புதுடில்லி ""காங்கிரஸ் கட்சி, கமிஷன் ஆட்சி நடத்துகிறது. தொடர்ச்சியான ஊழல்களால், கறையான் போல், நாட்டை, கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கிறது. பிரதமர் பதவியில் இருக்கும் மன்மோகன் சிங், சோனியா குடும்பத்தின், இரவு காவலாளி போல் செயல்படுகிறார்,'' என, பா.ஜ., மூத்த தலைவர், நரேந்திர மோடி, ஆவேசமாக பேசினார்.
பா.ஜ., தேசிய கவுன்சில் கூட்டத்தின் மூன்றாம் நாளான நேற்று, பா.ஜ., மூத்த தலைவரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, பேசுவதற்காக அழைக்கப்பட்டார். அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடியை அறிவிப்பதற்கு, பா.ஜ., மேலிடம் தயாராகி வரும் நிலையில், இந்த கூட்டத்தில், தனக்கு கொடுத்த வாய்ப்பை, சரியாக பயன்படுத்திக் கொண்டார் அவர்.
குஜராத்தில், சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்தியது எப்படி என்ற தலைப்பில் பேச, அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியையும், மத்திய அரசையும், சரமாரியாக தாக்கி பேசி, அங்கு கூடியிருந்த, பா.ஜ., நிர்வாகிகளின், கைதட்டல்களையும், பாராட்டுகளையும் பெற்றார்.
நரேந்திர மோடி பேசியதாவது:விரைவில் லோக்சபா தேர்தல் வரப்போகிறது. மத்தியில் உள்ள, காங்கிரஸ் தலைமையிலான, ஊழல் அரசை, தூக்கி எறிய, மக்கள் தயாராகி விட்டனர். மக்களுக்காக பாடுபடும், பா.ஜ.,வை ஆட்சியில் அமர்த்துவது என, மக்கள் முடிவெடுத்து விட்டனர்.ஸ்பெக்ட்ரம், நிலக்கரி போன்றவற்றில் ஒதுக்கீட்டில் ஊழல் செய்தவர்கள், தற்போது, ஹெலிகாப்டர் ஒப்பந்தத்திலும் ஊழல் செய்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, கமிஷன் பெறும் அரசாக மாறி விட்டது.காங்கிரஸ் கட்சி, கறையான் போல், நாட்டை, கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கிறது. கறையான்களை ஒழிப்பது, மிகவும் சிரமமான காரியம். ஒரு இடத்தில், கறையானை ஒழித்தால், மற்றொரு இடத்துக்குள் நுழைந்து விடும். பா.ஜ.,
தொண்டர்களின் வியர்வை தான், இதற்கு ஒரே மருந்து.நாம், கடுமையாக உழைத்தால் மட்டுமே, ஊழல் காங்கிரஸ் அரசை ஒழிக்க முடியும். ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்காக, நாட்டை பலிகடா ஆக்குவதே, காங்கிரசின் பாரம்பரியம்.
காங்கிரசின் முதல் குடும்பத்துக்காக, இரவு காவலாளியை நியமித்துள்ளனர்.ஆனால், அந்த இரவு காவலாளி, எத்தனை நாள் பணியில் இருக்க முடியும் என்பது, அவர்களுக்கு தெரியவில்லை. இரவு காவலாளி வேலைக்கு, ஒரு பெரிய பொருளாதார மேதையை நியமித்துள்ளனர்.பிரணாப் முகர்ஜி, நிர்வாகத்தில் சிறந்தவர். ஆனால், காங்கிரஸ் கட்சி, அவருக்கு பிரதமர் பதவியை தரவில்லை. மன்மோகன் சிங்கிற்கு தந்தது. பிரணாப் முகர்ஜி, பிரதமராக வெற்றிகரமாக செயல்பட்டால், பின், காங்கிரஸ் முதல் குடும்பத்துக்கு என்ன நடக்கும்?ஐந்து நட்சத்திர ஓட்டல் கலாசாரத்தில் உள்ளவர்களுக்கு, மக்களுடன், எந்தவிதமான நேரடித் தொடர்பும் இல்லை. ஆனால், இவர்கள் தான், தேசிய ஆலோசனை கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றனர். நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும் என்ற எண்ணம், காங்கிரசின் ரத்தத்தில் துளியளவும் இல்லை. பா.ஜ.,வின், வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போது தான், உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, துணிச்சலாக, அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.குஜராத் சட்டசபை தேர்தலில், பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்றது, தனிப்பட்ட ஒருவருக்கு கிடைத்த வெற்றியல்ல. பா.ஜ.,வின் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை விட, பா.ஜ., ஆளும் மாநிலங்கள், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதிலும், நல்ல நிர்வாகத்தை வழங்குவதிலும், பல மடங்கு சிறப்பாக செயல்படுகின்றன.காங்கிரசால் ஏற்படும் வெற்றிடத்தை போக்குவதற்கு, பா.ஜ., தான், சிறந்த மாற்று. பா.ஜ.,வை ஆட்சியில் அமர்த்துவதற்காக, தொண்டர்கள் கடுமையாக பாடுபட வேண்டும். ஓய்வின்றி உழைக்க வேண்டும்.யார் தலைவர், யார் வேட்பாளர் என்பது, பா.ஜ.,வில் முக்கியமல்ல. ஆட்சியை பிடிப்பது தான் முக்கியம். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். மக்களை ஏமாற்றக் கூடாது. டில்லியில் ஆட்சி நடத்துவோர், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கும், குஜராத், ம.பி., பீகார் போன்ற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.இவ்வாறு, நரேந்திர மோடி பேசினார்.நேற்று நடந்த கூட்டத்தில், ம.பி., முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகான், சத்தீஸ்கர் முதல்வர், ராமன் சிங் ஆகியோரும் பேசினர். இருவரும், தங்கள் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்களை குறிப்பிட்டு பேசினர்.ஆனால், நரேந்திர மோடி, தேசிய அரசியல் விவகாரங்களை பேசியதுடன், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசையும், அதன் தலைவர்களையும், சரமாரியாக தாக்கி, ஒரு மணி நேரம் பேசினார்.
