உடுமலை:பி.ஏ.பி., மண்டல பாசனத்தில், மூன்று சுற்று தண்ணீர் திறக்கப்பட்டும், பெரியபட்டி, கள்ளப்பாளையம் பகுதிகளுக்கு இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால், பயிர்கள் வாடி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
பி.ஏ.பி., பாசன திட்டம் கிருஷ்ணாபுரம் கிளை வாய்க்காலில் 13 ஆயிரத்திற்கு அதிகமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பிரதான கால்வாயிலிருந்து அரசூர் ஷட்டர் வழியாக இக்கிளை வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
மெயின் ஷட்டரிலிருந்து 17 கி.மீ., தூரம் தள்ளி கிளை வாய்க்காலின் கடைமடை பகுதியான பெரியபட்டி, கள்ளப்பாளையம் கிராமங்களுக்குட்பட்ட இரண்டு ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன.
மூன்றாம் மண்டல பாசனத்தில், மூன்றாம் சுற்றுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை தங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என கிருஷ்ணாபுரம் கிளை வாய்க்கால் கடைமடை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கடைமடை விவசாயிகள் பொதுப்பணித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள புகார் மனு:
கிருஷ்ணாபுரம் கிளை வாய்க்கால் பாசன பரப்பு கடந்த 1997 ம் ஆண்டு அதிகரிக்கப்பட்டது. பாசனப்பரப்பு 13 ஆயிரம் ஏக்கரை தாண்டிய நிலையில், கிளை வாய்க்கால் போதுமான அளவு மேம்படுத்தப்படவில்லை.
சிறிய வாய்க்காலாக இருப்பதால், கடைமடை பகுதிகளுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. இந்நிலையில், மூன்றாம் மண்டல பாசனம் துவங்கியதும், கிளை வாய்க்காலில் தண்ணீர் திருட்டு அதிகரித்துள்ளது.
இரவு நேரங்களில், கிளை வாய்க்காலில் குழாய்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் திருடப்படுகிறது. இதனால், கடைமடை பகுதிக்கு சில நேரங்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வருவதில்லை.
கிருஷ்ணாபுரம் கிளை வாய்க்கால் விளைநிலங்களின் மத்தியில் அமைந்துள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பிற்காக வாய்க்காலின் இருபுறங்களிலும் இருந்த பாதை பல இடங்களில் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போய்விட்டது.
அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால், தண்ணீர் திருட்டு தொடர்கதையாகியுள்ளது. கடைமடை பகுதி விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், பிரதான கால்வாயில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டால், வாய்க்கால் கொள்ளளவு இல்லாமல் அருகிலுள்ள விளைநிலங்களுக்குள் தண்ணீர் பாய்கிறது.
பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க கிருஷ்ணாபுரம் கிளை வாய்க்காலை விரிவுபடுத்த வேண்டும். மண்டல பாசனத்தின் போது தண்ணீர் திருட்டை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.
போதிய தண்ணீர் கிடைக்காமல், வறட்சியால் பயிர்கள் கருகினால், விவசாயிகள் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.