தூத்துக்குடி:தெருநாய்கள் வளர்க்க எந்த காரணம் கொண்டும் ஊக்குவிக்க கூடாது. அதனால் பெரிய ஆபத்து நமக்கு ஏற்படும். சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்து டெங்குவை ஒழிக்க மக்கள் முழு ஒத்துழைப்பினை மாநகராட்சிக்கு அளிக்க வேண்டும் என்று தூத்துக்குடி கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் மதுமதி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியும், செயின்ட்மேரீஸ் கல்லூரியும் இணைந்து டெங்கு மற்றும் ரேபிஸ் வெறிநாய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் டெக்லா தலைமை வகித்தார். கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியை திலகா வரவேற்றார். மாநகராட்சி கமிஷனர் மதுமதி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி பேராசிரியர் சரவணன் ரேபிஸ் வெறிநாய் தடுப்பு குறித்து பேசினார். ஆதித்தனார் கல்லூரி விலங்கியல் துறை தலைவர் லட்சுமணன் டெங்கு காய்ச்சல் குறித்து பேசினர். விலங்குகள் நலன் குறித்தும், தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்வது குறித்தும் தேனி அவார்டு டிரஸ்ட் நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் விளக்கினார்.
மாநகராட்சி கமிஷனர் மதுமதி பேசியதாவது;
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள் முழு வீச்சில் செய்யப்பட்டன. தற்போது தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இப்போது ரேபிஸ் என்னும் வெறிநாய் தடுப்பு குறித்தும் அதிகமான விழிப்புணர்வு மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளதால் டெங்கு மற்றும் ரேபிஸ் ஒழிப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வுகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.
பொதுவாக எந்த ஒரு செயல்களும் நல்ல முறையில் மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும் என்றால் நமது இந்திய தேசத்தின் மிகப் பெரிய சக்தியாக விளங்க கூடிய மாணவ, மாணவிகளுக்கு சென்றால் போதும். ஒட்டு மொத்த சமுதாயமே இதன் விழிப்புணர்வை பெற்றுவிடும்.
இதற்காகத்தான் மாநகராட்சி கல்லூரியுடன் இணைந்து இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் தினமும் 200 டன் குப்பைகள் சேருகிறது. இந்த குப்பைகள் அனைத்தையும் தெருக்கள், ரோடுகளில் இருந்து தினமும் அப்புறப்படுத்தி தருவைகுளம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும். மாநகராட்சி பொது சுகாதார பிரிவினர் ஒரு நாள் வேலை செய்யவில்லை என்றால் ஊரே ஸ்தம்பித்து விடும். இது போன்று நோய் தடுப்பு நடவடிக்கைகளும் பொது சுகாதார பணியாளர்கள் மேற்கொள்கின்றனர். எவ்வளவு தான் பணிகள் செய்தாலும் இதில் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும். மக்களின் முழுமையான ஒத்துழைப்பு இல்லை என்றால் இதுபோன்ற காரியங்களை நல்ல முறையில் செய்து வெற்றி காண முடியாது. இதனால் டெங்கு மற்றும் வெறிநாய் தடுப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சிக்கு மக்கள் நல்ல ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சலை பொறுத்தமட்டில் பகல் நேரத்தில் கடிக்க கூடிய ஏடீஸ் கொசு மூலம் தான் வருகிறது. பெரும்பாலும் வீடுகளில் பகல் நேரத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளை தான் டெங்குவால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் நமது சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருப்பதுடன் இது சம்பந்தமாக சுகாதாரத்துறையின் சொல்லும் அறிவுரைகளை மக்கள் கண்டிப்பாக கேட்டு நடக்க வேண்டும்.
இதே போல் ரேபிஸ் என்னும் வெறிநாய் கடித்தால் வரக் கூடிய நோயும் கொடிய நோயாகும். இதனை கட்டுப்படுத்த இன்னும் பெரிய அளவில் மருந்துகள் இல்லை. இதனால் வெறிநாய் கடியில் இருந்து நம்மை காத்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
வெறிநாய் கடித்து விட்டால் உடனடியாக நல்ல தண்ணீர் குழாயை திறந்து விட்டு சுமார் 15 நிமிடம் தொடர்ந்து கடித்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் அதன் வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க முடியும். அதன் பிறகு டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.
வீடுகளில் நாய்கள் வளர்க்கலாம். அந்த நாய்களை நல்ல முறையில் பார்த்து கொள்வர். தடுப்பூசி உள்ளிட்டவற்றை சரியான நேரத்திற்கு போட்டு விடுவர். அதனால் பயம் இல்லை. அதே சமயம் எந்த காரணம் கொண்டும் தெருநாய்களை வளர்க்க ஊக்கவிக்க கூடாது. அது என்றைக்கும் ஆபத்தானது தான்.
இவ்வாறு கமிஷனர் தெரிவித்தார். மாநகராட்சி டாக்டர் ஜெயந்திமச்சோடா நன்றி கூறினார்.
மாநகராட்சி சுகாதார அதிகாரி (பொ) டாக்டர் முத்துலட்சுமி, சுகாதார ஆய்வாளர்கள் திருமால்சாமி, ஸ்டாலின் பாக்கியநாதன், அரிகணேஷ், ராஜசேகர், முருகேசன், ராஜபாண்டி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள், நூற்றுக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர்.
இது சம்பந்தமாக மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவிக்கு ஆயிரத்து 500 ரூபாய், இரண்டாம் பரிசு ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு 500 ரூபாய் தேனி அவார்டு டிரஸ்ட் மூலம் வழங்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.