கோவை:கோவை சாய்பாபா காலனி 12 வது வார்டில் உள்ளது அண்ணாநகர். இங்கு 300க்கும் அதிக வீடுகள் உள்ளன. இப்பகுதியில் குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் சரியாக வருவதில்லை. துப்புரவுப் பணியாளர்கள் வருவதில்லை. பாதாள சாக்கடை பணி முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அதற்காகத் தோண்டிய குழிகள் இன்னும் மூடப்படவில்லை. ரோட்டு ஓரங்களில் குவிக்கப்பட்ட மண் இன்னும் அகற்றப்படவில்லை. வீதிகள் முழுவதும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
முன்னாள் மேயர் வெங்கடாசலத்தின் மகள் காயத்திரிதான் இந்த வார்டு கவுன்சிலர். இவர் அண்ணாநகர் பகுதிக்கு எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
பொது மக்கள் பிரச்னைகளை சொல்ல நேரில் சென்றால் அலுவலகத்தில் இருப்பதில்லை. போன் செய்தால் போனை எடுப்பதில்லை; தப்பி தவறி எடுத்து விட்டால்
""நான் டெல்லியில ஒரு கான்பிரன்ஸ்ல இருக்கறேன் போனை வைங்க'' என்று கடிந்து கொள்கிறாராம்.
""அவர் இந்த "ஏரியா'வுக்கு கவுன்சிலர் காயத்திரி "விசிட்' செய்து ஒர் ஆண்டுக்கு மேல் ஆகிறது. "கவுன்சிலரைக் காணவில்லை' என்று "போஸ்டர்' அடித்து ஒட்டப் போகிறோம்'' என, சரமாரியாக குற்றச்சாட்டுகள் அடுக்குகின்றனர் அண்ணாநகர் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள்.
ஆனால், அண்ணாநகருக்கு அருகில் உள்ள "டோபி கானா' பகுதிவாசிகள்,
""எங்களுக்கு இங்க எந்த பிரச்னையும் இல்லீங்க. எங்களுக்கு பட்டா குடுத்ததும் அவங்கதான்; எங்க தேவைகளை உடனுக்கு உடன் கவனிக்குறாங்க. எங்களுக்கு தொழில் செய்ய வசதி செஞ்சு கொடுத்ததும் அந்த கவுன்சிலரம்மாதான்'' என்கிறனர்.
அண்ணாநகர் குடியிருப்போர் நல சங்க செயலாளர் அண்ணாதுரை கூறும் போது,
""இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர மக்கள், நாங்கள் அடிப்படை பிரச்னைகளுக்காக போராட வேண்டி உள்ளது. எங்கள் பிரச்னைகளை வார்டு கவுன்சிலர் கண்டு கொள்வதில்லை. குடிக்கத் தண்ணீர் கூட இல்லை; இது குறித்து பல முறை புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதே பகுதியை சேர்ந்த சம்பத்குமார் கூறும் போது...
அரசியல் காழ்ப்புணர்சியில் இதை சொல்லவில்லை; உண்மையைதான் சொல்கிறோம். அடுத்த முறை இதே மக்களிடம்தான் ஓட்டு கேட்டு வரவேண்டும் என்பதை கவுன்சிலர் காயத்திரி மறந்துவிட்டார், என்றார்.
பணிகள் செய்ய நான் தயார்
காயத்திரி 12 வது வார்டு காங்; கவுன்சிலர் கூறியதாவது:
என்னுடைய வார்டுக்கு எது தேவை என்று கேட்டாலும் மேயர் உடனே செய்து தருகிறார். அப்படி இருக்க, அண்ணாநகர் மக்களின் தேவைகளை செய்து தருவதில் எந்த சிக்கலும் எனக்கு இல்லை. அங்கு உள்ள சிலரின் தூண்டுதலின் பேரில் சிலர் தவறாக சொல்லி இருக்கிறார்கள்; அது உண்மையல்ல.
என் வார்டில் 65 வீதிகள் உள்ளன. இதில், பொரும்பான்மை மக்கள் என்னை குறை சொல்ல மாட்டார்கள். அந்த அளவுக்கு திட்டப்பணிகளை நிறைவாக செய்துள்ளேன்; இன்னும் செய்வேன். அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றாலும், அவர்களிடம் பேசிப் பார்க்கிறேன்; அவர்களின் தேவைகளை நிறைவேற்ற ஆவன செய்கிறேன்.