திருப்பூர்:திருப்பூர், அங்கேரிபாளையம் ரோடு வெங்கமேட்டில் உள்ள "டாஸ்மாக்' மதுக்கடையை வேறிடத்துக்கு மாற்ற வேண்டுமென, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கடந்த ஜன., மாதம் கோரிக்கை விடுத்தனர். கலால் துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், டி.ஆர்.ஓ.,வை நேரில் சந்தித்து முறையிட்டனர். அதன்பின்பும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள், நேற்று, கடைகள், பனியன் நிறுவனங்களை அடைத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு வெங்கமேட்டில் "டாஸ்மாக்' மதுக்கடை (எண்: 3983) செயல்பட்டு வந்தது. அக்கடை அருகே, அரசு மேல்நிலைப்பள்ளி, ரேஷன் கடை, கோவில், குடியிருப்பு பகுதிகள் உள்ளன. மது அருந்த வருபவர்கள், ரோட்டில் அமர்ந்து மதுபானம் குடிப்பதும், தலைக்கேறிய போதையில் ரோட்டில் சண்டை போடுதல், ரோட்டில் நின்று தகாத வார்த்தைகளில் பேசுதல் போன்ற சம்பவத்தால், அவ்வழியை கடக்க முடியாமல், மாணவர் கள், பெண்கள் பாதிக்கப்பட்டனர். இரவு நேரங்களில், அவ்வழியை கடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்பட்டனர்.அதனால், "டாஸ்மாக்' மதுக்கடை நடத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக, வேறிடத்துக்கு மாற்றக்கோரியும், அப்பகுதியை சேர்ந்த அனைத்து கட்சியினர் தலைமையில் பெண்கள் உட்பட 250க்கும் மேற்பட்டோர் கடந்த ஜன., 10ம் தேதி மதுக்கடையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சமாதானம் செய்த கலால் துறை அதிகாரிகள், ஒரு வாரத்தில் கடையை வேறிடத்துக்கு மாற்றுவதாக உறுதியளித்தனர். அதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.ஒரு வாரத்துக்கு பிறகும் கடையை அகற்றாததால், அதே மாதம் 30ம் தேதி, டி.ஆர்.ஓ., கஜலட்சுமியை, அனைத்து கட்சியினர் தலைமையில் பொதுமக்கள் சந்தித்து மனு கொடுத்தனர். அவரும், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். ஒரு மாதத்துக்கு மேலாகியும், மதுக்கடை அகற்றப்படவில்லை.கடைகள் மூடல்மதுக்கடையை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அங்கேரிபாளையம், அவிநாசி கவுண்டம்பாளையம், வெங்கமேடு, கோபால் நகர் பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டன. பனியன், டையிங் நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.அனைத்து கட்சியினர், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர், "டாஸ்மாக்' மதுக்கடையை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மறியலில் ஈடுபட்டோரிடம், வடக்கு டி.எஸ்.பி. மாரியப்பன் சமரசம் பேசினார். "சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து, கடையை மாற்றுவதாக உறுதி கூறி, உடனடியாக மூட வேண்டும். அதுவரை சாலை மறியலை கைவிட மாட்டோம்,' என்று பொதுமக்கள் உறுதிபட கூறினர். போலீசார் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட கலால் உதவி ஆணையர் பழனியம்மாள், தாசில்தார் ரஹமத்துல்லா ஆகியோர் வந்தனர். "இனி, கடையை திறக்க மாட்டோம்; வேறிடத் துக்கு மாற்றப்படும்,' என உறுதி கூறினர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். காலை 9.30 மணிக்கு துவங்கிய சாலை மறியல் போராட்டம் 11.30 மணிக்கு முடிந்தது. அதன்பின், கடைகள் திறக்கப்பட்டன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.