சென்னை: ""மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐ.மு., கூட்டணியிலிருந்தும், தி.மு.க., விலகிக் கொள்ளும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று திடீரென அறிவித்தார்.
சென்னை அறிவாலயத்தில் நேற்று, நிருபர்களை கருணாநிதி சந்தித்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்பு: இலங்கைத் தமிழர் பிரச்னையில், செல்வா காலந்தொட்டு, அங்குள்ள தமிழர்களின் உரிமைக்காகவும், தமிழர் வாழ்வாதாரங்களின் பாதுகாப்புக்காகவும், தமிழ் மொழியின் சமத்துவமான தகுதிக்காகவும், தி.மு.க., குரலெழுப்பி வந்துள்ளது. இலங்கையில், இனப்படுகொலை நடத்தப்பட்டது, உலக நாடுகளின் விவாதத்திற்கு உரியதாகி விட்டது. இவைகளையெல்லாம் ஐ.நா., சபையிலும், ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்திலும் நீதிநெறியோடு ஆராய்ந்து பார்த்து, அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வர் என, எதிர்பார்த்தோம்.
ஆனால், அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்குகே தள்ளப்பட்ட இலங்கையும், அந்த இலங்கையின் தொப்புள் கொடி உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தியாவும், இந்த ஜனநாயக விரோத செயல்களுக்கு கதவுகளைத் திறந்து விட்டிருப்பதை, இன உணர்வுள்ள எந்த தமிழனாலும் ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே, குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதையாக, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போக விட்டதோடு, தி.மு.க., முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் மத்திய அரசு சிறிதும் பரிசீலனை செய்யவில்லை. எனவே, இலங்கை தமிழருக்கு எந்த வகையிலும், பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பின் மத்திய ஆட்சியில், தி.மு.க., நீடிப்பது தமிழினத்திற்கு இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐ.மு., கூட்டணியிலிருந்தும் தி.மு.க., உடனடியாக விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
பின் நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:
* இனிமேல் பிரச்னை அடிப்படையில், மத்திய அரசுக்கு ஆதரவு தருவீர்களா?
பொதுவாக பிரச்னை அடிப்படையில் ஆதரிப்பது என்பது, எல்லா கட்சிகளுமே கடைப்பிடிக்கிற முறைதானே!
* அமைச்சரவையில் பங்கேற்காமல், வெளியே இருந்து அரசுக்கு ஆதரவு தரப்படுமா?
எதுவும் கிடையாது.
* "ஆட்சிக்கு மதவாத சக்திகள் வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான், ஐ.மு., கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம்' என, ஏற்கனவே சொல்லியிருந்தீர்கள். நீங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவதால், மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரக் கூடுமல்லவா?
அதற்கு நாங்கள் பொறுப்பாளி அல்ல.
* உங்களை மத்திய அமைச்சர்கள் சந்தித்து விட்டுப் போன பின், மத்திய அரசிலிருந்து உங்களுக்கு எதாவது தகவல் வந்ததா?
பத்திரிகைகளில் வந்த செய்திகள் தான் தகவல்.
* இது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்று நினைக்கிறீர்களா? 2009ம் ஆண்டிலேயே நீங்கள் ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டதே?
நாங்கள், 2009ம் ஆண்டில் என்ன செய்யவில்லை? அப்போது நாங்கள் ஒன்றும் அமைதியாக இல்லை.
* பொதுவாக அப்படியொரு குற்றச்சாட்டு உங்கள் மீது சொல்லப்பட்டதே?
"பொது' என்பதே ஒரு நல்ல சொல் அல்ல.
* "டெசோ'வின் அடுத்த கட்ட செயல்பாடுகள் எப்படி இருக்கும்?
"டெசோ' சார்பில் ஏற்கனவே நடந்த செயல்பாடுகள் மேலும் தொடரும்.
* நீங்கள் குறிப்பிட்ட திருத்தங்களைக் கொண்டு வராத பட்சத்தில், மத்திய அரசு, இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டதாக நினைக்கிறீர்களா?
தற்போது, ஐ.நா., சபையே அப்படி துரோகம் இழைத்து விட்டதோ என்று கருதுகிறேன்; மத்திய அரசும் கூட.
* இலங்கை அரசுக்கு, 2009ல் மத்திய அரசு உதவி செய்ததாக ஒரு குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?
அது உண்மையாக இருந்தால், எதிர்காலத்தில் விசாரிக்கப்பட வேண்டியவற்றில் அதுவும் ஒன்றாக அமையலாம்.
* அப்படிப்பட்ட நிலையில், மத்திய அரசும் சேர்ந்து போர்க் குற்றம் செய்ததாக கருதலாமா?
அது உண்மையா இல்லையா என்பது முதலில் தெரியட்டும்.
* பார்லிமென்டில், நீங்கள் கேட்டபடி திருத்தங்களோடு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், உங்களுடைய தற்போதைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்வீர்களா?
