கடலூர்: கடலூர், சில்வர் பீச்சில் உள்ள புறக்காவல் நிலையத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. கடலூர், தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு வரும் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களின் பாதுகாப்பிற்காக அப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. கடந்த 2004ல் ஏற்பட்ட சுனாமியின் போது சேதமடைந்த இந்த புறக்காவல் நிலையத்தை ராஜஸ்தான் அரசு, கட்டிக் கொடுத்தது. நகராட்சி நிர்வாகத்திற்குச் சொந்தமான இந்த கட்டடத்திற்கான மின் கட்டணத்தை நகராட்சி நிர்வாகமே செலுத்தி வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால், மின் வாரிய அதிகாரிகள், புறக்காவல் நிலையத்தின் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால், தண்ணீர் வசதி கூட இல்லாததால், போலீசார் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மேலும், மாலை 6:00 மணிக்கு மேல் அங்கு பணியில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பீச்சுக்கு வரும் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதுகுறித்து நகராட்சி கமிஷனரிடம் கேட்டதற்கு, "எங்களுக்குச் சொந்தமான கட்டடம். புறக்காவல் நிலையத்திற்காக போலீஸ் துறையில் ஒப்படைத்து விட்டோம். அதனால், கட்டடத்தை யார், பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் தான் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இதுகுறித்து போலீஸ் துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது' என்றார்.