புதுடில்லி: பெட்ரோல் விலை, இன்று நள்ளிரவு, 12:00 மணி முதல், 2 ரூபாய் குறைகிறது; டீசல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து, உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்கள் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. மத்திய அரசு வசம் இருந்த இப்பொறுப்பு, சில மாதங்களுக்கு முன், எண்ணெய் வினியோகத்தில் ஈடுபட்டுள்ள, மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, 15 நாட்களுக்கு ஒரு முறை, பெட்ரோலியப் பொருட்களின் விலை மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த மாதம், 16ம் தேதி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 1 ரூபாய், 50 காசும், இம்மாதம், 2ம் தேதி, ஒரு ரூபாய், 40 காசும் உயர்த்தப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல், சென்னையில், 73 ரூபாய், 95 காசுக்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்று இரவு, 12:00 மணி முதல், பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு 2 ரூபாய் குறைக்கப்படுகிறது. இதற்கான உத்தரவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அது போல், டீசல் விலை, ஜனவரி மாதம், இரு முறை மாற்றியமைக்கப்பட்டு, சென்னையில் இப்போது, ஒரு லிட்டர், 51 ரூபாய், 23 காசு என்ற விலையில் விற்கப்படுகிறது. இதில், இன்று இரவு, 12:00 மணி முதல், 40 - 50 காசு வரை உயர்த்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடந்து வருவதால், மத்திய அரசுக்கு சங்கடத்தை அளிப்பதை தவிர்க்கும் வகையில், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த மார்ச் 2 ம்தேதி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட போது ஒரு நாள் முழுவதும் பார்லிமென்ட்டை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரு லிட்டர் டீசலுக்கு, 11 ரூபாய் வரை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பு சரியாகும் வரை, கொஞ்சம், கொஞ்சமாக டீசல் விலையை, அவ்வப்போது உயர்த்திக் கொள்ள வேண்டும் என, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதன் படி, அவ்வப்போது டீசல் விலை உயர்த்தப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை: அவ்வப்போது உயர்த்தப்பட்டுள்ளதால், சிறு தொழில் செய்வோர், நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றமடைவதால், இத்தகையோருக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாத சம்பளதாரர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வும், அரசு ஊழியர்களுக்கு, பெரும்பாலும், ஆண்டுக்கு, இரு முறை பஞ்சப்படியும் உயர்த்தப்படுகிறது. ஆனால், அனைத்து தரப்பினருக்கும், அத்தியாவசியமான பெட்ரோல், டீசல் விலை, மாதம் தோறும் அல்லது மாதத்திற்கு, இரு முறை உயர்த்தப்படுவதால், பாதிக்கப்படுவதால், செலவுகளை கணிக்க முடியாமல், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். பெட்ரோலிய நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டால், நாட்டில் பணவீக்கம் குறையாமல், மறைமுகமாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.