திருப்பூர்:"சீராக குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்; கழிவு நீர் தேங்காமல் இருக்க, சாக்கடை வசதி செய்து கொடுக்க வேண்டும்,' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தை, 20வது வார்டு பெண்கள் நேற்று முற்றுகையிட்டனர்.திருப்பூர் மாநகராட்சி, 20வது வார்டில் உள்ள அவிநாசி நகரில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு குடிநீர் சீராக சப்ளையாவதில்லை. மிகவும் சன்னமாக வருவதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
உப்புத் தண்ணீரும், மின்தடையால் சரியாக சப்ளையாவதில்லை. இப்பகுதியை சேர்ந்த பெண்கள், கைக்குழந்தைகளுடன், நேற்று காலை 10.30 மணிக்கு, இரண்டாவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அலுவலகத்தில் உயரதிகாரிகள் யாரும் இல்லை. அங்கிருந்த அலுவலக ஊழியர்கள், "அதிகாரிகள் வெளியே சென்றுள்ளனர்; அவர்கள், வந்ததும் உங்களது கோரிக்கைகளை தெரிவிக்கிறோம்,' என்றனர். அதற்கு அப்பெண்கள், "எங்கள் வார்டு
கவுன்சிலரும், அதிகாரிகளும் வரும் வரை, நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம்,' என, அலுவலகத்துக்கு வெளியே உட்கார்ந்தனர்.
இளநிலை பொறியாளர் கவுரி சங்கரன், கவுன்சிலர் விஜயகுமார் ஆகிய இருவரும், மண்டல அலுவலகம் வந்தனர். பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். "நாளை காலை (இன்று), உங்களது குடியிருப்பு பகுதியில், புதிதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணி துவங்கப்படும்,' என்று உறுதியளித்தனர். அதன்பின், பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.அவிநாசி நகர் பெண்கள் கூறியதாவது:எங்கள் குடியிருப்பு பகுதிக்கு, 12 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. பகிர்மான குழாய் பதித்து பல ஆண்டுகளாகி விட்டது. குடிநீர் பற்றாக்குறையால், மாதம் மூன்று முறை, விலை கொடுத்து லாரி தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது. குழாயை மாற்றி, சீராக குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்.குப்பை எடுக்கவும், தெருக்களையும், சாக்கடையை சுத்தம் செய்யவும், கொசு மருந்து அடிக்கவும், துப்புரவு பணியாளர்கள் சரியாக வருவதில்லை. அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவு நீர் தேங்காமல் இருக்க தேவையான இடங்களில் கால்வாய் கட்ட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.வார்டு கவுன்சிலர் விஜயகுமார் கூறுகையில்,""போயம்பாளையத்தில் இருந்து அவிநாசி நகர் வரை, 800
மீட்டருக்கு குடிநீர் குழாய் பதிக்க டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் எடுத்தவர், மூன்று மாதத்துக்கு மேலாகியும், இன்னும் பணியை துவக்கவில்லை. ஒப்பந்ததாரர்,
மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனப்போக்கால், மக்கள் போராட்டம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்,'' என்றார்.மாநகராட்சி இரண்டாவது மண்டல உதவி கமிஷனர் வாசு குமாரிடம் கேட்டபோது,""குழாய் பதிக்கும் பணி நாளை (இன்று) துவங்கப்படும்,'' என்றார்.