வடலூர்:குறிஞ்சிப்பாடியில் சிலிண்டர் வினியோகம் முறையாக நடைபெறாதாதால், காஸ் சிலிண்டர் வாங்க பொதுமக்கள், குறிஞ்சிப்பாடி எல்லையில் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
குறிஞ்சிப்பாடியைச் சுற்றியுள்ள பகுதியில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் காஸ் சிலிண்டர்களை 8,000க்கும் மேற்பட்டோர் உபயோகித்து வருகின்றனர். இந்த சிலிண்டர்களை நெய்வேலியில் உள்ள வெங்கடேஸ்வரா ஏஜென்சி வினியோகம் செய்து வருகிறது.
குறிஞ்சிப்பாடியில் தனியாக குடோன், அலுவலகம் இல்லாத நிலையில் நெய்வேலியில் இருந்து வாகனம் முலம் எடுத்து வந்து வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த 15 நாட்களாக சிலிண்டர் முறையாக கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
குறிஞ்சிப்பாடியில் பல பகுதிகளில் காஸ் சிலிண்டர் வினியோகம் தடைபட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளில் காத்திருந்து சிலிண்டர் வரததால், தங்களுக்குத் தேவையான சிலிண்டரை பெற குறிஞ்சிப்பாடி எல்லையான அண்ணா நகரில் சிலிண்டர் வாகனத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். காஸ் சிலிண்டர் வாகனம் வருமா, வராதா எனக் கூடத் தெரியாமல் காலை 6:00 மணி முதல் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
காலை 10:00 மணிக்கு மேல் ஏஜென்சி அலுவலகம் திறந்து தகவல் தெரிந்த பின் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர்.
இது குறித்து ஏஜென்சியில் கேட்டபோது, புதுச்சேரியில் காஸ் நிரப்பும் இடத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் புதுச்சேரியில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் அதிகாரிகள் கூட்டம் நடக்க இருப்பதால் புதுச்சேரியில் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க நெய்வேலி பிற பகுதிக்கு வழங்கப்படும் சிலிண்டர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது தான் காரணம் என தெரிவித்தனர்.