மண்டலம் தோறும், ஒரு சலுகை விலை உணகவம் அமைக்க, இடங்களை தேர்வு செய்துள்ள மாநகராட்சி, ஒரு கோடி ரூபாயில், கட்டமைப்பு வேலைகளை துவங்கியுள்ளது. திட்டமிட்டபடி, முதல்வர் பிறந்த நாளன்று திறக்கவும், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம், உணவகத்தை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
ஏழை, எளிய மக்கள், கூலி தொழிலாளர் பயன்பெறும் வகையில், சென்னை மாநகராட்சி மூலம், 1,000 சலுகை விலை சிற்றுண்டி உணவகங்கள் சென்னையில் திறக்கவும், முதற்கட்டமாக, வார்டுக்கு ஒன்று என, 200 இடங்களில் திறக்கவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்த உணவகங்களில், "ஒரு ரூபாய்க்கு இட்லி; மூன்று ரூபாய்க்கு தயிர் சாதம்; ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதம் தரப்படும்' எனவும் முதல்வர் அறிவித்தார். இத்திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி களத்தில் இறங்கியுள்ளது.
இடங்கள் தேர்வு
முதற்கட்டமாக மண்டலத்திற்கு ஒன்று என, 15 உணவகங்கள் அமைய உள்ளன. இதற்காக, மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன.
இவற்றில், சில கட்டடங்கள் பயன்படுத்தப்படாமல் இருந்ததால் பாழடைந்துள்ளன. இவை, சிற்றுண்டி உணவகம் அமைக்கும் வகையில், சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு, 25 லட்ச ரூபாய் வரை செலவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தையும், 5ம் தேதிக்குள் முடிக்க, பொறியியல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தலா ரூ.5 லட்சம்
உணவகங்களில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப் படுகின்றன. 50 பேர் வரை, நின்றபடி சாப்பிடும் வகையிலான மேஜை கட்டமைப்புகளும் அமைகின்றன. இதற்கு, ஒரு உணவகத்திற்கு, 5 லட்ச ரூபாய் வரை செலவாகும் என, கணக்கிடப் பட்டுள்ளது.
இந்த வசதிகளை செய்வதற்காக, மண்டல அலுவலர்களுக்கு, தலா, 5 லட்ச ரூபாய் வீதம், 15 மண்டலங்களுக்கு, 75 லட்ச ரூபாயை, நேற்று மாநகராட்சி வழங்கியது. கட்டட பராமரிப்பு, தேவையான பாத்திரம், உபகரணங்களுக்கு என மொத்தம், 1 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.
மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""தேர்வான, 15 இடங்களிலும், வரும், 20ம் தேதிக்குள், கட்டமைப்பு வசதிகளை முடித்து, சோதனை முறையில் திட்டம் துவங்கும். முதல்வர் பிறந்த நாளான, பிப்., 24ம் தேதி, திட்டமிட்டபடி உணவகங்கள் திறக்கப்படும்,'' என்றார்.
சுய உதவி குழு
உணவகங்களை நடத்துவது யார் என, கேட்டபோது, ""நிச்சயமாக ஒப்பந்ததாரர்களிடம் கொடுக்கும் எண்ணம் இல்லை. மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமே செயல்படுத்தப்படும். அதற்கான, மகளிர் சுய உதவி குழுக்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டன,'' என்றும், அவர் கூறினார்.
முதல்வர் உத்தரவுப்படி, இந்த திட்டத்திற்காக, கிலோ ஒரு ரூபாய் விலையில் மாதம் தோறும், 500 டன் அரிசியை, நுகர் பொருள் வாணிப
கழகம், மாநகராட்சிக்கு வழங்க உள்ளது.
உணவகம் அமையும் இடங்கள்
மண்டலம் உணவக இடம்
திருவொற்றியூர் டி.எச்.சாலை, வணிக வளாகம்
மணலி மாத்தூர், பழைய பள்ளிக் கட்டடம்
மாதவரம் சூரப்பட்டு சமுதாயக்கூடம்
தண்டையார்பேட்டை வண்ணாரப்பேட்டை, பொம்மி சிவராமுலு தெரு
ராயபுரம் நாட்டுபிள்ளையார் கோவில் தெரு,
பழைய பள்ளி கட்டடம்
திரு.வி.க.,நகர் அம்பேத்கர் சாலை, மாநகராட்சி கட்டடம்
அம்பத்தூர் எஸ்.வி.நகர்
அண்ணா நகர் டெய்லர்ஸ் சாலை, பழைய மண்டல அலுவலக கட்டடம்
தேனாம்பேட்டை சாந்தோம் நெடுஞ்சாலை
கோடம்பாக்கம் தி.நகர் சிவஞானம் சாலை
வளசரவாக்கம் வில்லிவாக்கம், ஆரம்பப்பள்ளி கட்டடம்
ஆலந்தூர் நங்கநல்லூர், நேரு நெடுஞ்சாலை
அடையாறு பீச்ரோடு குப்பம்
பெருங்குடி அண்ணா நெடுஞ்சாலை, வணிக வளாகம்
சோழிங்கநல்லூர் கண்ணகி நகர், இரண்டாவது பிரதான சாலை
- நமது நிருபர் -