விருத்தாசலம்:விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் ஆன்லைன் டிஸ்பிளே அமைக்கப்படும் என இயக்குனர் அறிவித்து பல மதங்களாகியும் இன்னும் அமைக்கப்படாததால் விவசாயிகள் அவதியடைகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட 10 மார்க்கெட் கமிட்டிகள் உள்ளன. அனைத்து நாள்களிலும், அனைத்து வேளாண் பொருட்களும் விற்பனைக்கு வரும் மாவட்டத்தின் பெரிய மார்க்கெட் கமிட்டி விருத்தாசலம்.
இந்த கமிட்டியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் அணில்மேஷ்ராம் விருத்தாசலம் கமிட்டியை ஆய்வு செய்தார். அப்போது, தமிழகத்திலுள்ள கமிட்டிகளின் கொள்முதல் விலையை விவசாயிகள் அறிந்துகொள்ள விரைவில் ஆன்லைன் டிஜிட்டல் டிஸ்பிளே அமைக்க உத்தரவிட்டார்.
ஆனால், இது போன்ற சீசன் நாட்களில் பிற மார்க்கெட் கமிட்டி விலை நிலவரங்களை அறிந்து பயன்பெறும் வசதி இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதற்கு அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், தற்போது விவசாயிகள் பிற கமிட்டிகளின் விலையைக் அறிந்து கொள்வதைக் காட்டிலும், தங்கள் விலை நிலவரங்களை அறிந்து கொள்ளவே அலுவலர்கள் கையால் எழுதி வந்து ஒட்டும் வரை கமிட்டியின் சுவர்களையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்காக வெகுநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது' என்றார்.