நவராத்திரியும் இசையும்...
செப்டம்பர் 24,2009,11:38 IST
நவராத்திரி விழா கொண்டாட்டங்கள் சென்னையில் களைகட்டியுள்ளது. மேற்கு மாம்பலத்தில் அயோத்யா மண்டபம், சர்வப்ரிய கணபதி கோவில், சிருங்கேரி பீடம் கிருபா சங்கரி தெரு மெட்ராஸ் காளி பாரி கோவில், தி.நகர் சாரதாபீடம், தி.நகர் சிருங்கேரி பீடம் என்று, தென் சென்னையின் இப்பகுதிகள் மட்டுமல்லாது பல கோவில்களில் கொலு வைத்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
முதலில் பாரத் கலாச்சார் வழங்கும் யுவ உத்சவ் தொடங்கியது. பல இளம் கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப் பட்டது. முதல் நிகழ்ச்சியாக கலைமகனின் பாட்டு.
கலைமகன் குட்டிப் பையனாக தனது தாத்தா வில்லுபாட்டு கலைஞர் கலைமாமணி சுப்பு ஆறுமுகம் அவர்களின் குழுவில் அமர்ந்து பாடிப் பாடி முறைப்படி சங்கீதம் பயின்று, தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டே தனது இசையையும் வளர்த்துக் கொண்டு, குரலில் சிறப்பாக உயர்ந்து வருகிறார். பிரதான ராகமாக, கல்யாணி ராகம் ராக ஆலாபனை அம்சமாக அமைந்தது கனகச்சிதம். கல்யாணியை வார்த்து பேழையில் எடுத்துக் கொடுத்தார். "உன்னையல்லால் வேறே கதி' பாபநாசம் சிவனின் அற்புதமான பாடல்.
நவராத்திரிக்கு ஏற்றபாடல். "நீயே மீனாட்சி'க்கு நிரவல் கொடுத்து கற்பனை ஸ்வரம் கண கணவென்று நல்ல கணக்கு கோர்வைகள். பரத்வாஜின் பக்குவமான மிருதங்கம் திலீப்பின் வயலின் காதிற்கு இனிமை சேர்த்தது. நல்ல சுகானுபாவமான யுவர்களின் கூட்டணிகச்சேரி. தி.நகர் சிருங்கேரி வித்யாச்ரமத்தில் சத்யாவின் கீபோர்ட் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெற்றது.
மேலும், கமகம் என்ற வாசனையரியாத இசைக் கருவிக்கு கமகம் என்பதை சத்யா சொல்லிக் கொடுத்து, அதை பழக்கி அதை கேட்க நமக்கு பழக்கியுள்ளார் என்றால் அது மிகையில்லை. அதனால் தான், சத்யாவின் கச்சேரிக்கு எப்போதும் ஒரு எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது. அதிலும், சத்யாவின் நவராத்திரி கச்சேரியை கேட்க உமையாள்புரம் சிவராமன் மிருதங்க வித்வான், ஆரம்பம் முதல் இறுதி வரை வந்திருந்து கேட்டார்.
எம்.ராஜிவ் வயலினில் சத்யாவின் வாசிப்புக்கேற்ப அனுசரனையாகவும் ஈரோடு நாகராஜன் மிருதங்கத்தில் கை கோர்த்தனர். எடுத்த எடுப்பிலேயே பேகடா ராக ஆலாபனை யை ஒரு குட்டி சுற்றாக வந்து தீட்சிதரின் வரவல்ல நாயகஸ்ய வாசித்து ஸ்வரம் போட்டு அசத்திவிட்டார் கைதட்டல்களுடன்.
நவராத்திரி கச்சேரிகளில் பெரும்பாலும் இடம் பெறும் பாடல் ஸ்ரீசக்ரராஜ பாடலை கொடுத்து, நிகழ்ச்சியை முடித்தார். சிருங்கேரி சாரதாம்பாளுக்கு இந்த குட்டி இளம் புயல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வாசித்தது நிறைகுடம் தளும்பாது என்பது தெரிந்தது.
-ரசிகப்ரியா
No Comments Found!
Post Your Comments for the Article