திருச்சி: அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பஸ்களில், பொதுமக்கள் வசதிக்காக புதிதாக துவங்கப்பட்டுள்ள கூரியர் சர்வீஸ் மூலம், போக்குவரத்து துறையின் வருவாய் கணிசமாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய, இரண்டு சேவை துறைகளில் ரயில்வேக்கு அடுத்தபடியாக, தபால் துறை உள்ளது. கூரியர் சர்வீஸ், பார்சல் சர்வீஸ் என, தனியார் நிறுவனங்கள், இத்துறையில் கால் பதித்தாலும், இன்றும் தபால் துறையின் நம்பகத்தன்மை மாறவில்லை. ஆயினும் அவசரத்துக்கு இது ஆகாது. அதேபோல, தனியார் கூரியர் சர்வீஸிலும் இன்று புக் செய்தால், மறுநாள் தான் டெலிவரி கிடைக்கும். சில நேரங்களில் தாமதப்படும்.
"சேம் டே டெலிவரி' என்ற வாசகத்துடன், 7சி கூரியர் சர்வீஸை, அரசு போக்குவரத்துக்கழகம் துவங்கியுள்ளது. குறைந்த செலவில், குறிப்பிட்ட நேரத்துக்குள் தபால், பார்சல்களை கொண்டு சேர்க்கும் இந்த சேவை, கடந்த டிச., மாதம் துவங்கப்பட்டுள்ளது.
சென்னை பிராட்வே, கோயம்பேடு, சேலம், மதுரை, திருச்சி, கோவை, வேலூர், கரூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, பெங்களூரு, ஆகிய, 12 இடங்களில், இந்த சேவை அமலில் உள்ளது.
சென்னை பிராட்வே, மதுரை மாட்டுத்தாவணி, திருச்சி சென்ட்ரல், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய, ஐந்து இடங்களில் மட்டும் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் இருக்கும் இடத்தில் டெலிவரி வழங்கப்படுகிறது. விரைவில் தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இந்த சேவையில் டோர் டெலிவரி கிடையாது. நாமே நேரடியோக சென்று டெலிவரி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதுகுறித்து திட்ட மேலாளர் ரமேஷ் கூறியதாவது:
குறைந்த செலவில், கூரியர் சர்வீஸ் செய்ய வேண்டும் என்பதற்காக, 7சி துவங்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து - தூத்துக்குடி செல்ல, 12 மணி நேரம் ஆகும். மாலை 7 மணிக்கு பஸ் எடுத்தால், மறுநாள் காலை, 7 மணிக்கு செல்லும். அதை மையப்படுத்தியே, 7சி துவங்கப்பட்டுள்ளது. அதற்காகவே, 7 ரூபாய் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
250 கிராம் வரையான தபாலுக்கு, 7 ரூபாய், அடுத்த கூடுதல், 250 கிராமுக்கு, 2.50 ரூபாயும் வசூலிக்கப்படும். பார்சலுக்கு, 2.5 கிலோ வரை, 25 ரூபாயும், அடுத்த, 250 கிராமுக்கு, 2.50 ரூபாய் வசூலிக்கப்படும்.
இந்த சேவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு, 25 சதவீதம் கட்டணத்தில் சலுகை உள்ளது. மாணவர்கள் பார்சலுக்கு, அதிகபட்சமாக, ஏழு கிலோ வரை, 16 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும்.
பார்சல், தபால் புக் செய்ய வருபவர்கள், வாக்காளர் அடையாள அட்டை, லைசன்ஸ் போன்ற அரசு அங்கீகரித்த ஃபோட்டோவுடன் கூடிய அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை கொண்டு வரவேண்டும். அதேபோல யார் பெயரில் பார்சல் புக் செய்யப்படுகிறதோ, அவரும், டெலிவரி எடுக்க வரும்போது, அடையாள அட்டை கொண்டு வரவேண்டும்.
பணம், நகை, தங்கம், வெள்ளி, திரவப்பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள், விலை உயர்ந்த டிஜிட்டல் கேமிரா, மொபைல்ஃபோன் போன்ற பொருட்கள் பார்சலில் இருக்கக்கூடாது. இந்த சேவை மூலம் பொதுமக்கள் பயனடைவர்.இவ்வாறு அவர் கூறினார். புதிய கூரியர் சேவை திட்டம் மூலம் போக்குவரத்து கழக வருமானம் கணிசமாக பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.