சிதம்பரம் பதில் சொல்வாரா?
க.ராமசுப்பிரமணியன், ராமேஸ்வரத்திலிருந்து எழுதுகிறார்:
ஐ.ஏ.எஸ்.,
அதிகாரிகள், சொத்துக் கணக்கு காட்டாதது குறித்த கடிதத்தை இப்பகுதியில்
படித்தேன்.மத்திய அரசு, எல்லா விஷயத்திலும் ஆளுக்கொரு அளவுகோலைப்
பயன்படுத்துகிறது. அரசியல்வாதிகளுக்கு, 6 அங்குலம் என்றும்;
அதிகாரிகளுக்கு, 10 அங்குலமும்; பொது மக்களுக்கு, 15 அங்குலமும் அளவுகோல்
வைக்கிறது.ஏன் இந்த பாரபட்சம்?பொது மக்கள், ஒன்றை உரிய நேரத்தில் செய்யத்
தவறி விட்டால், அவர்கள் மீது கடுமையாக சாட்டையைச் சுழற்றத் தயங்காத நிதி
அமைச்சர் சிதம்பரம், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் விஷயத்தில்
மட்டும், மென்மையான போக்கை கடைப்பிடிப்பதேன்?எல்லாமே சட்டப்படி தான்
நடக்கிறது என வாய் கிழிய பேசும் சிதம்பரம், சொத்துக் கணக்கு காட்டாத, இந்த,
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கத்
தயங்குவதேன்?அரசியல்வாதிகளின் தில்லுமுல்லுகளுக்கு, இந்த அதிகாரிகள்
உறுதுணையாக இருக்கின்றனர் என்பதாலா அல்லது மக்களை எவ்வளவு வாட்டி
வதைத்தாலும், அவர்கள் பொறுத்துக் கொள்வர்; அதிகாரிகள் என்றால், பொங்கி
எழுந்து விடுவர் என்ற பயமா?ஆளுக்கொரு அளவுகோலை கைவிட்டு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற போக்கில், எப்போது தான் சிதம்பரம் செயல்படுவாரோ?
தயை, தாட்சண்யம் வேண்டாம்!
சொ.செல்வராஜ்,
ஓய்வு பெற்ற கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர், சென்னையிலிருந்து எழுதுகிறார்:
கன்னியாகுமரி முதல், காஷ்மீர் வரை, பாலியல் பலாத்கார சம்பவங்கள்
அதிகரித்துள்ளன.ஊடகங்களின் தாக்கம், "மெகா' தொடர்களில்
சித்தரிக்கப்படும் கதாபாத்திரங்கள்; விளம்பரங்களில் பெண்களை கவர்ச்சி யாக
காட்டுவது போன்றவை, கலாசார சீரழிவுக்கு, முக்கிய காரணங்களாகி வருகின்றன.ஒரு
நாட்டின், பொருளாதார முன்னேற்றத்திற்கு சவாலாக விளங்கி வரும், சமூக,
கலாசார சீரழிவை தடுக்க, அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலியல்
பலத்காரம், ஆணாதிக்க வெறியர்களின் அடைக்கலமாக மாறி விடக் கூடாது.பாலியல்
பலாத்காரத்தில் ஈடுபடுவோர்க்கு, தயவு தாட்சண்யம் இன்றி, கடுமையான தண்டனை
வழங்குவதன் மூலம், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.கவுரவமாக, உலகில்,
நாம், பெண்கள் பவனி வர வேண்டும் என்பதே, ஒவ்வொரு இந்தியக் குடிமகனின்
விருப்பமாக உள்ளது.
கவனத்தில் கொள்ள வேண்டும்!
ம.மன்னன், மதுரையிலிருந்து எழுதுகிறார்:
"சிறப்பாக
செயல்படும் அரசின் சிறு தவறுகளை, மக்கள் மன்னிப்பர்' என்கிறார், குஜராத்
முதல்வர் நரேந்திர மோடி.மோடி அவர்களே... தங்கள் கணிப்பு மிகவும் தவறானது.
தமிழகத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் ஆட்சிக் காலத்தில்,
எத்தனையோ மேம்பாலங்கள் கட்டினார். அனைவருக்குமே இலவச, "டிவி' அளித்தார்.
ரேஷன் கடையில், மலிவு விலையில் அரிசி வழங்கினார்.என்ன பிரயோஜனம்? தினமும்
மூன்று மணி நேரம் மின்வெட்டை தவிர்க்க, அவர் கவனம் செலுத்தவில்லை. தமிழக
மக்கள், கருணாநிதியின் நல்ல திட்டங்களுக்காக, மின்வெட் டை பொறுத்துக்
கொள்ளவில்லை. அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக ஓட்டளித்து, அவருக்கு நிரந்தர ஓய்வு
கொடுத்து விட்டனரே!தருமி கொண்டு வந்த பாடலில், குற்றம் கண்டுபிடித்தார்
நக்கீரர். சிவபெருமான் நேரில் வந்து, "என் பாடலில் குற்றம் சொன்னாயா?'
