மடத்துக்குளம்:மருத்துவ குணமுடைய செடிகள் அழிக்கப்படுவதையும்,ஏற்றுமதி செய்வதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மடத்துக்குளம் பகுதி கிராமப்புறங்களில் மருத்துவ குணமுடைய செடிகள் ஏராளமாக உள்ளன. இதை சிலர் மொத்தமாக எடைக்கு வாங்கி அருகிலுள்ள மாநிலத்தில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த வகை செடிகள் மருந்து தயாரிக்க மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது.
கிராமபகுதியிலுள்ள சிலர், தங்கள் பகுதியிலுள்ள செடிகளை பெயர்த்தும், துண்டித்தும் எடுத்து வந்து கொடுக்கின்றனர். இந்த செடிகளுக்கு எடை அடிப்படையில் கிலோவுக்கு இரண்டு மற்றும் மூன்று ஐந்து ரூபாய்கள் வரை வழங்கப்படுகிறது. அறியாமையாலும், பணம் கிடைப்பதாலும் செடிகள் அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
கிராமப்பகுதிகளிலும் காடுகளிலும் உள்ள கற்றாழை மூலநோய்க்கும், ஊமத்தஞ்செடி, பாச்சன்குச்சி நோய்தடுக்கும் மருந்துகள் தயாரிக்கவும், கருவேல மரப்பட்டைகள் பல்பொடிக்கும், கீழாநல்லி வேர் மற்றும் இலைகள் மஞ்சள் காமாலைக்கும், உரப்பூடு, புங்கமரத்து இலைகள் காயத்துக்கு மருந்தாகவும், ஆவரம்பூ மற்றும் இலைகள் முகத்துக்கான அழகு கிரீம்கள் தயாரிக்க மூலப்பொருட்களாக பயன்படுத்த குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர்.
இந்த வகை செடிகள் இருபது ஆண்டுகளுக்கு முன் கிராமப்பகுதியின் பல இடங்களில் அதிகளவு பரவி கிடந்ததோடு,மக்களின் வாழ்வில் இணைந்து அவர்களை நோயற்றவர்களாக வாழ வைத்தது.
இவை மண்வளத்தை பாதுகாத்ததோடு, இயற்கைக்கு ஆதரவாக இருந்தன. ஆனால் தற்போது அழிக்கப்பட்டு வருகினறன. நாளடைவில் இந்த மருத்துவ குணமுடைய, அரியவகை செடிகள் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. இது குறித்து அரசு நடவடிக்கை மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, செடிகள் ஏற்றுமதியை தடுக்க வேண்டும்.
இவ்வாறு மக்கள் கூறினர்.