திருப்பூர்: சந்தைகளில் ஆடு வாங்கும்போது, கவனமாக இருக்க வேண்டும் என, வெள்ளாடு பயிற்சி முகாமில் வலியுறுத்தப்பட்டது.
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.
ஆராய்ச்சி மைய பேராசிரியர் செல்வராஜ் பேசியதாவது:
இந்தியாவில் வெள்ளாடு 121 மில்லியன் உள்ளது; செம்மறியாடு 58 மில்லியன் உள்ளது. வேலியோர இலை, தழைகளை உண்ணும்; பலவகை மூலிகை இலைகளை உண்பதால், வெள்ளாட்டின் இறைச்சி சுவையாகவும், உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். வறட்சியை தாங்கும் இலைகளை உண்பதால், கோடை காலத்திலும், அவை தீவன பாதிப்பின்றி வளர்கின்றன;
செம்மறியாட்டு இறைச்சியில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. செம்மறியாடுகளை மேய்ச்சல் தரை இருந்தால் மட்டுமே வளர்க்க முடியும். இதனால், வெள்ளாடு வளர்ப்பு அதிகமாக காணப்படுகிறது. சந்தைகளில் நோயுள்ள ஆடுகளை விற்க வாய்ப்புள்ளது; கவனமாக இருந்து, தரமான ஆடுகளை வாங்க வேண்டும்.
ஆடுகளின் சில குணங்களை கண்டறிந்து, வாங்க வேண்டும். தலை பெரிதாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ள ஆடுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். கண்கள், மூக்கில் நீர் வடியக் கூடாது; கண்கள் பிரகாசமாக இருக்க வேண்டும். கழுத்து ஒல்லியாகவும், நெஞ்சுப்பகுதி அகன்றும், வயிறு பெரிதாகவும் இருக்க வேண்டும். இடுப்பு எலும்பு, சற்று இடைவெளியுடன் இருக்க வேண்டும். கால்கள் குட்டையாக இருக்க வேண்டும்; தரமான ஆடுகளை கண்டறிந்து வாங்கி, வளர்த்தால் அதிக லாபம் ஈட்ட முடியும், என்றார்.