என்று, நெற்றிக் கண்ணைக் காட்டினார். தினந்தோறும் வழிபடும் சிவபெருமான்
என்று, நக்கீரர் பயப்படவில்லையே... "நெற்றிக் கண் திறப்பினும், குற்றம்
குற்றமே' என்று தானே சொன்னார் நக்கீரர்.மோடி சொல்வது போல், மக்கள் மாங்கா
மடையர்கள் அல்ல. எத்தனையோ திட்டங்களை அளித்தும், அரிசி பஞ்சம் போக்கத்
தவறியதற்காக, காமராஜரை, அவரது சொந்த ஊரான விருதுநகரில் தோற்கடித்தனர். 99
சதவீதம் நன்மைகள் செய்தாலும், 1 சதவீதம் செய்யும் தவறை, தமிழர்கள்,
நிச்சயம் மன்னிப்பதில்லை.வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவன் என்றாலும்,
தவறு செய்யும் போது, அவனை ஆசிரியர் தண்டிக்கத் தானே செய்கிறார். மனுநீதிச்
சோழன் வாழ்ந்த மண்ணில், தவறு செய்தவர் மகனாக இருந்தாலும்
தண்டிக்கப்படுவர்.கருணாநிதியின் குடும்ப பாசம் தானே, தி.மு.க.,வின்
படுதோல்விக்கு காரணமானது. மறுபடியும் தி.மு.க., ஆட்சிக்கு வருமா என்பது
சந்தேகம் தானே!எனவே, வருங்கால பிரதமராக வர வாய்ப்பிருக்கும் சூழலில்,
இவற்றையெல்லாம், மோடி, தன் கவனத்தில் கொள்வது நல்லது.
இப்படியும் ஒருவர்!
வைகை வளவன், மதுரையிலிருந்து எழுதுகிறார்:
எத்தனையோ,
புதுமையான தீர்ப்புகளையும், புரட்சிகரமான தீர்ப்புகளையும் வழங்கிய, சென்னை
உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு, தன் பணி நிறைவு வைபவத்தை, டீயும்,
பிஸ்கெட்டும் சாப்பிட்டு, மிகச் சிக்கனமாக நடத்தி, மனநிறைவு
அடைந்திருக்கிறார். பியூன் கூட, தாம் தூம் என்று மாலைகள், பிரியாணி
விருந்து, பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் என்றும், படாடோபங்களுடன் தன்
பணிநிறைவு விழாவை, அமர்க்களமாகக் கொண்டாடி மகிழும், "பெருமை மிகு'
தமிழகத்தில், அரசு காரை ஒப்படைத்து விட்டு, மின்சார ரயிலில் பயணம் செய்து,
வீடு போய் சேர்ந்திருக்கிறார், இந்தப் புண்ணிய புருஷர்.குசேலனாகப் பிறந்து,
குபேரன் மாதிரி வாழ்க்கை நடத்தும் அரசியல்வாதிகள், இந்த புண்ணிய புருஷரைப்
பற்றி என்ன நினைப்பர்? "சே! பிழைக்கத் தெரியாத மனிதராக இருக்கிறாரே...'
என்று, நமட்டு சிரிப்பு சிரிப்பர்.மேலும் இவர், தன் சொத்துக் கணக்கை, பைசா
சுத்தமாக தெரிவித்திருக்கிறார்.இந்தியாவில், பல தரப்பட்ட வங்கியில், கோடிக்
கணக்கில் பணத்தை பதுக்கி வைத்து, ஆண்டி என்றும், அம்பலம் என்றும் வேஷம்
போடும் வேடதாரிகள் வாழும் அருமைத் தமிழகத்தில், இப்படியொரு மனிதர்!நீதிபதி
சந்துரு பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும், நிம்மதியாக தூங்க முடியும்.
ஆனால், நம் பகட்டு, அரசியல்வாதிகளும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும்?
அவர்கள் மனசாட்சி, அவர்களை குடைந்து கொண்டே இருக்குமே!
ஆடிக் காற்றில் பறக்கிறது!
ஆ.கிருஷ்ணன்,
சென்னையிலிருந்து எழுதுகிறார்: இன்றைய ஆன்மிகவாதிகள் பலரும், பணம்
சம்பாதிப்பதில், அரசியல்வாதிகளை விட முன்னணியில் நிற்கின்றனர்.ஆன்மிகத்தை
பரப்புவதாக கூறி ஆசிரமங்கள், கோவில்கள், மடங்கள், கல்வி சாலைகள்,
மருத்துவமனைகள், பொறியியல் கல்லூரி என, பொது நலம் தொடர்புடைய பல அமைப்புகளை
உருவாக்குகின்றனர்.இவர்களை நம்பி, பலர், இத்தகைய அமைப்புகளுக்கு
அபரிமிதமான ஆதரவு தருகின்றனர். பின், ஆன்மிகவாதிகளின் செயல்பாடுகளில்
களங்கம் ஏற்படுவது, வெளிப்படையாக தெரிய ஆரம்பித்து விடுகிறது.இவர்களும்
லஞ்ச லாவண்யத்தில் ஈடுபட்டு, சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணைக்கு
ஆளாகின்றனர். ஆன்மிகத்தின் புனிதம், ஆடிக் காற்றில் பறக்கிறது. "இவர்களா
இத்தகைய இழிநிலைக்கு உள்ளாகின்றனர்?' என, நினைக்க வேண்டி வருகிறது. எல்லாம்
பணத்தாசை!மனம் தூய்மையானால், மந்திரம் ஜபிக்க வேண்டாம். ஒவ்வொருவரும்,
தங்கள் மனங்களை தூய்மைப்படுத்தி நடந்தாலே, மனித சமுதாயம் புனிதமடையும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தேசத்தின் மீது காங்கிரஸ் எவ்வளவு அக்கறை வைத்து உள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்து கொள்ள மற்றும் ஒரு சந்தர்ப்பம்....மூன்று மூத்த மத்திய அமைச்சர்கள்...... இன்று தமிழகம் வருகிறார்கள்.... எதற்கு.... கருணாநிதியை சமாதானபடுத்த....மேலும் இரண்டு அமைச்சர்கள்..... இருபத்தி நாலு மணிநேரமும் கருணாநிதியின் இலங்கை தமிழர் கோரிக்கை பற்றி மட்டுமே சிந்திகின்றனர்.....இவர்கள் அமைச்சர்களா? அல்லது அல்லகைகளா?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.