திருப்பூர்:இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை கல்லூரி மாணவர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்; ஐ.நா., சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்; பொது வாக்கெடுப்பு நடத்தி, தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த 80க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர், காமராஜ் ரோட்டில் நின்று கோஷமிட்டனர். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், மாணவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர்.
அவர்களிடம், "கலெக்டரை சந்திக்கும் வரை கலெக்டர் அலுவலகத்தை விட்டு நகர மாட்டோம்' என்று கூறிய மாணவர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில், காலை 11.00 முதல் மதியம் 1.30 மணி வரை காத்திருந்தனர்; பகல் 1.30 மணிக்கு, கலெக்டர் கோவிந்தராஜ், மாணவர்களை அழைத்து பேச்சு நடத்தினார். தங்களது கோரிக்கைகளை தெரிவித்ததுடன், நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தின்போது, கலெக்டர் நேரில் வந்து பேச்சு நடத்தாததற்கு மாணவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
கலெக்டர் பதிலளிக்கையில்,""மாணவர்களின் போராட்ட நிலவரம் அனைத்தும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பணி இருந்ததால், நேரில் வர இயலவில்லை. அதற்காக, ஆர்.டி.ஓ., மற்றும் எஸ்.பி., அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவர்கள் வலியுறுத்தும் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மாவட்ட நிர்வாக பணிகளுக்கு மாணவர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்,'' என்றார்.
அதன்பின், சமாதானமடைந்த மாணவர்கள், கலைந்து சென்றனர்.
77 பேர் கைது
இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியும், ஐந்து ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டு, இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்காத கருணாநிதியை கண்டித்தும், பாரத் சேனா அமைப்பினர், திருப்பூரில் நேற்று ரயில்வே ஸ்டேஷன் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் பாலு, மாநகர தலைவர் கணேஷ், மாநில செயலாளர் குமரேச பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பின், கட்சிக் கொடிகளையும், கோரிக்கை குறித்த பேனர்களையும் ஏந்திக்கொண்டு ரயில் மறியலில் ஈடுபட சென்றனர். அவர்களை ஸ்டேஷன் நுழைவாயிலி
லேயே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைதான 77 பேர், அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
கூடுதல் பாதுகாப்பு
கடந்த இரு நாட்களாக, ரயில் மறியல் போராட்டம் நடந்து வருவதால், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இரண்டு நுழைவாயில்கள் மற்றும் பிளாட்பாரத்துக்குள் நுழையும் வகையிலான பிற பாதைகளிலும் நேற்று போலீசார் நிறுத்தப்பட்டனர். பிரதான நுழைவாயிலில், பேரிகார்டுகளால் அடைப்பு ஏற்படுத்தப்பட்டு, ஒரு நபர் மட்டும் செல்லும் வகையில், வழி விடப்பட்டிருந்தது. ரயிலுக்குச் செல்லும் பயணிகள் என உறுதிப்படுத்திய பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
உண்ணாவிரதம்
அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. ஈரம் அமைப்பு தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். பாரதிய கிஸான் சங்க மாவட்ட தலைவர் வேலுசாமி துவக்கி வைத்தார். தே.மு.தி.க., பொதுக்குழு உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி, பாலசுந்தரம் உட்பட பலர் பேசினர். இதேபோல், திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலும், தமிழீழ விடுதலைக்கான பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பொறுப்பாளர் அருள் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சேகர், புழவேந்தன் பேசினர். 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கோர்ட் புறக்கணிப்பு
வக்கீல்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம், திருப்பூரில் நடந்தது. திருப்பூர் பார் அசோசியேன் தலைவர் பாலகுமார், செயலாளர் சண்முகசுந்தரம், திருப்பூர் அட்வகேட்ஸ் அசோசியேசன் தலைவர் சிவப்பிரகாசம், செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.
இனப்படுகொலை நடத்திய ராஜபக்ஷே மீது சர்வதேச அளவிலான நீதி விசாரணை நடத்த வேண்டும். இலங்கை தமிழர் மறுவாழ்வுக்கு மத்திய அரசு உடனடி
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 21 முதல் 23 வரை மூன்று நாட்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அவ்வகையில், நேற்று, திருப்பூர் மாவட்டம் முழுவதும் அனைத்து கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்குகளை, நீதிபதிகள், வேறு
நாட்களுக்கு ஒத்திவைத்தனர்.
ஆர்ப்பாட்டம்
இலங்கை தமிழர் பிரச்னையில், மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டதாக, அவிநாசியில் தி.மு.க., வக்கீல்கள் கோர்ட் நடவடிக்கையை புறக்கணித்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவிநாசி தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தி.மு.க., மாவட்ட துணை தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ராஜாராகவன், சாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை கண்டித்து கோஷமிட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.