இன்று உலகையே அச்சுறுத்தி வரும்
பிரச்னையாக சுற்றுச்சூழல் பாதிப்பு உருவெடுத்துள்ளது.
வெப்பநிலை உயர்கிறது. மழை குறைகிறது. அண்டார்டிகா, இமயமலை
பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகுகின்றன.
கடல்மட்டம் உயர்கின்றது. இதனால் தாழ்வான பகுதிகள் கடல்
நீரில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது. சுற்றுச்சூழலை
பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.நா.,
1972ம் ஆண்டில் இருந்தே சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை
கொண்டாடி வருகிறது. பல வகைகளில் சுற்றுச்சூழல்
பாதுகாப்புக்கு நாமும் உதவ முடியும்.
கடந்த சில ஆண்டுகளாகவே சுற்றுச்சூழல் மாசுபடும் வேகம்
அதிகரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி காரணமாக மின்சார
பயன்பாடு, போக்குவரத்து போன்ற வசதிகள் பெருமளவில்
அதிகரித்துள்ளன. மாசுபாடு அதிகரித்திருப்பதற்கு இது
முக்கிய காரணம். கிடைத்துள்ள வசதிகளை சுற்றுச்சூழலை
மாசுபடுத்தாத வகையில் பயன்படுத்தலாம்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய சில
வழிமுறைகள் : -
1. தூங்குவதற்கு முன் வீட்டில் உபயோகப்படுத்தும்
கம்ப்யூட்டரை "ஸ்டான்ட் பை' நிலையில் வைக்காமல் முழுவதுமாக
"ஷட் டவுன்' செய்ய வேண்டும்.
2. வழக்கமான குண்டு பல்புகளுக்கு பதிலாக "சி.எப்.எல்.,'
பல்புகளை பயன்படுத்தலாம்.
3. "ஏசி'யில் பயன்படுத்தப்படும் "ஏர்-பில்டர்'களை
மாதத்துக்கு ஒருமுறையாவது மாற்ற வேண்டும்.
4. எந்த ஒரு அறையில் இருந்து வெளியேறினாலும் அதற்கு முன்னர்
மின்சாதன பொருட்கள் "சுவிட்ச்-ஆப்' செய்யப்பட்டுள்ளதா
என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
5. சூரிய சக்தியில் இயங்கும் "வாட்டர்-ஹீட்டர்'களை
பயன்படுத்தலாம்.
6. கடிதம் எழுதுவதை விட இ-மெயில் மூலமாக தொடர்பு கொள்வதை
அதிகரிக்கலாம்.
7. அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல "டூவீலரை' எடுப்பதற்கு
பதிலாக, கால்நடையாகவோ, சைக்கிளிலோ சென்று வரலாம்.
8. ஸ்பிரே பெயின்ட்களுக்கு பதிலாக, பிரஷ்களையோ, ரோலர்களையோ
பயன்படுத்த வேண்டும்.
9. கடைகளுக்கு செல்லும் போதே துணிப்பைகளை எடுத்து சென்று
விட்டால், பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க முடியும்.
10. இயன்றவரை பேப்பரின் இரண்டுபுறங்களையும் பயன்படுத்த
வேண்டும்.
இது போல ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கை முறையில் சிறிய
மாறுதல்களை செய்து கொள்வதன் மூலம் சுற்றுச்சூழல்
பாதுகாப்புக்கு பெரிய அளவில் பங்களிக்க முடியும்.
பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.