சென்னை:""இலங்கை பங்கேற்கும் ஆசிய தடகள போட்டிகளை, தமிழகத்தில் நடத்துவதை, அரசு ஒரு போதும் ஏற்காது. எனவே, இப்போட்டிகள் தமிழக அரசால் நடத்தப்பட மாட்டாது,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.
இதுவரை, டில்லியில் மட்டுமே நடத்தப்பட்டு வரும், ஆசிய தடகளப் போட்டியை, தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னையில் நடத்துவது என, முதல்வர் ஜெயலலிதா கடந்தாண்டு அறிவித்தார்.
சென்னையில், போட்டி களை நடத்துவதற்கு, நேரு விளையாட்டரங்கமும், வீரர்கள் தங்குவதற்கான விளையாட்டு கிராமம் அமைப்பதற்கு, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தின் ஒரு பகுதியும் தேர்வு செய்யப்பட்டன. இப்போட்டிகளுக்காக, 40 கோடி ரூபாய்
நிதியும் ஒதுக்கப்பட்டது.
போட்டிகள், ஜூன் மாதம், 2ம் தேதிமுதல், 7ம் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், இலங்கை வீரர்களும் இந்த போட்டிகளில் கலந்து கொள்வர் என்பதால், போட்டிகளை நடத்தமுடியாது என முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில், சர்வதேச போர் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, இலங்கைத் தமிழர்கள் இரக்கமற்ற வகையில், சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என, பிரகடனப் படுத்த வேண்டும்.
இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது மட்டுமின்றி, இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகம் உட்பட இந்தியாவில் எங்கும், பயிற்சியளிக்கக் கூடாது என்று பிரதமருக்கு பல கடிதங்கள்
எழுதினேன். இலங்கையைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள், நட்பு அடிப்படையிலான போட்டியில் கலந்து கொள்ள, சென்னை
வந்தனர்.
அவர்களை தமிழகம் வர அனுமதியளித்த, மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்ததுடன், இலங்கை கால்பந்து வீரர்களுக்காக எந்த போட்டியும் தமிழகத்தில் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டேன்.
இருப்பினும், "செவிடன் காதில் ஊதிய சங்கு போல்' தமிழக கோரிக்கைகள் அனைத்தும், மத்திய அரசில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரபாகரன் மகன் என்ற ஒரே காரணத்திற்காக, 12 வயது சிறுவன் பாலச்சந்திரனை, இலங்கை ராணுவம் சுட்டுத் தள்ளியது, மாபெரும் போர்க்குற்றம்.
இலங்கை அரசின், மனிதாபிமானமற்ற செயல்களை, கருத்தில் கொண்டு, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். போர்க்குற்றங்களை நிகழ்த்தியவர்களை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி, தண்டனை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை அரசு, அங்குவாழும் தமிழர்களுக்கு எதிராக, தொடர்ந்து செயல்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, வரும் ஜூலை மாதம் சென்னையில் நடக்க இருக்கும், 20 வது ஆசிய தடகள போட்டிகளில், இலங்கை வீரர்கள் பங்கேற்றால், அது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமையும்.
இதனால், இலங்கை வீரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றும், இதை இலங்கை அரசுக்கு உரிய முறையில் தெரிவிக்கும்படியும், சிங்கப்பூரில் உள்ள, ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலருக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலரால், கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.
இதன் மீதான நடவடிக்கை குறித்து, தமிழக அரசிற்கு தெரிவிக்குமாறும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இது நாள் வரை, ஆசிய தடகள கழகத்திடம் இருந்து எவ்வித
பதிலும், தமிழக அரசிற்கு கிடைக்கப்படவில்லை.
இந்நிலையில், இலங்கை பங்கேற்கும் ஆசிய தடகள போட்டிகளை, தமிழகத்தில் நடத்துவதை, அரசு ஒரு போதும் ஏற்காது; தமிழர்களும் ஏற்கமாட்டார்கள். எனவே, இந்தாண்டு ஜூலை மாதம் நடக்கஉள்ள, ஆசிய தடகளப் போட்டிகள், தமிழக
அரசால் நடத்தப்பட
மாட்டாது.
இப்போட்டிகளை தமிழகத்தில் நடத்த இயலாது என்பதால், வேறு எங்கேனும் நடத்திக் கொள்ளுமாறு, ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலர், தமிழக அரசால் கேட்டுக் கொள்ளப்படுவார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.