"சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கிற்கு, பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது' என, மத்திய உருக்குத் துறை அமைச்சர், பெனி பிரசாத் வர்மா தெரிவித்த கருத்தால், நேற்று பார்லிமென்டில், பெரும் சர்ச்சை எழுந்தது. சமாஜ்வாதி எம்.பி.,க்களுக்கும், அமைச்சர் பெனி பிரசாத் வர்மாவுக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், லோக்சபாவும், ராஜ்யசபாவும் நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரத்தில், அமைச்சரின் கருத்துக்கு, வருத்தம் தெரிவித்தது மத்திய அரசு.
லோக்சபாவில், நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பூஜ்ஜிய நேரம் ஆரம்பித்தது. அப்போது, முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி எம்.பி., சைலேந்திர குமார் பேசியதாவது: அமைச்சர் பெனி பிரசாத் வர்மா, சமாஜ்வாதி தலைவர், முலாயம்சிங்கை அவதூறாக பேசியுள்ளார். பயங்கரவாதிகளுக்கு அவர் அடைக்கலம் தருவதாகக் கூறியுள்ளார். இந்த பேச்சின் மூலம், அமைச்சர் பெனி பிரசாத், முஸ்லிம்களை இழிவுபடுத்தியுள்ளார். எனவே, அமைச்சர் பெனி பிரசாத், தன் பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அவர் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு சைலேந்திர குமார் பேசினார்.
இதற்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் எழுந்த, அமைச்சர் பெனி பிரசாத் கூறியதாவது: முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என, நான் கூறவில்லை; பயங்கரவாதிகளுக்கு, முலாயம் சிங் அடைக்கலம் தருகிறார் என்றே கூறினேன். நான் பேசியதை, திரித்துப் பேசுவதை ஏற்க முடியாது. வேண்டுமானால், இப்பிரச்னை குறித்து, சபையில் விவாதம் நடத்த நான் தயார்; சமாஜ்வாதி கட்சியினர் தயாரா? பாபர் மசூதி இடிப்பின் போது, கல்யாண் சிங்குடன் இணைந்து செயல்பட்டவர் முலாயம்சிங். குஜராத் தேர்தலில், பா.ஜ., வெற்றி பெறவும், சமாஜ்வாதி உதவியுள்ளது. மேலும், நான் முலாயம் சிங்கை விமர்சித்து, எந்த அறிக்கையும் வெளியிடவில்லை; அதனால், மன்னிப்பு கேட்பது என்ற கேள்விக்கே இடமில்லை. முலாயம் சிங்கை நான் அவதூறாக பேசினேன் என்பதற்கு, என்ன ஆதாரம் உள்ளது. நான் எந்த மதத்தையும் பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்தி பேசவில்லை. இவ்வாறு அமைச்சர் பெனி பிரசாத் கூறினார்.
இதையடுத்து, சபையில், பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. சபையின் மையத்திற்கு சென்ற, சமாஜ்வாதி, அமைச்சர் பெனி பிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என, வலியுறுத்தினர். சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கோ, ""பயங்கரவாதிகளுடன் எனக்கு தொடர்பு உண்டு எனில், என்னை சிறையில் தள்ளுங்கள் அல்லது, அமைச்சர் பெனி பிரசாத்தை பதவி நீக்கம் செய்யுங்கள்,'' என்றார்.
இதனால், முலாயம் சிங்கையும், அவரின் கட்சியினரையும், சமாதானப்படுத்தும் வகையில் பேசிய, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், கமல்நாத் கூறியதாவது: முலாயம் சிங் பற்றி, வர்மா கூறிய கருத்திற்காக, நான் வருத்தம் தெரிவிக்கிறேன். முலாயம் சிங், இந்த சபையின் சாதாரண உறுப்பினர் அல்ல; ஒரு பெரிய கட்சியின் தலைவர். அவரை குறைவாக மதிப்பிட்டு பேசக்கூடாது. சமாஜ்வாதி எம்.பி.,க்களின் உணர்வுகளுக்கு நான் மதிப்பு அளிக்கிறேன். முலாயம் பற்றி தெரிவித்த கருத்துக்களுக்காக நான் வருந்துகிறேன். இதுபோன்ற கருத்துக்களை, குற்றச்சாட்டுக்களை, ஆளும் கட்சியினர் அல்லது எதிர்க்கட்சியினர் என, யார் தெரிவித்திருந்தாலும், அது கண்டனத்திற்கு உரியதே. இவ்வாறு கமல்நாத் கூறினார்.
கமல்நாத் இவ்வாறு வருத்தம் தெரிவித்த போது, சபையில், அமைச்சர் பெனி பிரசாத் இல்லை. அமைச்சர் கமல்நாத் பேசிய பின்னும், சமாஜ்வாதி எம்.பி.,க்களின் கோபம் குறையாததால், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், சபை மதியம், 2:00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோதும், அமளி காணப்படவே, 3:00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின், நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவிலும், மதிய உணவு இடைவேளைக்குப் பின், இந்தப் பிரச்னையை, சமாஜ்வாதி எம்.பி., நரேஷ் அகர்வால் எழுப்பினார். "அமைச்சர் பெனி பிரசாத் வர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்' என, சமாஜ்வாதி எம்.பி.,க்கள் வலியுறுத்தினர். இதனால், சபை நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டது.
- நமது டில்லி நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.