கடலூர்: பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, நகைகள் கிடைக்காததால் பொருட்களை கலைத்தெறிந்து விட்டு, 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர், சீத்தாராம் நகரைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக் கொண்டு தனது மனைவியுடன் பெங்களூருவில் உள்ள தனது இளைய மகன் கில்பர்ட்ராஜ் வீட்டிற்குச் சென்றார். கடலூர், பீச் ரோடு, என்.ஜி.ஓ., நகரில் வசித்து வரும் அவரது மூத்த மகன் ஜெரால்டு, நேற்று முன்தினம் இரவு தனது தந்தை வீட்டின் வராண்டாவில் பாதுகாப்பிற்காக படுத்திருந்தார். நேற்று காலை வேலைக்கார பெண் வந்தபோது, வீட்டின் பின்னால் இருந்த ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு திடுக்கிட்டு, ஜெரால்டிடம் கூறினார். அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் அறை முழுவதும் சிதறிக் கிடந்தன. அதிர்ச்சியடைந்த ஜெரால்டு தனது தந்தைக்கு போனில் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறினார். அதற்கு அவர், பீரோவில் நகைகளை வைக்கவில்லை என்றும், பணம் 20 ஆயிரம் ரூபாய் மட்டும் வைத்திருந்ததாகவும், மற்ற நகைகளை வீட்டில் ஆங்காங்கே மறைத்து வைத்திருப்பதாகக் கூறினார். அவர் கூறிய இடங்களில் தேடிப் பார்த்தபோது, நகைகள் மட்டும் இருந்தது. பீரோவில் வைத்திருந்த பணம் 20 ஆயிரம் மட்டும் திருடு போயிருப்பது தெரிய வந்தது. தகவலறிந்த, கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின் றனர்.