வருவாயை பெருக்குவது, வேலை வாய்ப்பை உருவாக்குவது, உற்பத்தியை பெருக்கி, விலை உயர்வை கட்டுக்குள் வைப்பதே ஒரு நாட்டின் சிறந்த பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை. இதில், உற்பத்தி பெருக்கம் என்பது யாருக்கு? யாரால்? எப்படி? எங்கு? என்பது முக்கிய கேள்வி. இவற்றை அடிப்படையாக கொண்டுதான் ஒரு நல்ல பொருளாதார வளர்ச்சியை நாம் எட்ட முடியும். இந்த வகையில், மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது "கிளை நுனியில் உட்கார்ந்துகொண்டு ஒருவர் அடி மரத்தை வெட்டுவதற்கு சமம்'. சமூக மேம்பாட்டிற்கான உள்ளார்ந்த வளர்ச்சிக்கு அது உதவாது. மாறாக, "குற்ற பொருளாதாரத்திற்கு' வழிவகுக்கும் என்பதே பொருளாதார வல்லுனர்களின் கருத்து.
டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் தமிழக அரசிற்கு, ஆண்டிற்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இதனை நம்பியே, அரசு இலவச திட்டங்களை அளித்து வருகிறது. மதுக்கடைகளை மூட வேண்டும்; மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று எங்கும் குரல்கள் ஒலிக்கின்றன. இதில், யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. டாஸ்மாக் கடைகளை மூடினால், அரசிற்கு ஏற்படும் நிதி இழப்பை வேறுவழியில் எப்படி சரிக்கட்டலாம்? நிதி ஆதாரங்களை உருவாக்க வழிகள் என்ன? யோசனைகளை தெரிவித்துள்ளனர் "தினமலர்' வாசகர்கள்.
நிர்வாக சீர்திருத்தம் வேண்டும்: பிரியதர்ஷினி,வணிகவியல் மற்றும் நிர்வாகவியல் துறை தலைவர்,தேனி கம்மவார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி: கல், மணல், கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்துவதன் மூலமும், நிர்வாக சீர்திருத்தத்தாலும், ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு வருவாய் பெற முடியும். தற்போது,ஆற்றுக்குள் மணல் விலை யூனிட் 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கரையில் அதன் விலை, யூனிட் 4 000 ரூபாய் என விற்கப்படுகிறது. 350 ரூபாய்க்கு அரசிடம் டோக்கன் பெற்று இடைத்தரகர்கள் 4 000 ரூபாய்க்கு விற்கின்றனர். அரசே மக்களுக்கு நேரடியாக விற்றால், அரசுக்கும் வருவாய் வரும். மக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைக்கும். கல் குவாரிகளிலும் இதே நிலை தான். கிரானைட் பற்றி எல்லோருக்கும் தெரியும். இந்த கனிம வளங்களை அரசு முறையாக விற்பனை செய்தாலே கஜானா பாதி நிரம்பி விடும். விற்பனைவரித்துறையில் எங்களிடம் கட்டினால் 10 ஆயிரம் ரூபாய், அரசுக்கு கட்டினால் 50 ஆயிரம் ரூபாய். எது வசதியென்று முடிவு செய்து கொள்ளுங்கள் எனக்கூறி அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி தாங்களே லஞ்சமாக வசூலித்துக் கொள்கின்றனர் அதிகாரிகள். போலீஸ் துறையிலும் இதே போல், எங்களிடம் கட்டினால் 500 ரூபாய், அரசுக்கு கட்டினால் 2000ம் ரூபாய், எது வசதியென்று தீர்மானியுங்கள் என மிரட்டி வசூலிக்கின்றனர். இவை ஒரு உதாரணத்திற்கு தான். ஆர்.டி.