சோழவந்தான் :பருவமழை பொய்த்ததால், சோழவந்தான் பகுதியில் தண்ணீரின்றி நிலம் காய்ந்து பாளம் பாளமாக விரிசலாகி, நெற்பயிர் கருகின. வாங்கிய கடனை செலுத்த வழியில்லாமல் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். சோழவந்தான்
வடகரை கண்மாய், நாச்சிக்குளம், கரட்டுப்பட்டி, கருப்பட்டி,
மேட்டுநீரேத்தான், இரும்பாடி, தென்கரை, முள்ளிப்பள்ளம், ஊத்துக்குழி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், 9 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உள்ளது.
பெரியாறு பிரதான 2வது பாசன கால்வாய் மூலம் இப்பகுதி நிலங்களில் பரவலாக இரண்டு போகம் நெற்பயிரிடப்படுவது வழக்கம். பருவமழை
பொய்த்ததால் வைகை ஆறு வறண்டது. இதனால் பெரும்பாலான விவசாயிகள், பாசன
பணிகளில் ஈடுபடாமல் இருந்தனர். முதல் போகம் மழையின்றி குறுவை சாகுபடி
பருவம் தவறியது. இரண்டாவது போகம் சம்பா சாகுபடி பருவத்திற்கு அணை தண்ணீரை
விவசாயிகள் எதிர்பார்த்தனர். பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பதாக
மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதை நம்பி, விவசாயிகள் நெல் நடவு
செய்தனர். 42 நாட்களுக்குள் அணை மூடப்பட்டதால் தண்ணீர் கிடைக்கவில்லை.
கிணற்றிலும் தண்ணீர் வற்றியது. தண்ணீரின்றி பாளம் பாளமாக நிலம் வெடித்து,
400க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பயிரிட்ட நெற்பயிர் கருகி சாவியானது.
விளைந்த பயிரை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் தத்தளிக்கின்றனர்.
மேட்டுநீரேத்தான்
விவசாயி கிருஷ்ணன்: ஆறு ஏக்கர் நிலத்தில், நெல் பயிரிட்டு, அணையில்
தண்ணீர் மூடப்பட்டதால் தண்ணீர் வசதியின்றி பயிர் கருகியது. ஒரு கிலோ நெல்
விதை ரூ.100க்கு மேல் வாங்கி
பயிரிட்டு, இதுவரை ரூ.7 ஆயிரம் மேல் செலவழித்து பயனில்லை. ஆடுமாடுகள் நாற்றை மேய்கிறது. வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத
அவலநிலை ஏற்பட்டுள்ளது. பாதிப்புக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
பெரியாறு பிராதன 2 வது பாசன கால்வாய் நீர் பகிர்மான சங்க
நிர்வாகி
சிவராமன்: பெரியாறு அணை ஆயக்கட்டு இப்பகுதியில் தண்ணீரை எதிர்பார்த்து
விவசாய பணி நடந்தது. கள்ளந்திரி வரை விடவேண்டிய தண்ணீரை மேலூர் வரை
நீடிக்கப்பட்டது. கண்மாய், குளங்கள், கிணறுகளில் தண்ணீர் நிரம்பாமல்
வறண்டது. சோழ
வந்தான் சுற்று 20 கிராம பகுதியில் ஏராளமான ஏக்கர்
நிலங்களில் பயிரிட்ட நெற்பயிர் கருகி சேதமானது. குடும்பம் குடும்பமாக
விவசாயிகள் பஞ்சம் பிழைக்க வெளியூர் செல்லவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது,
என்றார்.