சென்னை : சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக, மோசடி செய்தவர் மீது, 15க்கும் மேற்பட்டோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.கடலூர்
மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்த, எம்.சி.ஏ., பட்டதாரி மோகன்ராஜ்
தலைமையில், 15க்கும் மேற்பட்டோர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்
கொடுத்த புகார் மனு விவரம்:சென்னை, மேற்கு பாம்பலத்தைச் சேர்ந்த,
ஆண்ட்ரூஸ் அசாரியா, மாம்பலம் கோவிந்தன் தெருவில், "சாடாய் புரொடக்ஷன்
கன்சல்டன்சி' என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனம் மூலம்,
சிங்கப்பூரில் உள்ள பிரபல நிறுவனங்களில், கல்வி தகுதிக்கேற்ப வேலை வாங்கி
தரப்படும் என, விளம்பரம்
செய்திருந்தார். இதை நம்பி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன், 1.30 லட்சம் பணம் கட்டினேன்; அதற்கான ரசீதும் வழங்கினார். ஆனால், வெளிநாடு அழைத்து செல்வதற்கான எந்த ஏற்பாடும்
செய்யவில்லை. இரு
மாதங்களுக்கு முன், நேரில் சென்று கேட்ட போது, மழுப்பலான பதிலே கிடைத்தது.
அப்போது, என்னைப் போல் ஏராளமானோர், பணம் கட்டி ஏமாந்திருப்பது தெரிய
வந்தது. இதையடுத்து, குமரன் நகர் காவல் நிலையத்தில், புகார் செய்தோம்.
போலீசார்,
அவரிடம் விசாரித்த போது, "வசூலித்த தொகையை திருப்பி தந்து விடுகிறேன்'
எனக் கூறி, காசோலை வழங்கினார். அதை வங்கியில் செலுத்திய போது, அவரது
கணக்கில் பணம் எதுவும் இல்லை.
அவரது வீடு, பூட்டிக் கிடந்ததால், மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது,
"திருச்சி விமான நிலையத்தில் இருக்கிறேன்; திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருக்கிறேன்' என, பொய்யான தகவலை சொல்கிறார்.
என்னை போல, 30க்கும் மேற்பட்ட பட்டதாரிகளிடம் வேலை வாங்கி தருவதாக சொல்லி, 50 லட்ச ரூபாய் வரை, மோசடி
செய்துள்ளார். எனவே, ஆண்ட்ரூஸ் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மிரட்டல்
கடந்த மாதம் மோகன்கராஜ் மற்றும் பணம் கொடுத்த மற்றொரு வாலிபர் பிரபு ஆகியோர், ஆண்ட்ரூஸ் அசாரியாவை மீண்டும் சந்திக்க சென்ற போது, "உங்கள் வேலை விஷயமாகத்தான், சிங்கப்பூர் செல்ல இருக்கிறேன்; கூடுதலாக, 35 ஆயிரம் கொடுக்க வேண்டியிருக்கும்' எனக் கூறியுள்ளார்.இதை
நம்பாத இருவரும், "எங்களுக்கு பணத்தை கொடுத்து விடுங்கள்' என, கேட்டனர்.
அப்போது, துப்பாக்கியை காட்டி, "தொலைத்து விடுவேன்" என, ஆண்ட்ரூஸ்
மிரட்டியுள்ளார். ஆண்ட்ரூஸ் அசாரியா, நெல்லையில் வசித்து வருவதாகவும்,
அங்கு, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும், பணம் கொடுத்து
ஏமாந்தவர்கள் தெரிவித்தனர்.