ஓ., வருவாய்த்துறை உட்பட அனைத்து துறைகளிலும் இது போன்ற முறைகேடுகள் அதிகம் நடக்கிறது. இந்த துறைகளில் நிர்வாக சீர்திருத்தம் கொண்டு வந்தால், அரசின் வருவாய் பல மடங்கு உயரும். ரியல் எஸ்டேட் உட்பட பல தொழில்களை வரையறைக்கு உட்படாமல் செய்பவர்கள் வரி கட்டுவதில்லை. 2000 ரூபாய் மதிப்புள்ள இடத்தை 2 லட்சத்திற்கு விற்கும் இவர்களிடம், இதுவரை வரி வசூலித்து இருந்தால், பல ஆயிரம் கோடி வருவாய் கொட்டியிருக்கும். இனியாவது இதனை செய்ய வேண்டும்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை போல், வேலைக்கு ஏற்ற சம்பளம் தான் வழங்க வேண்டும். கேட்கும் சலுகைளை எல்லாம் வாரி வழங்கக் கூடாது. சில துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சீருடைகள், உணவு, சுற்றுலா, மருத்துவம் என எல்லா சலுகைகளையும் பெற்றுக்கொள்கின்றனர். குஜராத்தில் டாஸ்மாக் இல்லை, இலவசங்களும் இல்லை. சிறுதொழில்களை ஊக்குவிக்க வேண்டும். மின்சார உற்பத்தியை அதிகரித்து மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை பெருக்கி அதன் மூலம் வருவாய் ஈட்ட வேண்டும். தனியார் மயத்தை மேலும் ஊக்குவித்து முறையான சேவைவரி வசூலிப்பில் ஈடுபட வேண்டும். சந்தை பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். தொழில்களை ஊக்குவித்து வரி வசூல் மூலம் வருவாய் ஈட்ட வேண்டுமே தவிர, வருவாய் வேண்டும் என்பதற்காக அரசே மது விற்பனை செய்வது அபத்தமானது.
இயற்கை வளங்கள் மூலம் வருவாய் ஈட்டலாம்: பி.துரைசிங்கம், ஓய்வு பெற்ற பொருளாதார துறை பேராசிரியர், தலைவர், நுகர்வோர் கல்வி மற்றும்ஆராய்ச்சி நிலையம், பரமக்குடி: மதுவிலக்கை அமல்படுத்தி அதற்கு பதில் வருவாய் ஈட்ட, மத்திய அரசின் பங்கு பெரியளவில் இருக்க வேண்டும். ஏனென்றால் ஏற்றுமதி, இறக்குமதி, வருமான வரித்துறை உள்ளிட்ட அனைத்து துறை வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை, மாநில அரசுகளுக்கு கொடுக்கலாம். பஞ்சாயத்து தேர்தல் நடத்தினால் தான், மானியம் உள்ளிட்டவை கொடுக்கப்படுகிறது. அதற்காகத் தான் கூட்டுறவு தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை வரி செலுத்த தவறியவர்கள் மீது, கடும் சட்டம் கொண்டு வருவதன் மூலம் வருமானத்தை பெருக்கிக் கொள்ளலாம். அந்தந்த பகுதி இயற்கை வளங்களை கணக்கிட்டு, அதை முறையான ஏலம் விடுவதன் மூலமும், வருமானம் கிடைக்கும். உதாரணத்திற்கு மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உட்பட தென்மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் கருவேல மரங்கள் உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, நன்கு வளர்ந்து விடுகின்றன. இவற்றை, ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை ஏலம் எடுக்கின்றனர். குறைந்தபட்சம் 1000 ஏக்கர் கருவேலமரங்களை ஏலம் விட்டால், நான்கு கோடி ரூபாய் அளவில் வருமானம் வரும். இவ்வாறு கனிமவளங்கள், மணல், கண்மாய் களிமண்கள் மற்றும் கல் குவாரிகள் என அந்தந்த இடத்தில் உள்ள இயற்கை மூலம் வருமானம் பெறலாம்.
