சென்னை : "டெங்கு' காய்ச்சலின் பாதிப்பு, மீண்டும் துவங்கியுள்ள நிலையில், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளின் விழிப்புணர்வுக்காக, சுகாதார துறை மீண்டும் மகளிர் சுய உதவி குழுக்களின் உதவியை நாடிஉள்ளது. திரு.வி.க., நகர் மண்டலத்தில், 64 முதல் 78 வரை மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இவற்றில், 69, 72, 76, 77 உள்ளிட்ட வார்டுகள் தாழ்வான பகுதிகள். இதனால் அப்பகுதிகளில், கழிவுநீர், குடிநீர் பிரச்னை நீடிக்கிறது. இந்நிலையில், "டெங்கு' தொடர்பான விழிப்புணர்வு பணிகளுக்காக, சுகாதார துறையினர், மகளிர் சுய உதவி குழுக்களின் உதவியை நாடிஉள்ளனர். சுற்றுப்புற தூய்மை, தன் சுத்தம் உள்ளிட்டவை குறித்து, வீடுதோறும் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில், ஐந்து மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்பட்டன.சத்தியவாணி முத்து நகர், கஸ்தூரிபாய் காலனி உள்ளிட்ட ஏழு குடிசை மாற்று குடியிருப்பு பகுதிகளில் இருந்து, 8 டன் டயர்கள் அகற்றப்பட்டுள்ளன.