திருப்பூர்: ""இயற்கை நூல் இழையால் தயாரிக்கப்படும் ஆடைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம், திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும்,'' என இத்தாலிய தொழில் துறை வர்த்தக கமிட்டி திட்ட மேலாளர் விக்டோரியோ பேசினார்.புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு நாடுகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களை உற்பத்தி செய்வதிலும், சந்தைப்படுத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி, இயற்கை பருத்தியை உற்பத்தி செய்து, ஆடைகளை கொள்முதல் செய்யும் "பேர் டிரேடு சப்ளை' திட்டத்தை, இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய மூன்று நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக, இந்தாலி நாட்டு தொழில்துறை வர்த்தக கமிட்டி, இந்தியாவுடன் இணைந்து, மூன்று ஆண்டுகளுக்கு முன், "இந்தோ-இத்தாலியன் சேம்பர்' அமைப்பை ஏற்படுத்தியது. இந்த அமைப்பு, இந்தியாவில் மகாராஷ்டிரா மாநில விவசாயிகள், நூல் மில் உரிமையாளர்களுக்கு இயற்கை முறையில் பருத்தி விளைவிப்பது குறித்து பயிற்சி அளித்தது. இத்திட்டம் மூலம், மூன்று ஆண்டுகளில், 170 விவசாயிகளால் 30 டன் இயற்கை பருத்தி உற்பத்தி செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் உள்ள மூன்று பிரபல மில்கள், இயற்கை பருத்தியை கொள்முதல் செய்து, நூல் உற்பத்தி செய்தன.
இயற்கை நூல் இழைகள் மூலம் ஆடை தயாரித்து, திருப்பூரில் உள்ள நான்கு பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள், பின்னல், ஆயத்த ஆடை தயாரித்து, இத்தாலிக்கு ஏற்றுமதி செய்தன. இத்திட்டம் மூலம், முதல்கட்டமாக மூன்று லட்சம் யூரோ மதிப்பிலான இயற்கை நூல் இழையில் தயாரான ஆயத்த ஆடைகள், திருப்பூரில் இருந்து இத்தாலிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், "இந்தோ-இத்தாலியன் சேம்பர்' அமைப்பு சார்பில், இயற்கை நூல் இழையில் ஆடைகள் தயாரித்து, இத்தாலிக்கு ஏற்றுமதி செய்வது குறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூர் வேலன் ஓட்டலில் நடந்தது. அதில், இத்தாலி நாட்டு தொழில்துறை வர்த்தக கமிட்டி திட்ட மேலாளர் விட்டோரியோ பேசியதாவது:
ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி விளைவிக்கப்படும் பருத்தியால், சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, செயற்கை இழைகளால் ஆன ஆடைகளால் உடலுக்கும் தீங்கு ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத ஆடைகளுக்கு இத்தாலிய சந்தையில் அமோக வரவேற்பு உள்ளது. ஆனால், இயற்கை பருத்தியில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் கிடைப்பது அரிதாகவே உள்ளது.
அதனால், இத்தாலி, இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து, "பேர் டிரேடு சப்ளை' திட்டம் துவக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, இந்தியாவில் இயற்கை பருத்தி விளைவிக்கப்பட்டு, ஆடை தயாரித்து, இத்தாலிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பருத்தி, நூல் இழைகள் மகாராஷ்டிராவில் தயாரிக்கப்பட்ட போதும், பின்னலாடை தயாரிப்பில், திருப்பூர் முன்னிலையில் உள்ளதால், இங்குள்ள நிறுவனங்களை தேர்வு செய்து ஆடைகள் தயாரித்து, ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
திட்டம் துவங்கப்பட்டது முதல் இதுவரை, மூன்று ஆண்டுகளில், மூன்று லட்சம் யூரோ மதிப்பிலான இயற்கை ஆடைகள் இத்தாலிக்கு அனுப்பப்பட்டுள்ளன. தொடர்ந்து, இந்தியாவில் இருந்து, இலங்கை, நேபாளம் நாடுகளுக்கு இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி, நூல் இழைகள்; திருப்பூரில் இருந்து, இத்தாலிக்கு அதிகளவில் இயற்கை ஆடை ரகங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம். இயற்கை ஆடை தயாரிப்பு மூலம், திருப்பூரின் பின்னலாடை வர்த்தகம் வளர்ச்சி அடைவதுடன், உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.திருப்பூர் டெக்ஸ்டைல் கமிட்டி இணை இயக்குனர் திலக், இந்தோ-இத்தாலிய வர்த்தக தொடர்பு அதிகாரி ஆன்ட்ரியா, இந்திய "பேர் டிரேட் சப்ளை' திட்ட இயக்குனர் பத்மினி, நேபாள நாட்டு "பேர் டிரேட் சப்ளை' திட்ட இயக்குனர் கத்ஜி உட்பட பலர் பங்கேற்றனர்.