உசிலம்பட்டி:உசிலம்பட்டி பகுதியில், 58 கிராம கால்வாய்த் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.8 கோடி ஒதுக்காததால், 17 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் இ....ழுத்துக் கொண்டிருக்கிறது. 58 கிராமங்களைச் சேர்ந்த 29 கண்மாய்கள், உத்தப்பநாயக்கனூர் பாறைப்பட்டி கண்மாய், நிலக்கோட்டை தாலுகாவில் இரு கண்மாய்கள் என 33 கண்மாய்களுக்கு, வைகை அணையில் இருந்து கால்வாய் மூலம் இணைப்பு ஏற்படுத்தி, மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீரைக் கொண்டு இக்கண்மாய்களுக்கு பாசன வசதி செய்து தரும் திட்டம்தான் 58 கிராம கால்வாய் பாசன திட்டம். பிரதான கால்வாய் 28 கி.மீ., தூரமும், இடது பக்கம் 12 கி.மீ., வலது பக்கம் 10 கி.மீ., நீளமும் இதன் மூலம் உசிலம்பட்டி ஒன்றியத்தில் சுமார் ஆயிரம் எக்டேர் நிலங்கள் பாசன வசதியும், அதன் மூலம் 3000 டன் புதிய உணவு உற்பத்தியும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.1996ல், ரூ.34 கோடி மதிப்பீட்டில் திட்டம் துவங்கப்பட்டது. மறு மதிப்பீடாக ரூ.74 கோடி மதிப்பிடப்பட்டு அதற்கான அனுமதி பெற்று பணிகள் துவங்கி நடந்தன.
பிரதான கால்வாயில், குன்னத்துப்பட்டி அருகே 1.2 கி.மீட்டர் தூரமும், மேலஅச்சணம்பட்டியில் 1.400 கி.மீ., தூரத்திற்கும் தொட்டிப்பாலங்கள் அமைகின்றன. இதில், மேலஅச்சணம்பட்டியில் அமையும் பாலம் அதிகபட்ச உயரமாக 18.54 மீட்டரும், குறைந்த பட்சம் 8 மீ., உயரமும் கொண்டதாக அமைந்து வருகின்றது. இதற்காக 230 தூண்கள் எழுப்பப்பட்டு, மேல்பகுதியில் 2.1 மீ., உயரம், 2.5 மீ., அகலம் கொண்ட தொட்டி, வினாடிக்கு 330 கனஅடி நீர் செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. நிதி பற்றாக்குறையின் காரணமாக தொட்டிப்பாலத்துடன் அமைக்க இருந்த நடைபாதை வசதியும் நீக்கப்பட்டது. நிலுவையான பணிகள்: 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் தொட்டிப்பால பணிகளும், மதுரை- போடி நாயக்கனூர் ரயில்வே பாதையில் பாலம் கட்டும் பணிகளும் நிலுவையில் உள்ளன. திட்டப்பணிகள் துவங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மேலும் ரூ.8 கோடி கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இந்நிதியை அரசு இன்னும் ஒதுக்காததால், பணிகள் நடக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.58 கிராம கால்வாய் திட்ட பாசன விவசாயிகள் சங்க துணைத்தலைவர் ஜெயராஜ்: இரண்டு ஆண்டுகளாக கூடுதல் நிதி ஒதுக்கப்படாமல் பணிகள் தொய்வடைந்துள்ளது. நிதி ஒதுக்கீட்டை அரசு செய்துள்ளது என எம்.எல்.ஏ., கதிரவன் தெரிவித்தார்.
ஆனால், அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர் இந்த நிதி ஒதுக்கினால், இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும்.தொண்டு நிறுவன இயக்குநர் வாசுதேவன்: கடந்த 80, 90ம் ஆண்டுளில் உசிலம்பட்டி பகுதியில் நீராதாரம் இல்லாமல் விவசாயம் சரியாக நடக்கவில்லை. இதை கருத்திற்கொண்டு, இப்பகுதி விவசாயிகளை திரட்டி 58 கிராம கால்வாய் திட்டம் கொண்டுவர
போராடினோம். சரியான காலத்தில் மறு மதிப்பீடு நிதி ஒதுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதால் 17 ஆண்டுகளாக முழுமையடையாமல் கிடக்கிறது. குறிப்பிட்ட காலத்தில் நிதி ஒதுக்காமல் போவதால் நிர்வாகச் செலவு அதிகரித்து திட்டத்திற்கான செலவும் கூடுகிறது. இதை தவிர்க்க விரைவில் கூடுதல் நிதி ஒதுக்க அரசு முன்வரவேண்டும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.