உடுமலை:பொட்டிநாயக்கனூர் ரேஷன் கடையில், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அனுப்பபட்டுள்ளது.
உடுமலை தாலுகா பொட்டிநாயக்கனூர் கிராமத்தில், பகுதி நேர ரேஷன்கடையில், 250 ரேஷன்கார்டுதாரர்கள் பொருள்களை வாங்கி வருகின்றனர். வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் இக்கடையில் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் அனுப்பியுள்ள புகார் மனு:
பொட்டிநாயக்கனூர் ரேஷன்கடையில் பொருட்கள் பல வாரம் காலம் தாழ்த்தி வழங்கப்படுகிறது. இதனால், பொருட்கள் வினியோகிக்கும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கோதுமை மாவு உட்பட பொருட்கள் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கேட்டால், ரேஷன்கடை பணியாளர் முறையாக பதில் அளிப்பதில்லை. மண்ணெண்ணெய் உட்பட பொருட்கள் எதுவும் கிடைக்காமல் கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.