சென்னை : பால் கொள்முதல் விலை இரண்டு ரூபாயும், விற்பனை விலை இரண்டு ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், வரும் 1ம் தேதியிலிருந்து மாத பால் அட்டைதாரர்களுக்கு லிட்டர் 17.75 ரூபாய்க்கு விற்கப்படும்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன், மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பால்வளத் துறை அமைச்சர் மதிவாணன் ஆகியோர், தலைமைச் செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பால்வளத் துறைச் செயலர், ஆவின் நிர்வாக இயக்குனர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.பேச்சுவார்த்தை முடிவில், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் உயர்த்தி, அதாவது தற்போதைய விலை 13.54 ரூபாயிலிருந்து 15.54 ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டது. எருமைப்பால் கொள்முதல் விலை ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டு, தற்போதுள்ள 18 ரூபாயிலிருந்து 23 ரூபாயாக உற்பத்தியாளர்களுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த கொள்முதல் விலை உயர்வு, அண்ணாதுரை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வரும் செப்., 1ம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப் படுகிறது. இந்த பால் கொள்முதல் விலை உயர்வு காரணமாக, மாதாந்திர பால் அட்டை வாடிக்கையாளர்களுக்கு சமன்படுத்திய பாலின் விற்பனை விலையை, தற்போதுள்ள லிட்டர் ஒன்றுக்கு 15.75 என்பதிலிருந்து 17.75 ரூபாயாகவும், அரை லிட்டருக்கு தற்போதுள்ள 7.90 ரூபாயிலிருந்து 8.90 ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.இந்த விற்பனை விலை உயர்வு, வரும் 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும்.
இதுகுறித்து, பால் உற்பத்தியாளர் நலச் சங்கத் தலைவர் செங்கோட்டுவேல், துணைத் தலைவர் ராஜகோபால், பொதுச் செயலர் ராஜேந்திரன் கூறும் போது, ""கூட்டுறவு சங்கப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைக்கப் பட்டது. ""மேலும், பால் மற்றும் வெண்ணெய் கொள்முதலை அதே இடத்தில், அளந்து வாங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இவை பற்றி வரும் 16ம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையின் போது, பரிசீலிப்பதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர்,'' என்றனர்.
| வாசகர் கருத்து |