கோவை:கோவையில், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்களின், பாதுகாப்பு வசதிகளை கருத்தில் கொண்டு, மாவட்டம் முழுவதும், முழு நேர "மகளிர் மட்டும்' பஸ்கள் அதிகளவு இயக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பெண்களிடம் பரவலாக எழுந்துள்ளது.
டில்லியில் மருத்துவ மாணவியின் கற்பழிப்பு சம்பவத்தை அடுத்து, நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாண்டிச்சேரியில், பஸ்களில் "கேமரா' பொருத்தப்பட்டும், பள்ளி, கல்லூரி மாணவிகளின் உடைகளுக்கு கட்டுப்பாடு விதித்தும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம் முழுவதும், அரசு, மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர்.
கலை, அறிவியல், தொழில்நுட்பம், ஆசிரியர் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர்.
இதில், 60 சதவீத மாணவியர் பஸ்களில்தான் பயணிக்கின்றனர். இதுபோல, பன்னாட்டு நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் உள்பட பலதரப்பட்ட பெண்களும் பஸ்களில் பயணிக்கின்றனர்.
சென்னையில், பெண்களுக்காக முழு நேர "லேடீஸ் ஸ்பெஷல்' பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், "லோக்கல்' ரயில்களில், பெண்களுக்கென தனியாக பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
கோவையில் அதுபோன்ற "லோக்கல்' ரயில்கள் இல்லாததால், பெண்களின் பாதுகாப்பு வசதிகளை கருத்தில்கொண்டு, அதிக அளவிலான
"லேடீஸ் ஸ்பெஷல்' பஸ்களை இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பெண்களிடம் ஏற்பட்டுள்ளது.
அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவி ராதிகா கூறுகையில்,
""கோவையில், லேடீஸ் ஸ்பெஷல் பஸ்கள் அதிகம் இயக்க வேண்டும் என்பது எங்கள் சங்கத்தின் நீண்ட கால கோரிக்கை ஆகும்.
இவ்வளவு பெரிய கோவை நகரில், இரண்டு பஸ்களை, காலை மற்றும் மாலையில் ஒரு முறை மட்டும் இயக்குவதால், யாருக்கும் எந்த பயனும் இல்லை.
பஸ்களின் "கலெக்ஷனை' மட்டும் கவனம் கொள்ளாமல், பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து பஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
பள்ளி, கல்லூரி, அலுவலக பெண்களின் வசதிக்காக மாவட்டம் முழுவதும், முழு நேர "லேடீஸ் ஸ்பெஷல்' பஸ்கள் இயக்கப்பட வேண்டும்'' என்றார்.
இந்நிலையில், ஏற்கனவே பெண்களின் வசதிக்காக இயக்கப்பட்ட ஐந்து "லேடீஸ் ஸ்பெஷல்' பஸ்களில் மூன்று பஸ்கள், போதிய வரவேற்பு கிடைக்காமல், இயக்கப்படாமல் உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
கோவையில் தடம் எண் 2 (பேரூர் - பாலிடெக்னிக்), எஸ் 21ஏ (பெரிய
நாயக்கன்பாளையம்- பீளமேடு) , 5(சிவானந்தா காலனி - சிவானந்தா
காலனி), 7( காந்தி பார்க் - காந்தி பார்க்), 70 (காந்தி
புரம் - மருதமலை) ஆகிய வழிதடங்களில் ஐந்து "லேடீஸ் ஸ்பெஷல்' பஸ்கள் இயக்கப்பட்டன.
இதில் காலை மற்றும் மாலை நேரத்தில் இயக்கப்படும் தடம் எண் எஸ்21ஏ மற்றும் காலையில் மட்டும் இயக்கப்படும் தடம் எண் 2 ஆகியவற்றில் மட்டும் ஓரளவு கூட்டம் வருகிறது. மற்ற மூன்று பஸ்களுக்கு பெண்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால், இயக்கப்படுவதில்லை.
பெண்களுக்கென தனியாக பஸ்கள் இயக்கப்பட்டாலும், பொது பஸ்களில்தான், அதிகளவு பெண்கள் பயணிக்கின்றனர். ஒரு சில கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து, குறிப்பிட்ட பகுதிகளுக்கு அதிக பெண்கள் பயணம் செய்ய வேண்டியிருந்து, பஸ்கள் இயக்க கோரினால், அவ்வழியே பஸ்களை இயக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
தற்போது பீக் ஹவர்ஸ்களில், ஆண்களுக்கு இணையாக பெண்களும், படிக்கட்டு பயணம் மேற்கொள்கின்றனர்.
எதிர்பாராவிதமாக, டிரைவர் சடன் பிரேக் போட்டால், பெண்கள் கீழே தவறி விழும் வாய்ப்பு அதிகளவு உள்ளது.
மாவட்டத்தில் அவிநாசி, சத்தி, திருச்சி, மருதமலை மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரோடுகளில் அதிகளவு பள்ளி, கல்லூரிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் செயல்படுகின்றன.
மேற்குறிப்பிட்ட பிரச்னையை தவிர்க்க, இவ்வழிகளில், பெண்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அதிகளவு "லேடீஸ் ஸ்பெஷல்' பஸ்களை இயக்க வேண்டும்.
மேலும், மாவட்டம் முழுவதையும் இணைக்கும் வகையில், முழு நேர "லேடீஸ் ஸ்பெஷல்' பஸ்கள் இயக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு விமானம் அல்லது ஒரு ஹெலிகாப்ட்டர் தயார் நிலையில் ஒரு அரசியல்வாதிக்கு வைக்க முடியும் - ஆனால் ஏழை பெண்களுக்கு பஸ் விட முடியாதா? யார் அப்பன் வீட்டு சொத்து ? சுயநலவாதிகள் பலர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக தேர்வாகும் போது சுயநலவாதிகள் பலர் பல பத்திரிகைகள் நடத்தும் போது இது போல் அநியாயங்கள் நடக்கும். ஒரு முறை சட்டமன்ற உறுப்பினர் ஆன ஒருவன் திடீரென்று எப்படி கார் வாங்குகிறான்? ஒரு முறை சட்டமன்ற உறுப்பினர் ஆன ஒருவன் ஓட்டு வீடு எப்படி பங்களா ஆனது ? கோயம்புத்தூர் இலே இதை பார்க்கலாம் - பொள்ளாச்சி இலே இதை பார்க்கலாம். வாய்ப்புகள் இழந்த மக்கள் கோபம்கொண்டு இதையெல்லாம் இவர்களிடமிருந்து பறித்தால் இது போல் அநியாயங்கள் நடக்காது .