ஆனைமலை:ஆழியார் அணை அடுத்த மங்கிபால்சில் வனப்பகுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது.
வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் துவங்கி ஜூலை மாதம் வரையும், வட கிழக்கு பருவமழை செப்டம்பர் மாத இறுதியிலோ அல்லது அக்டோபர் மாதம் முதலிலோ துவங்கி டிசம்பர் மாதம் வரையும் பெய்யும். தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் வனப்பகுதிகள் வறண்டு காணப்படுகின்றன.
ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள ஓடைகள், அருவிகள் வறண்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் பெரிதும் எதிர்பார்க்கும் மங்கிபால்ஸ் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
வனத்துறையினர் கூறும் போது, "தண்ணீர் குறைவாக வருகிறது. இருந்தாலும் வெளியூர்களில் இருந்தும் வரும் சுற்றுலாப்பயணிகளை திருப்பி அனுப்பக்கூடாது என்பதற்காக அனுமதியளிக்கிறோம்' என்றனர்.