சென்னை: சென்னையில், நேற்று மாணவர்கள் நடத்திய ராஜ்பவன் முற்றுகை, விமான நிலைய முற்றுகை, சாலை மறியல் போராட்டங்களால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.
ராஜ்பவன் முற்றுகை : இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று கோரியும், இலங்கைக்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்தும், நேற்று தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த, 300 மாணவர்கள், ஆளுனர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். போராட்டத்தை முன்னிட்டு, காலை, 11:15 மணி முதல் நீதிமன்ற சாலையில், போக்குவரத்து நிறுத்தப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றம் முதல் ராஜ்பவன் வரை, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. வேளச்சேரி, கிண்டியில் இருந்து அடையாறு செல்லும் அனைத்து வாகனங்களும், சைதாப்பேட்டை, நந்தனம் வழியாக திருப்பி விடப்பட்டன. ஒரு கட்டத்தில், பல கி.மீ., தூரத்திற்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.
விமான நிலைய முற்றுகை : அதேபோல், சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற, 250 மாணவர்கள் கைதாகினர். ராஜிவ் காந்தி சாலையில், துரைப்பாக்கம் அரசு உதவி பெறும் கல்லூரி, ஜெயின் கல்லூரிகளை சேர்ந்த, 600 மாணவர்கள் நேற்று காலை, 9:15 முதல் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில், அரை மணி நேரத்திற்கும் மேலாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலையூர் சந்தோஷபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியின், 500 மாணவர்கள் நேற்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கே.கே.நகர் மீனாட்சி பொறியியல் கல்லூரி மாணவர்கள், 300 பேர், கல்லூரியில் இருந்து ஊர்வலமாக வந்து, வள்ளுவர் கோட்டத்தில், ஆர்ப்பாட்டம் நடத்தினர். துரைப்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட, 50 மாணவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் சார்பில், நேற்று முன்தினம் நடைபெற்ற உண்ணாவிரதத்தை தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்று, கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
8வது நாள் உண்ணாவிரதம் : சட்ட பல்கலைக் கழக மாணவர்கள், 8வது நாளாக நேற்றும் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். உடல்நிலை மோசமடைந்தும், உண்ணாவிரதப் பந்தலிலேயே சிகிச்சைப் பெற்றுக் கொண்டும், உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர். சைதாப்பேட்டை கோர்ட் எதிரே, ராஜபச்ஷேக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு, 40க்கும் மேற்பட்ட, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் கைது செய்தனர்.
சுங்க அலுவலகம் முற்றுகை : ஐகோர்ட் வழக்கறிஞர்கள், சட்ட கல்லூரி மாணவர்களுடன் இணைந்து, சென்னை பீச் ஸ்டேஷன் அருகே உள்ள, சுங்கத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபச்ஷேவை எதிர்த்து கோஷங்ளை எழுப்பியவாறு, ரோட்டில் படுத்து போராட்டம் மேற்கொண்டனர். 500க்கும் மேற்பட்டோர், இதில் பங்கேற்றதால், போலீசார், மாணவர்கள் இடையே, தள்ளு முள்ளு நடந்தது. பீச் ஸ்டேஷன் வழியாக போக்குவரத்து முடங்கியது.
அண்ணா பல்கலை : அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள், 300க்கும் மேற்பட்டோர், நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பல்கலை கழக மாணவர்கள், 200க்கும் மேற்பட்டோர், பல்கலை கழக வளாகத்தில், குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமாபுரம், ஈஸ்வரி பொறியியல் கல்லூரி மாணவர்கள், 100க்கும் மேற்பட்டோர், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள், 200க்கும் மேற்பட்டோர், வகுப்புகளை புறக்கணித்து, வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆவடி, ஒ.சி.எப்., மைதானத்தில், வேல் டெக் பொறியியல் கல்லூரி மாணவர்கள், ஓட்டேரி அரசு ஐ.டி.ஐ., மாணவர்கள், 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை, புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"சிப்பெட்' மாணவர்கள் : மேடவாக்கம், நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி பொறியியல் கல்லூரி, திருவள்ளூர், பேரம்பாக்கம் ஸ்ரீ கலைமகள் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். கிண்டி, சென்ட்ரல் பாலிக்டெனிக் மாணவர்களுக்கும், நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர். இசைக் கல்லூரி மாணவர்கள், 15 பேர், தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னை மருத்துவ கல்லூரி மாணவர்கள், 500க்கும் மேற்பட்டோர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மாணவ செல்வங்களே தமிழினம் காக்க புறப்பட்டு விட்டீர்கள் தலை வணங்கி வாழ்த்துகிறோம் அரசியல் வாதிகளிடம் சிக்காமல் உங்கள் போராட்டம் தொடரட்டும். ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழனை கண்டு மிரள வேண்டும் இலங்கையின் கைகூலிகள் மைய அரசின் கூஜா தூகிகளை ஓட ஓட விரட்டுவோம் ஹிந்தி போராட்டத்தில் மிரண்ட மைய அரசு 1965 ஆண்டில். மாணவர் போராட்டத்தை பார்க்காத இன்றைய மைய அரசு விரைவில் மாணவர் சக்தியை உணரும் தமிழனின் சக்தியை உணரும் தயவு செய்து யாருடைய பேச்சையும் கேட்டு உங்கள் போராட்டத்தை நிறுத்தி விடாதீர்கள். ஒரு சில நாட்களில் ஒட்டு மொத்த தமிழகமும் உங்கள் பின்னால் வெற்றி நிச்சயம் அன்பு சகோதர்களே இந்த விசயத்தில் தயவு செய்து கொச்சை படுத்தாமல் ஆதரவு கொடுங்கள் இல்லையேல் ஒதுங்கி நில்லுங்கள் நம்பிக்கை ஒளி தெரிகிறது தமிழனின் வாழ்வுக்கு இந்தியாவும் உலகமும் புரிந்து கொள்ளும் விரைவில். புல்லுருவிகளை விரட்டி புதிய மாணவர் சமுதாயம் அமைப்போம்.
மாணவர் புரட்சி., இனி நாட்கள் செல்ல செல்ல கொழுந்து விட்டெரியும்....இன்று உலகமே இவர்களை திரும்பிப்பார்க்கிறது..... ஆனால் நம் நாடு மட்டும் ஏனோ, இவர்களை கண்டுகொள்ளவில்லை.... தன் படிப்பை, தன் பெற்றோரை எல்லாம் மறந்து, பட்டினி கிடந்து, சிறையில் கிடந்தது, அடிவாங்கி.... இதெல்லாம் எதற்காக? தன் இனத்தின் வாழ்வுரிமைக்காக.... இன்று இவர்கள் படும் இந்த வேதனை, நாளை சரித்திரமாகும்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.