புதுச்சேரி:"ஊசுட்டேரி நீரைப் பயன்படுத்தி நகர குடிநீர் வழங்கலை மேம்படுத்தும் பணி, ரூ.47.40 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்' என, கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் இக்பால்சிங் நேற்று உரையாற்றினார். உரை விபரம்:
புதுச்சேரியைக் கதிரொளி நகரமாக (சோலார் சிட்டி) மாற்றிட, புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகம் கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளது. பல, புதுப்பிக்கவல்ல எரிசக்தி திட்டங்களைத் தயாரிக்க, செயல் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.2.50 கோடி அளிக்க உள்ளது.
மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு என, இரண்டு புதிய சுற்றுலாத் திட்டங்களை கண்டறிந்துள்ளது. காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் உள்ள சார் பதிவு அலுவலகங்களிலும், மின்னணு முத்திரையிடும் திட்டம் இம்மாத இறுதிக்குள் செயல்படுத்தப்படும்.
மொத்தமுள்ள 514 ரேஷன் கடைகளில், 129 கடைகளின் மூலம் பயன்பெறும் பயனாளிகளுக்கு "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்குள், மீதமுள்ள பயனாளிகளுக்கும் "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும். இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு மாணவர்களை சேர்க்க, இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது.
தானே புயல் பாதிப்பின் அனுபவத்தினால், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கும் பகுதிகளைக் கண்டறியும் பொருட்டு, நிபுணர் உதவியுடன் திட்டம் உருவாக்கப்பட உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, பெண் காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், தற்போதுள்ள நியமன விதிகளில் திருத்தம் செய்து, 20 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெண் காவலர்களைத் தேர்வு செய்ய, சிறப்புச் சேர்க்கை முகாம் நடத்தப்படும்.
அரியாங்குப்பம், நோணாங்குப்பம், தவளக்குப்பத்தில், பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு, தற்போது பயன்படுத்தாமல் உள்ள பழைய பாலங்களை, உலக வங்கி நிதியுதவியுடன் சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.
ஊசுட்டேரி நீரைப் பயன்படுத்தி, நகர குடிநீர் வழங்கலை மேம்படுத்தும் பணி, ரூ.47.40 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில், 2013 -14ம் ஆண்டுக்கான திட்டத்தைத் தயாரிப்பதில் அரசு கவனம் செலுத்தும். புதுச்சேரியின் பிற பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், பொருளாதாரத்தின் முதன்மை துறை மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். திட்ட செலவினங்களில் மூலதன செலவுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.