நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை 31 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை நிர்வாகம், நகரமன்ற தலைவரிடம் வழங்கியது. இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலைக்கு நெல்லிக்குப்பம் நகராட்சி விதித்த வரி கூடுதலாக இருப்பதால் 18 ஆண்டுக்கு முன் ஆலை நிர்வாகம் பண்ருட்டி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில், நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. ஆலை நிர்வாகம் மேல் முறையீடு செய்ய முடிவு செய்தனர். இந்நிலையில், தற்போதைய கமிஷனர் சுரேந்திரஷா, சேர்மன் சுதாகர் ஆகியோர் ஆலை அதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்யாமல் நிலுவைத் தொகை 87 லட்சம் ரூபாயை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தை சுமூகமானதைத் தெடர்ந்து கடந்த 2 மாதத்திற்கு முன்பு 56 லட்சம் ரூபாயை ஆலை துணைத் தலைவர் ராஜசேகர் வழங்கினார். மீதமுள்ள 31 லட்சம் ரூபாயை வழங்க வேண்டுமென ஆலை துணைத் தலைவர் ராஜசேகரிடம் சேர்மன் சுதாகர், நகராட்சி மேலாளர் சவுந்தரராஜன், இன்ஜினியர் இளஞ்செழியன், கவுன்சிலர் மோகன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். அதனையேற்று சேர்மன் சுதாகரிடம் ஆலை துணைத்தலைவர் ராஜசேகர், 31 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நேற்று வழங்கினார். இப்பிரச்னை முடிவுக்கு வந்ததால், ஆறு மாதத்திற்கு 14 லட்சம் ரூபாய் வரி செலுத்திய ஆலை நிர்வாகம் இனி 23 லட்சம் வரி செலுத்தும். இதன் மூலம் மக்களின் அடிப்படை வசதிகளை செய்ய முடியும் என சேர்மன் சுதாகர் தெரிவித்தார்.