சென்னை:பல் மருத்துவக் கல்லூரியில், உயர் படிப்புக்கு அனுமதி பெற, லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், பங்காரு அடிகளின் மனைவி மற்றும் மகன்கள், முன் ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்துள்ளனர். விசாரணை, 26ம் தேதிக்கு
தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில், உயர் படிப்புக்கு அனுமதி பெற்றுத் தருவதற்காக, பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினர், டாக்டர் முருகேசன், 25 லட்சம் ரூபாய், லஞ்சம் பெற்றதாக, கைது செய்யப்பட்டார்.
கல்லூரி நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் பல் மருத்துவ கவுன்சிலின் தமிழக தலைவர் குணசீலன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தற்போது, இவர்கள் ஜாமினில் வெளியே உள்ளனர்.
இந்நிலையில், பங்காரு
அடிகளின் மனைவி லட்சுமி, முன் ஜாமின் கோரி, ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:
இந்த வழக்கு தொடர்பாக, சில கேள்விகளுக்கு பதிலளிக்க, கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி என்கிற முறையில், கடந்த, 15ம் தேதி, ஆஜராகும்படி, கேட்டு கொள்ளப்பட்டது. கல்லூரியின், தலைமை நிர்வாக அதிகாரியாக, நான் இல்லை.
ஆதிபராசக்தி மருத்துவ கல்வி அறக்கட்டளையின், நிர்வாக அறங்காவலராக, என்னை
நியமித்து, கடந்த ஆண்டு,
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அறக்கட்டளையை நிர்வகிக்கும் அதிகாரம் உள்ளது. கல்லூரியின் செயல்பாடுகளில், எனக்கு சம்பந்தமில்லை. எனக்கு, இதய நோய் உள்ளது. உடல் நலம் சரியில்லை. முன் ஜாமின் வழங்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோன்று, பங்காரு அடிகளாரின் மகன்கள் செந்தில்குமார், அன்பழகன் ஆகியோரும், முன் ஜாமின் கோரி, மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இம்மனுக்கள், நீதிபதி ஆர்.சுப்பையா முன், நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை, வரும் , 26ம் தேதிக்கு, நீதிபதி
தள்ளிவைத்தார்.
லட்சுமியின் முன் ஜாமின் மனுவுக்கு, சி.பி.ஐ., சிறப்பு வழக்கறிஞர் என்.சந்திரசேகரன் தாக்கல் செய்த பதில் மனு:
கல்லூரியின் நிர்வாக இயக்குனர், ஸ்ரீலேகாவிடம் விசாரணை நடத்திய போது, "கல்லூரிகளின் நிதி சம்பந்த விஷயங்களை, தலைமை நிர்வாக அதிகாரியும், அறங்காவலர்களும் தான் மேற்கொள்கின்றனர்' என, தெரிவித்துள்ளார்.
மேலும், 25 லட்சம் ரூபாய் வழங்கியது தொடர்பாக, நிர்வாக அறங்காவலரை, விசாரிக்க வேண்டியுள்ளது. அப்போது தான், லட்சுமியின் நிலை பற்றி
தீர்மானிக்க முடியும்.
இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.