில் பெண்களின் அடையாளம் குறித்து
வெளியிடுவதோ பிரசுரிக்கக் கூடாது, என்றார்.