ஆடம்பர பொருளுக்கு வரி உயர்த்துங்கள்: தீனதயாளன் (பேராசிரியர், பொருளியல் துறை, மதுரை கல்லூரி): மணல் மற்றும் கிரானைட் குவாரிகள் உட்பட இயற்கை வளங்களை அரசுடமையாக்கினால், ஆண்டுக்கு ரூ. ஆயிரம் கோடி வருவாய் அரசுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 300 கோடி மொபைல் போன் இணைப்புகள் உள்ளன. ஆண்டுக்கு ஒரு இணைப்பிற்கு ரூ.100 வீதம், சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனங்களில் இருந்து வசூல் செய்தால், ரூ.300 கோடி வருவாய் கிடைக்கும். ஆடம்பர பொருட்களுக்கு மறைமுக வரிகளை ஒரு சதவீதம் உயர்த்துவதன் மூலம், அரசிற்கு கணிசமான வருவாய் கிடைக்கும். கிராம மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்குரிய திட்டங்களில் அரசு செலவிடும் நிதியில், சுமார் 10 சதவீதம் அந்த பகுதியில் வாழும் மக்களிடையே வசூலிப்பதன் மூலம், மக்களை வளர்ச்சி திட்டங்களில் இணைப்பதன் மூலம் 10 சதவீதம் வருவாயும் அரசுக்கு கிடைக்கும்.
தொழில்வளம் பெருக வேண்டும்: பேராசிரியர் பி.ரவிச்சந்திரன், பொருளாதாரத்துறை தலைவர், ஜி.டி.என்., கலை கல்லூரி, திண்டுக்கல்: தமிழகத்தில் பாரம்பரியமாக பல தொழில்கள் உள்ளன. மக்கள் சிறுதொழில்கள் செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். காந்தி அடிகளின் கிராம ஆதாரத்திட்டம் போல, ஒவ்வொரு மண்டலத்திலும் இருக்கும் மூலதனத்தையும், இயற்கை வளத்தையும் பயன்படுத்தி தொழில் செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். தொலைநோக்கு திட்டங்களை அரசு துவங்கி, அந்நிய முதலீட்டை ஈட்டும் அளவிற்கு நாம் தொழிலில் வளர்ச்சி அடைய வேண்டும். ஏற்றுமதி தொழில்கள் சார்ந்தவற்றை தமிழகத்தில் செய்வதற்கு, உலக வங்கி, தேசிய வங்கிகளில் கடன் வாங்கி, நமது திட்டங்களை செம்மைப்படுத்த வேண்டும்.
உண்மை பயனாளிகளை கணக்கிடவேண்டும்: வெ. முத்துக்கிருஷ்ணன், அய்யம்பாளையம். இலவச அரிசி திட்டம் உட்பட அரசின் பல்வேறு திட்டங்களில் உண்மையான பயனாளிகளை அரசு மீண்டும் கணக்கிட்டு, அவர்களுக்கு மட்டும் வழங்கினால் பல ஆயிரம் கோடி மிச்சமாகும். மாநிலத்தில், நாள் ஒன்றுக்கு சராசரியாக 31 ஆயிரம் கி.வாட் மின்சாரம் திருடப்படுகிறது. இவற்றை தடுத்து, இழப்பை சரிசெய்யலாம். ஓடாமல் உள்ள 7 லட்சம் பம்பு செட்களின் தளவாடங்களை கழற்றி புதிதாக இணைப்பு கேட்பவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் டெபாசிட் செலுத்த சொல்லி மின் இணைப்பு கொடுத்தால் விவசாய உற்பத்தி அதிகரிக்கும்.
மாற்று வழி என்ன? முத்துராஜா (பேராசிரியர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை): குறுகிய கால வருவாய் (மது வருவாய்) என்பது நீண்டகால செலவினங்களை (மக்கள் ஆரோக்கியம், உடல் நலம் பிரச்னைகள்...) அதிகரிக்கும் என்பதை அரசு கவனத்தில்கொள்ள வேண்டும். மறைமுக வரியில் மற்ற மூலங்களில் (வணிகவரி உட்பட) வரி விகிதத்தை அதிகரிக்கலாம். இதனால் உயரும் விலையை/ பணவீக்கத்தை நாம் சமாளிக்க முடியும். பத்திரப்பதிவு வரி மற்றும் வாகன வரி சதவீதத்தையும் சற்று கூட்டலாம். இதனால், வரும் சுமையை நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் தாங்கிகொள்ளும் அளவில் இருக்க வேண்டும். மது இல்லா சமுதாயம் அமைய விரும்பும் ஆர்வலர்கள், அமைப்புகள் தாங்களாகவே முன்வந்து நிதி அளிக்கும் "மது இல்லா மாநில வருவாய் திட்டம்' அறிமுகப்படுத்தலாம். செலவினங்களில் பொறுப்பற்ற, வீணாகும், பயன்தராத செலவினங்கள் என பிரித்து, தேவையில்லாதவற்றை அரசு குறைக்கலாம்.
