மதுரை ஆதீனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நித்தி, வட மாநிலங்களில் செல்வாக்குள்ள அகாடாக்களில் இடம் பெற்று, மகா மண்டலேசுவரராக உருவெடுத்திருக்கிறார். இது அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கும்பமேளாவிற்காக, கடந்த, 6ம் தேதி, அலகாபாத் வந்தார் நித்தியானந்தா. மறுநாளான, 7ம் தேதி, வட மாநிலங்களில் செயல்படும் துறவிகள் அமைப்பான அகாடாக்களில், முதன்மையானதும், முக்கியமானதுமான, "மகா நிர்வாணி அகாடா'வின், மகா மண்டலேசுவரர் ஒருவர், அவரை சந்தித்துப் பேசியுள்ளார்.அதே நாளில் தான், ஜெயேந்திரரும், நித்தியை நேரில் சந்தித்தார். இதையடுத்து, கடந்த, 12ம் தேதி, மகா மண்டலேசுவரராக, நித்தியை, மகா நிர்வாணி அகாடா அங்கீகரித்தது. ஆனால், அதற்கான சம்பிரதாய முன் அனுமதியை பெறவில்லை என்ற பேச்சு, எழுந்திருக்கிறது. அத்துடன், ரஞ்சிதா, "சிடி' விவகாரத்தில், நித்தியின் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், அவரை, மகா மண்டலேசுவரராக ஏற்றுக் கொண்டது எப்படி என்பதே, இப்போது எழும் வாதம்.இது தொடர்பாக, மகா நிர்வாணி அகாடாவின், அமைப்புச் செயலர், ரவீந்திர புரி கூறியதாவது:கும்பமேளாவில், தென் மாநிலங்களை சேர்ந்த துறவிகள், கணிசமான அளவில் பங்கேற்கவில்லை. நித்யானந்தா, தென் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமானவை. அவற்றுக்கும், அகாடாவில் அவர் சேர்வதற்கும் சம்பந்தமில்லை.தென் மாநில சாதுக்களை, கும்பமேளாவில் சேர்த்துக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் தான், நித்யானந்தாவை சேர்த்துள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஆனால், "இந்த நடவடிக்கை, நியாயமானதல்ல. நியமனத்திற்கு முன், மற்ற அகாடாக்களின் கருத்தையும் கேட்டிருக்க வேண்டும்' என, நிரஞ்சனி அகாடா என்ற மற்றொரு அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.இந்த அமைப்பை சேர்ந்த ஹரிகிரி என்பவர் கூறுகையில், ""ஒருவரை மகா மண்டலேசுவரராக நியமிப்பதற்கு முன், அவரது நடத்தை, பின்னணி பற்றி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். நித்யானந்தாவை எப்படி நியமித்தனர் என, தெரியவில்லை,'' என்றார்.மகா மண்டலேசுவரராக நியமிக்கப்பட்ட பின், தன், 220 சீடர்களுடன் நித்தி, நேற்று முன்தினம் காசிக்கு வந்தார். கங்கையில் படகில் சென்று, சில கட்டங்களை பார்த்து விட்டு, பின், 60 சீடர்களுடன் விசுவநாதர், அன்னபூரணி மற்றும் விசாலாட்சியை தரிசித்தார்.மதுரை ஆதினகர்த்தவாக ஆக முயன்று, சர்ச்சையில் சிக்கிய நித்தியானந்தா, வடமாநிலங்களில் காலூன்ற முதல் கட்டமாக, மகா மண்டலேசுவரராக நியமனம் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
அகாடா என்றால்...?
வட மாநிலங்களில் உள்ள துறவிகள், "அகாடா' என்ற பெயரில் அமைப்புகளை ஏற்படுத்தி ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். தென் மாநிலங்களில் பல்வேறு மடங்கள் இருந்தாலும், அகாடா போன்ற அமைப்பு கிடையாது.தென் மாநில மடங்களில் எதுவும், இந்த அகாடா அமைப்பில் சேரவில்லை. இந்த அகாடாக்களில், துறவிகள் குழுவுக்கு தலைவராக இருக்கும் துறவி, மகா மண்டலேசுவரர் எனப்படுவார். இது அதிகாரமும், செல்வாக்கும் மிக்க பதவி. இதில், சைவ, வைணவ மற்றும் தனியான பிரிவாக, "உதாசீன்' என்ற பிரிவும் உள்ளது. இம்மாதிரி, மொத்தம், 13 அகாடா பிரிவுகள் உள்ளன.
நூறு பேருக்கு கிடைத்த பதவி
மகா மண்டலேசுவரராக ஒருவர் வரவேண்டும் என்றால், அவர் வேதம், சாஸ்திரங்கள் உள்ளிட்டவற்றை, முறையாக படித்திருக்க வேண்டும். முறையான குரு பரம்பரையில், சன்னியாச தீட்சை பெற்றிருக்க வேண்டும். ஆன்மிக பாரம்பரியத்தில், யோக சாதனைகள் கற்றிருக்க வேண்டும்.இந்த கும்பமேளாவில், இதுவரை, 100க்கும் மேற்பட்டோர், மகா மண்டலேசுவரர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கும்பமேளா போன்ற முக்கிய விழா நிகழ்ச்சிகளில், இவர்களுக்கு முதலிடம் வழங்கப்படுவது பாரம்பரியம்.கடந்த, 2007ம் ஆண்டு, நித்தியை மகா மண்டலேசுவரராக நியமிப்பதற்கான முயற்சிகள் நடந்தன.நியமனத்திற்காக அவர், 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், 2010 வரை அவர், அதை செலுத்தவில்லை என , கூறப்படுகிறது. 2010ல், நித்தி செக்ஸ் சர்ச்சையில் சிக்கிய போது, கும்பமேளாவில் இருந்தார். அகாடாக்கள் அங்கிருந்து அவரை வெளியேற்றி விட்டனர் என, கூறப்படுகிறது.-நமது சிறப்பு நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இறைவன் என்றால் யார் ? அந்த ஏக இறைவனின் தன்மைகள் என்ன? போன்ற அடிப்படை தெரியாததால்தான் இந்த கோளாறுகள் ஏற்படுகின்றன. மனிதன் எந்த நிலையிலும் தெய்வ நிலை அடையமுடியாது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் எந்தவொரு ப்ரோக்கருக்கும் வேலை இல்லை. ஒரு மனிதன் மூலமாகத்தான் இறைவனை அணுக முடியும் என்பது அந்த இறைவனை கொச்சை படுத்துவதாகும். எந்த ஒரு மகானாக இருந்தாலும் அனைத்து மனிதரைபோல்தான் அவராலும் இருக்க முடியும். சாப்பிடுவது, உறங்குவது, கழிப்பிடம் செல்வது இது எல்லாமே அவர்களும் செய்கிறார்கள். அப்புறம் என்ன?
நம்மை படைத்த அந்த ஓர் ஏக இறைவனை அறிந்து கொள்வோம். அவனது கட்டளை படி நடப்போம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.