சென்னை:மாநகராட்சி
விரிவானதை அடுத்து, மாநகராட்சி விழிப்பு குழுமம் (விஜிலென்ஸ் கமிட்டி),
ஒரு துணை கமிஷனர், மூன்று இன்ஸ்பெக்டர்கள், ஐந்து சப்-இன்ஸ்பெக்டர்கள்
உட்பட, 18 பேர் கொண்டதாக விரிவாக்கப்படுகிறது.சென்னை மாநகராட்சியில்
நடக்கும் முறைகேடுகளை கண்டறிந்து தடுக்கும் வகையில், விழிப்பு குழுமம் தனி
பிரிவாக செயல்படுகிறது. ஆரம்பத்தில், துணை கமிஷனர் தலைமையில், எட்டு பேர்
கொண்டதாக இருந்த இக்குழு, 2011ல், 14 பேர் கொண்டதாக மாற்றப்பட்டது.சென்னையை
சுற்றியுள்ள, 42 உள்ளாட்சி அமைப்புகளையும் இணைத்து, மாநகராட்சி
விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
174 சதுர கி.மீ., அளவில் இருந்த
மாநகராட்சி எல்லை, 429 சதுர கி.மீ., ஆக விரிவடைந்துள்ளதால், தற்போதுள்ள
விழிப்பு குழுமத்தினரால் சிறப்பாக பணியாற்ற முடியாத சூழல் இருந்து
வருகிறது. இதை கருத்தில் கொண்டு, மாநகராட்சி விழிப்பு குழும பணியிடங்கள்,
விரிவாக்கம் செய்யப்படுகிறது.இதன்படி, துணை கமிஷனர் ஒருவரின் கீழ், மூன்று
இன்ஸ்பெக்டர்கள், ஐந்து உதவி ஆய்வாளர்கள், மூன்று தலைமைக் காவலர்கள்,
கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் தலா ஒருவரும்,
அலுவலக உதவியாளர்கள் இரண்டு பேர் என, 18 பேர் கொண்ட குழுவாக
மாற்றியமைக்கப்படுகிறது.
இதற்கு முன் இருந்த குழுக்களில், உதவி ஆய்வாளர்
நிலையில் யாரும் இல்லை. தற்போது, ஐந்து உதவி ஆய்வாளர்கள் பணியிடங்கள்
உருவாக்கப்பட்டு உள்ளன. இன்ஸ்பெக்டர்களின் எண்ணிக்கையும் மூன்றாக
உயர்கிறது. பணியிடங்கள் திருத்தியமைப்புக்கு உரிய அனுமதி கோரி, அரசுக்கு
அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.வரும், 21ம் தேதி நடக்கும் மாநகராட்சி
கூட்டத்தில், அரசு அனுமதி கோரி, தகவல் மன்றத்தில் பதிவு செய்யப்படுகிறது.
விரைவில், இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் என, தெரிகிறது.