"இதுதான்சரியான நேரம்':
பா.ஜ., தேசிய கவுன்சில் கூட்டத்தில், முக்கிய தீர்மானங்களை, பா.ஜ., செய்தி தொடர்பாளர், ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசு, ஊழல் அரசாக உருவெடுத்துள்ளது. இந்த ஊழல் அரசிடமிருந்து, நாட்டை விடுவிக்க, பா.ஜ., தொண்டர்கள் உறுதியேற்க வேண்டும். காங்கிரசுக்கு பதிலாக, மாற்று அரசை அமைக்க, பா.ஜ., தான் சரியான தேர்வு.தற்போதைய மத்திய அரசை, கூட்டணி அரசு என்கின்றனர். இது, ஊழல் கூட்டணி அரசு. இந்த அரசால், சாதாரண மக்கள், கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியை, மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கு, இது தான் சரியான நேரம்.தேர்தல் வரும்போது, இந்த பணியை, நாம் செய்து முடிக்க வேண்டும். பா.ஜ., தொண்டர்களும், நிர்வாகிகளும், கருத்து வேறுபாடுகளை தூர எறிந்து விட்டு, வெற்றிக்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு, தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
காங்., பதிலடி:
காங்., மூத்த தலைவரும், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சருமான, மணீஷ் திவாரி கூறியதாவது:குஜராத்தில், 2002ல் ஏற்பட்ட கலவரத்துக்கு பின், அப்போதைய பிரதமர் வாஜ்பாய், "ராஜ தர்மத்தை பின்பற்றுங்கள்' என, பேசியதை, நரேந்திர மோடி, மறந்து விடக் கூடாது. இந்திரா, பிரதமராக இருந்தபோது தான், முதல் முறையாக, அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.இதையும், நரேந்திர மோடிக்கு, ஞாபகப்படுத்த விரும்புகிறேன். வாஜ்பாய் தலைமையிலான, பா.ஜ., அரசு, சிறப்பாக செயல்பட்டிருந்தால், 2004 லோக்சபா தேர்தலில், ஏன் அவர்களுக்கு தோல்வி ஏற்பட்டது?இவ்வாறு, மணீஷ் திவாரி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நரேந்திர மோடிக்கு விசா கொடுக்க மறுக்கும் நாடு, இதுவரை இராக், லிபியா, ஆப்கானிஸ்தான், வியட்நாம், பல ஆப்பிரிக்க நாடுகள்,என உலகம் முழுதும் செய்த கொலைகள்,போர்குற்றங்கள்,ஜப்பானில் அணு குண்டு போட்ட அட்டூழியம்,ஆனால் அவர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்ப்பு..என்ன ஞாயம்????உலகில் பல தீவிர வாதிகள் இவர்களால் தான் உருவாக்க பட்டனர்.ஆனால் அவர்கள் இந்தியா எங்கும் கடை பரப்புவார்களாம், அடுக்குமா? ஊருக்கு உபதேசம், ஆனால் தான் செய்வதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கிய தனம்..
வெற்றி கொண்டான் பேச்சுக்கு குறை கூறும் மக்களே, தன்னுடைய கருத்தை மிக எளிமையாக எல்லோருக்கும் புரியும் படியும் , பாமரனுக்கும் ரசிக்கும் தன்மையுடன் சொல்லக் கூடியவர் . தான் கொண்ட கொள்கைக்காக வாழ்ந்தவர். உணர்ச்சியை தூண்டி , மதத்தினரிடையே உயிர் பலி ஏற்படுத்தி ஓட்டுக்களை வாங்கும் மோடிக்கு, வெற்றி கொண்டான் எவ்வளவோ மேல்...... இன்னும் சொல்லவேண்டும் என்றால் , வெற்றி கொண்டானுக்கு சமமானவர் அல்ல மோடி..... உண்மையா என விரைவில் புரியும்
நண்பர்களே ?
அன்று சவப்பெட்டி ஊழல் பற்றி விவாதிக்க இருந்த நாளில் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடந்தது. அதற்க்கு பலி அப்சல் குரு. இன்று RSS மற்றும் பிஜேபி யின் தீவிர வாத பயற்சி நடக்கிற செய்திக்கு ஹைதராபாத் தில் குண்டு வெடிப்பு. இன்று யார் பலி,
வேண்டாம் இந்த திருட்டு கும்பல் நமக்கு, நயவஞ்சகம இந்துக்களை கவர்ந்து இந்துக்களில் ஒரு பகுதினரை பலி கொடுக்கும் இந்த கூட்டம் நமக்கு வேண்டாம் , மீண்டும் மீண்டும் கலவர பூமியாக்கி இந்த மண்ணை ஆள துடிக்கும் கூட்டத்திக்கு முற்று புள்ளி வைப்போம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.