கோவை வரலாறை எழுத்துகளில் பதிவு செய்தவர்களில், கோவை கிழார் எனும் ராமச்சந்திரன் செட்டியார் முதன்மையானவர். அவரைத் தவிர இன்னும் பலரும், கோவையைப் பற்றிய தங்கள் பார்வையை பதிவு செய்துள்ளனர். கோவை, கொங்கு நாட்டின் அங்கம் என்பதால் கொங்கு நாட்டு வரலாற்றை எழுதியவர்களையும் அறிவது அவசியமாகிறது. அவர்களில் சிலரைப் பற்றி...
முத்துசாமிக் கோனார்: திருச்செங்கோட்டை சேர்ந்த இவர், 75 ஆண்டுகளுக்கும் முன்பே கொங்கு நாட்டின் 35 நாடுகள் குறித்து எழுதத் திட்டமிட்டார்; ஆனால், மேற்கரைப் பூந்துறை நாடு, கீழ்க்கரைப் பூந்துறை நாடு, பருத்திப்பள்ளி நாடு, ஏழூர் நாடு, மற்றும் தென்கரை நாடு ஆகியன குறித்து மட்டுமே அவரால் எழுதமுடிந்தது. 1858ல் பிறந்த இவர், தான் எழுதிய "கொங்கு நாடு' புத்தகத்தில் தமிழகம் சேர, சோழ, பாண்டிய நாடுகளாக மட்டுமே பகுக்கப்பட்டிருந்தது என்னும் பொதுப்பார்வையை தவிர்த்து, கொங்கு நாடு தனி நாடு என்கிற கருத்தை நிறுவுகிறார். இதன் எல்லைகளை சான்றுகளோடும் தர்க்க ரீதியிலும் வரையறுக்கிறார்.
அ.கிருஷ்ணசாமி நாயுடு: அ.கி.நாயுடு என்று அழைக்கப்படுகிற அ.கிருஷ்ணசாமி நாயுடு 1888ல் பிறந்தவர். இவர் எழுதிய, "பூளைமேடு வரலாறு' நூல் கோவை குறித்த எழுத்துக்களில் முக்கியமான பதிவாகும். 1963ல் வெளியான இப்புத்தகத்தின் அப்போதைய விலை 1 ரூபாய். பீளமேடு உருவான பின்னணி, அவ்வூரின் சமூக அமைப்பு, வீடுகளின் அமைப்பு, முக்கியஸ்தர்களைப் பற்றிய தகவல்களை இதிலே அடுக்கி வைத்துள்ளார் அ.கி.நாயுடு.
செந்தலை.ந.கவுதமன்: கோவை குறித்து எழுதிய இன்றைய எழுத்தாளர்களில் "சூலூர் வரலாறு' நூல் ஆசிரியர் செந்தலை.ந.கவுதமன் குறிப்பிடத்தக்கவர். இவரது "சூலூர் வரலாறு' புத்தகத்தில் கோவை குறித்த ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. பீளமேடு சர்வஜன பள்ளியில் தமிழாசிரியராக இருந்து ஓய்வு பெற்ற இவர், சிறந்த கல்வியாளர் மற்றும் பேச்சாளருமாவார்.
கவியன்பன்.கே.ஆர். பாபு: வரலாற்று புத்தகங்களை வாசிப்பதை ஆகப்பெரிய தண்டனையாகக் கருதும் இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட இவரது "தெரிந்த கோவை தெரியாத கதை' நூலை ரசித்துப் படிக்கின்றனர். வாசிப்பவர்களை வசியப்படுத்தும் இவரது எழுத்துநடையால்தான் ஒரு வரலாற்றுநூல் பல்லாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளது. இந்நூலின் முன்னுரையில், ""நான் ஒரு பாமரன்; எனக்கு ஒரு நூலின் நுட்பமான விஷயங்கள், இரண்டு மூன்று முறை படித்தால்தான் விளங்கும். என்னைப் போன்றவர்கள் சிரமமப்படக் கூடாதென்றுதான், எளிமையும், ஆர்வமூட்டும் உத்திகளுமாக இதை எழுதுகிறேன்'' என்று தனது நூல் குறித்து குறிப்பிடுகிறார். வருவாய்த் துறையின் கடைநிலை ஊழியரான இவர், தனது எழுத்தால் கோவை மக்களின் உள்ளங்களில் உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கிறார்.
சி.ஆர்.இளங்கோவன்: "கோயமுத்தூர் - ஒரு வரலாறு' நூலை எழுதியவர். ""தமிழ் படிக்கத் தெரிந்த ஒரு சாமானியனும் கோவை நகரம், உருவாகி வளர்ந்த விதம் குறித்து புரிந்து கொள்ள வேண்டும் என்றே இந்த நூலை எழுதினேன். காலத்தின் கையில் கிடைத்த எழுதுகோலாகவே என்னைக் கருதி செயல்பட்டுள்ளேன்'' என்று தன்னடக்கத்துடன் கூறும் இவர், பொது நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டங்களும், எம்.பில்., ஆய்வுப் பட்டமும் பெற்றவர். இது தவிர, "சிறுவாணி', கோவைக்கிழார் இராமச்சந்திரன் செட்டியார்' உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
மற்றும் பலர்: 1956ல் ஆங்கில மொழியில் ஆரோக்கியசாமி எழுதிய நூலும், 1968ல் புலவர் குழந்தை எழுதிய "கொங்குநாடு' நூலும் கொங்கு வரலாற்றைப் பெரும்பாலும் பிரதிபலித்தவை. மயிலை சீனி வேங்கடசாமியின் "கொங்கு நாட்டு வரலாறு', அப்பாதுரை எழுதி 1983ல் வெளிவந்த "கொங்கு தமிழக வரலாறு' இரண்டும் கொங்கு நாடு குறித்த பதிவுகளில் முக்கியமானவை. 1986ல் ராமமூர்த்தி எழுதிய ஆங்கில நூல் ஒன்றும் கொங்கு மண்ணின் மாண்புக்கு சாட்சி சொல்கிறது.
துரைக்கண்ணுவின் "விந்தை மனிதர் ஜி.டி.நாயுடு', தூரன்.நல்.நடராசனின் "கொங்கு வேளாளர் வரலாறு', ராஜேந்திரனின் "தெரிந்தவர் தெரியாதவர்', ராமச்சந்திரன் செட்டியாரின் "கொங்குநாட்டு வரலாறு', பாலகிருஷ்ண நாயுடுவின் "குப்புசாமி நாயுடு வாழ்க்கை வரலாறு, முத்துசாமி எழுதிய "திரையுலக தேவர்', விஜயனின் "எம்.ஜி.ஆர் கதை', சக்திதேவியின் "கோவை நகர வரலாறு', டாக்டர் புவனாவின்"கொங்குச் சோழர்', ராமசாமியின் "ஆறைநாடு வரலாறு', கவிஞர் கண்ணதாசனின் வனவாசம், அறந்தை நாராயணன் எழுதிய "தமிழ் சினிமாவின் வரலாறு' உள்ளிட்ட நூல்களிலும் கோவை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.