
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி அருகே சாலையைக் கடந்த ஆண் யானை, அவ்வழியாக வந்த காரை தந்தத்தால் குத்தியும், துதிக்கையால் கண்ணாடியை உடைத்தும் சேதம் செய்தது. காரில் பயணம் செய்த கர்ப்பிணிப் பெண் உட்பட எட்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள தூனேரியைச் சேர்ந்தவர் குருசாமி(27); தேயிலைத் தொழிற்சாலையில் வேலை செய்கிறார். இவரது மனைவி கவுரி(22); நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டதால், உடனடியாக வாடகை மாருதி ஆம்னி காரில் மேட்டுப்பாளையம் மருத்துவமனைக்குப் புறப்பட்டனர்.குருசாமி, கவுரியுடன் அம்மா பூவதி, உறவினர்கள் மணி, குண்டன், கங்கையம்மாள் உட்பட எட்டு பேர் காரில் பயணம் செய்தனர். காரை தூனேரியைச் சேர்ந்த டிரைவர் சரவணன்(22) ஓட்டினார்.
கீழ் கோத்தகிரியில் அதிகாலை 4.30 மணிக்குப் புறப்பட்டனர். காலை 6.00 மணிக்கு மேட்டுப்பாளையம் - கோத்தகிரி ரோட்டில் வனக்கல்லூரி முன் கார் ரோட்டில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது பெரிய ஆண் யானை ஒன்று ரோட்டின் குறுக்கே சென்றது. டிரைவர் சரவணன் "பிரேக்' போட்டார்.கார் சத்தத்தைக் கேட்ட யானை திரும்பி வந்து தாக்கத் துவங்கியது. காரை துதிக்கையால் தூக்கியும், தத்தத்தால் குத்தியும் சேதப்படுத்தியது. முன்பக்க கண்ணாடியை துதிக்கையால் அடித்து உடைத்தது. யானையின் தாக்குதலை எதிர்பார்க்காத, காரில் இருந்த எட்டு பேரும் மரண பயத்தில் இருந்தனர். சிறிது நேரத்துக்குப் பின், யானை காட்டுக்குள் சென்று விட்டது.
கர்ப்பிணிப் பெண் உட்பட எட்டு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பாரஸ்டர் நசீர் மற்றும் வனத்துறையினர் காரில் இருந்தவர்களை தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.கார் டிரைவர் சரவணன் கூறுகையில், ""பிரசவ வலியால் அப்பெண் துடித்ததால், வேகமாக காரை ஓட்டி வந்தேன். யானையைப் பார்த்த நான் "பிரேக்' போட்டேன். கார் நின்றதும் கோபத்துடன் ஓடிவந்த யானை, கார் கண்ணாடியை உடைத்து, தந்தத்தால் குத்தியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நாங்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயர் பிழைத்தோம்,'' என்றார்.
கோத்தகிரி ரோட்டில் "வாக்கிங்' செல்ல தடை
பாரஸ்டர் நசீர் கூறுகையில், ""மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் "வாக்கிங்' சென்ற ஒருவரை, யானை தந்தத்தால் குத்தி காயப்படுத்தி உள்ளது. ஓடந்துறை பாரஸ்டர் ரவீந்திரன், காவலர் ராஜன் ஆகிய இருவரும் வனப்பகுதியில் ரோந்து சென்றபோது, ஆண் யானை இவர்களைத் துரத்தியுள்ளது.இதில் பாரஸ்டர் ரவீந்திரனுக்கு கால் முறிந்தது. இப்போது, கோத்தகிரியிலிருந்து வந்த காரை ஆண் யானை தாக்கி, சேதம் செய்துள்ளது. தனியாக சுற்றும் இந்த ஆண் யானை பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது.
தற்போது வனக்கல்லூரி வரை யானைகள் வரத்துவங்கியுள்ளன.அதனால், பாதுகாப்பு கருதி கோத்தகிரி ரோட்டில் வனக் கல்லூரி வரை "வாக்கிங்' செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓடந்துறை போலீஸ் சோதனைச் சாவடியில் இருந்து, வனத்துறை மர டெப்போ வரை மட்டும் "வாக்கிங்' செல்ல அனுமதிக்கப்படும்,'' என்றார்.
| வாசகர் கருத்து |