குவாரியை அரசு நடத்த வேண்டும்: எஸ்.ராஜ்மோகன், அழகப்பா பல்கலை மேலாண்மையியல் துறை பேராசிரியர்,காரைக்குடி: வெளிநாட்டு முதலீடுகளையும், உற்பத்தி பொருட்களையும் சார்ந்து நிற்காமல், இறக்குமதியை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியையும், தொழிலதிபர்களையும் உருவாக்க வேண்டும். இதன் மூலம், இறக்குமதிக்கான வரி வருவாயை பெருமளவு குறைக்க முடியும். உண்மையான தனிநபர் வருமானம் என்பது, வேலை வாய்ப்பு, தொழிற்துறை உற்பத்தி, மொத்தம் - சில்லரை வணிகம் ஆகியவற்றை சார்ந்ததே. 35 ஆண்டுக்கு முன்பு, கூட்டுறவு அங்காடிகள் மூலம் மக்கள் பெருமளவில் பொருட்களை வாங்கினர். தற்போது, இந்த அங்காடிகள் பெயரளவில் செயல்படுகின்றன. இவற்றை மீண்டும் உயிர்ப்பித்து, சில்லரை வியாபாரிகள் பாதிக்காதவாறு, நகர் பகுதிகளில், அரசே கடைகளை எடுத்து நடத்த வேண்டும். இதன் மூலம் மக்கள் செலுத்தும் வரி, நேரடியாக அரசுக்கு கிடைப்பதுடன், வரி ஏய்ப்பு முற்றிலும் தடுக்கப்படும். மின்சாரத்துக்கு அதிக அளவில் மானியம் வழங்கப்படுகிறது. இதன்படி, வீட்டு உபயோகத்துக்கு, 1 முதல் 100 யூனிட்டுக்கு, ரூ.2.50க்கு பதில், ஒரு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 0 முதல் 200 வரை, யூனிட்டுக்கு 3 ரூபாய்க்கு பதில், இரண்டு ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. 201 முதல் 500 வரை, 3.50-க்கு பதில், 3 ரூபாய் தான் வசூலிக்கப்படுகிறது. வீடுகள் தோறும், "சோலார் சிஸ்டத்தை' நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். அரசும் சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும். இதன் மூலம் வெளி மாநிலங்களிலிருந்து அதிக விலை கொடுத்து வாங்கப்படும் மின்சாரம் நிறுத்தப்படும். உள்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தலாம். இதனால் தொழில் வளம் பெருகும். மணல் குவாரிகள் மட்டுமே தற்போது அரசின் வசம் உள்ளது. கிரானைட் உள்ளிட்ட கனிமங்களின் குவாரிகளை அரசு எடுத்து நடத்துவதன் மூலம், கணிசமான வருமானம் கிடைக்கும். சுற்றுலாவை மேம்படுத்தி, வருவாயை பெருக்கலாம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சாராய கடைகளை மூடி விட்டு விலை உயர்ந்த பன்னாட்டு பிராண்ட்களை மட்டும் 100 % சதவித லாபத்தில் குறிபிட்ட நேரத்தில் மட்டும் பார்கள் இல்லாமல் வியாபாரம் சிகரட்டு போல விற்பனை செய்ய வேண்டும் . பெர்மிட் வாங்கியவர்கள் குறிபிட்ட அளவு கொடுக்க வேண்டும் . அதன் மூலம் குடிப்பவர்கள் தொகையை கணிசமாக குறைக்க முடியும் வயது வரம்பு 25 முதல் 58 வரை கொடுக்க வேண்டும் . விற்பனை வரி,,RTO ஆபீஸ் லஞ்சம், போலீஸ் லஞ்சம் , எல்லாத்துறை இலஞ்சம்களையும் ஒழித்து வசூல் செய்வது மூலம் சரி செய்யலாம்
இயற்கையின் கணிமவளத்தில் உள்ள அணைத்து ஏல முறைகளையும், தரகர்களையும், தனியார் நிர்வாகத்தையும் அறவே ஒழித்து, அரசே நேரடியாக கூட்டுறவு சங்கம் மூலம் விநியோகம் செய்யும்போது அரசுக்கு கிடைக்கும் வருமானத்திற்கு அளவேது. அப்புறம் என்ன தமிழ்நாடா, சொர்க்கமா என நாம் நினைக்க தோன்றும். செய்வார்களா, இல்லை செய்ய விடுவார்களா?
அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆண்டொன்றுக்கு பெறும் லஞ்சத்தொகை மட்டும் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய்கள் வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது .இதில் பாதியை மட்டுமாவது அரசு தனது கஜானாவுக்கு திருப்பும் நடவடிக்கையை எடுத்தால், டாஸ்மாக் வருமான இழப்பு குறித்து அரசு கவலை கொள்ள தேவையே இல்லை .குடி மக்களும் குடியால் சீரழிய மாட்டார்கள் ..நாடும் லஞ்ச லாவண்ய தொல்லை இன்றி நிம்மதி பெருமூச்சு விடும்.தற்போதைய அவசர தேவை ஊழலுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைதான்...
மாநில அரசு நேரடியாக பெட்ரோல் மற்றும் டீஸல் போன்றவற்றை இறக்குமதி செய்து கொள்ள முயற்சி செய்யலாம் .மத்திய அரசை எதற்கு எடுத்தாலும் தொங்க வேண்டிய தேவை இல்லை .மாநில அரசாங்கமே கச்சா பொருள் சுத்திகரிப்பு நிலையங்களை தாங்களே அமைத்துக் கொள்ள வேண்டும் விலையை நிர்ணயம் செய்துகொள்ளலாம் . தனியார் சுத்திகரிப்பு நிலையங்களை மாநில அரசுகள் நம்பத்தேவை இல்லை .மத்திய அரசுக்கு சுங்க வரி ,வருமான வரி,கலால் வரி ,சேவை வரி என நேர்முகமாகவும் ,மறை முகமாகவும் பல வித வரிகள் மூலம் வருவாய் கிடைக்கிறது .மாநில அரசுக்கு டாஸ் மாக் கடைகளின் மூலம் வரும் வருமானம் கட்டாயம் தேவையே இல்லை .வேறுவழியில் மாநில அரசால் வருமானம் கட்டாயம் ஈட்ட முடியும் .பொது மக்களின் கண்ணீரில் இருந்து வரும் வருமானம் தேவையா ?எரிபொருளை இறக்குமதி செய்ய அந்த அந்த மாநில அரசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் .செய்வார்களா?
ஜி.எஸ்.ராஜன்
சென்னை .
டாஸ்மாக்கே ஒழியணும்னு பலர் கரடிய கத்துறது கேக்கவே இல்லே அரசுக்கு ஆனால் மேலும் எப்படி வருமானத்தை பெருக்கி மக்களிடம் போதிய போதைய எத்தி அவர்களுடைய மனசை மயக்கி இவுக ஓசிலே கொடுப்பதாக வேஷம் கட்ட நினெஇக்கும் அரசு , மக்களே விழித்துக்கொள்ளுங்க இல்லாட்டி ஒரே அடியா குடுமபத்துடன் மேலோகம் காத்துண்டுருக்கு. குடிச்சு சாவுரனுக்கு சொர்க்கம் போதைலேதான் செத்தபிரகுக்கு நரகம்தான்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.