கோவை:கோவை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், புதிய மேம்பாலங்கள், மேற்கு புறவழிச்சாலை, ரயில்வே மேம்பாலத் திட்டப்பணிகளை வேகப்படுத்த வேண்டும் என நேற்று நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசனைக்கூட்டம் மேயர் வேலுசாமி தலைமையில் நடந்தது.
மாநகராட்சி தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் :
கோவை நகரின் போக்குவரத்து நெரிசலை போக்க, ஒவ்வொரு ஆண்டும் இரண்டு திட்டச்சாலைகள் அமைக்கப்படுகிறது.
தற்போது, பேரூர் - தடாகம் ரோடு 3.3 கி.மீ.,க்கு திட்டச்சாலை அமைக்கப்படுகிறது; செல்வபுரம் ஹவுசிங்யூனிட் அகலப்படுத்தப்படுகிறது; சிங்காநல்லூர் - வெள்ளலூர் ரோடு 1.5 கி.மீ., அமைக்கப்படுகிறது.
இதுதவிர, காமராஜ் ரோடு - மசக்காளிபாளையம் இணைப்பு ரோடு; மேட்டுப்பாளையம் ரோடு - சத்தி ரோடு (நல்லாம்பாளையம் வழி); அவிநாசி ரோடு - மசக்காளிபாளையம் ரோடுகள் அகலப்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
சங்கனூர் பள்ளத்தையொட்டி ரோடு அமைத்து, திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, சத்திரோடு, மேட்டுப்பாளையம் ரோடுகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நகரில் ஐந்து இடங்களில் நடைபாதை மேம்பாலம் அமையவுள்ளது.
மேட்டுப்பாளையம் ரோட்டில் என்.எஸ்.ஆர்., ரோடு சந்திப்பில் மாநகராட்சி சார்பிலும், ரயில்வே ஸ்டேஷன் முன்பாக நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் சுரங்க நடைபாதை அமைக்கப்படுகிறது.
உக்கடம், காந்திபுரம், கணபதி மேம்பாலங்கள், மேற்கு புறவழிச்சாலை திட்டம், டெக்ஸ்டூல் பாலம் மற்றும் ஏழு இடங்களில் ரயில்வே மேம்பாலத் திட்டப்பணிகளை வேகப்படுத்த வேண்டும்.
அவிநாசி ரோட்டில், விமானநிலையம் வரையிலும் மேம்பாலம் அமைக்க திட்டமிட வேண்டும். அவிநாசி ரோட்டில் அண்ணாசிலை அருகே, நான்கு பக்க சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும். இப்பணிகள் நிறைவடையும் போது, போக்கு
வரத்து நெரிசலும் இருக்காது, விபத்தும் ஏற்படாது என கூறப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேசியதாவது:
காந்திபுரம் மேம்பால திட்டத்தில், கீழ்வழிச்சாலை அமைப்பது கைவிடப்பட்டு, திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டடுக்கு மேம்பாலத்திற்கு வரைபடங்கள் தயாரித்து உயர்மட்டக் கமிட்டிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வரைபட அனுமதி கிடைத்தபிறகு, நிலம் கையப்படுத்துதல், மதிப்பீடு தயாரித்தல் பணிகள் துவங்கும்.
டெக்ஸ்டூல் பாலம் அருகில் மற்றொரு பாலம் அமைத்து விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்திற்கு மண் பரிசோதனை முடிந்து, வரைபடம் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. ஒரு மாதத்திற்குள் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கும்.
உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே தற்போதுள்ள ரோடு கீழ் வழிச்சாலையாக இருக்கும்.
அங்கு, இரண்டடுக்கு மேம்பாலம் அமைத்து, முதல் தளம் வழியாக பஸ் ஸ்டாண்ட், கடைவீதி செல்லவும், இரண்டாம் தளத்தை வாலாங்குளம், பேரூர் பைபாஸ் ரோடுகளுடன் பொள்ளாச்சி ரோட்டை இணைத்து ஆறு வழிச்சாலை அளவுக்கு வரைபடம் தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வரைபட அங்கீகாரம் வழங்கப்பட்டதும், திட்டமதிப்பீடு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கும்.
மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில், வழித்தடத்தில் இணையும் கிராமங்களுடன் வரைபடங்கள் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது.
அரசு அனுமதி வழங்கியதும் இப்பணிகள் துவங்கும். இவ்வாறு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சிவராசு, போலீஸ் துணை கமிஷனர் பிரவேஷ்குமார், போலீஸ் உதவி கமிஷனர்கள் ராமகிருஷ்ணன், ராஜ்கண்ணா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்கள் முருகேசன், பழனிவேல், கவுதம்ராஜா, சக்ரவர்த்தி, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் கலந்து
கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.