அதற்கு நேரம் அதிகம் இருக்கிறது. இன்று (நேற்று) மாலை வரையில் நேரம் இருக்கிறது; நாளைக்கும் இருக்கிறது. 21ம் தேதிக்கு முன்பும் இருக்கிறது. அதற்குள் பார்லிமென்டில் நாங்கள் எண்ணியவாறு இந்தத் தீர்மானம், திருத்தங்களோடு முன்மொழியப்பட்டு விவாதத்திற்குக் கொண்டு வரட்டும்.
* தி.மு.க.,வின் மத்திய அமைச்சர்கள் எப்போது ராஜினாமா செய்வார்கள்?
இன்று அல்லது நாளை. இவ்வாறு கருணாநிதி கூறினார்.
விலகல் எதிர்பாராதது: தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேட்டி: இலங்கை பிரச்னையில், காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் அக்கறை செலுத்தி வருகிறது. இலங்கை வாழ் தமிழர்களுடைய உரிமைகள், மறுகுடியமர்த்தல், பயமற்ற வாழ்க்கை முறை இவைகளுக்கு மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி, தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஐ.நா., சபையில் அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை, கடந்த முறை இந்தியா ஆதரித்தது. இந்த முறையும் ஆதரிக்கும். இதற்கிடையில் மத்திய அரசிலிருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும் விலகுவதாக கருணாநிதி கூறியுள்ளார். இது எங்களுக்கு ஒரு எதிர்பாராத முடிவாக உள்ளது. இலங்கை விவகாரத்தில், மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். பொதுமக்களையும், தனிமனிதர்களையும், கட்சி அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்துவது தமிழ் பண்பாட்டிற்கும், நாகரிகத்திற்கும் மாறுபட்ட செயல். இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.
நாடகம் அம்பலமாகும்: இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் பேட்டியில் கூறியதாவது: இலங்கை தமிழர்களுக்கு, துரோகத்துக்கு மேல் துரோகத்தை மத்திய அரசு செய்து வருகிறது. இந்நிலையில், செய்த பாவத்துக்கு பிராயசித்தமாக, ஐ.மு., கூட்டணியிலிருந்து, தி.மு.க., வெளியேறியுள்ளது; இதை வரவேற்கிறோம். இதற்கு, உள்நோக்கம் கற்பிக்க விரும்பவில்லை. ஆனால், மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை, தி.மு.க., வாபஸ் பெற்றது நாடகமென்றால், அது விரைவில் வெளிச்சத்துக்கு வரும். ஒருவர் நீண்ட நாளைக்கு ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது. இவ்வாறு, தா.பாண்டியன் கூறினார்.
2009ல் செய்திருக்கலாம்: தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: ஐ.நா., சபையில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு, உரிய மாற்றங்கள் செய்ய, மத்திய அரசு முன்வராததால், ஆதரவை, தி.மு.க., வாபஸ் பெற்றுள்ளது. தி.மு.க.,வின் முடிவை, பா.ஜ., வரவேற்கிறது. 2009ம் ஆண்டு, போர் உச்சகட்டத்தை அடைந்தபோது, இம்முடிவை எடுத்திருந்தால், ஈழத் தமிழர்கள் உயிரை காப்பாற்றி இருக்கலாம். தமிழகத்தில், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, இலங்கை தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தால் தான், மத்திய அரசு பணியும், கடந்த காலங்களை மறந்துவிட்டு, தமிழக கட்சிகள் இதற்காக, இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கருணாநிதி இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளுக்கு எல்லாம் காங்கிரஸ் தான் காரணம் என்று மக்களிடம் சொல்லி நாம் தப்பித்துகொள்ளலாம் என்கிற கணக்கில் இந்த முடிவினை எடுத்துள்ளார் , மக்கள் இவரது நாடகங்களை தொடர்ந்து பார்த்து பார்த்து சலிப்படைந்து உள்ளனர், எனவே இனியும் இவர் நாடகமெல்லாம் மக்களிடம் எடுபடாது. இவர் காங்கிரசை சிக்க வைத்துவிட்டு நாம் அப்ரூவராக மாறிவிடலாம் என்று எண்ணுகிறார் ,இவர் அப்ரூவராக மாறினாலும் கூட மக்கள் மனதில் இவர் குற்றவாளி தான். காங்கிரசை சிக்க வைத்துவிட்டு தான் மட்டும் தப்பிக்கலாம் என்று என்னும் கருணாநிதிக்கு விரைவில் காங்கிரஸ் பெரிய ஆப்பாக வைக்க போகிறது. 2 ஜி மெகா ஊழலில் , கலைஞ்சர் தொலைக்காட்சி பெற்ற இருநூற்றி சொச்சம் கோடிகள் சம்பந்தப்பட்ட வழக்கில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் தான் அத்தொலைக்காட்சியில் பெரும் பங்கு வைத்திருப்பவர், அவரை கைது செய்யபோவதாகத்தான் அப்போது செய்திகள் வந்தது, அப்படி ஒரு நிகழ்வு நடந்துவிட்டால் அதைவிட தனக்கு பெரிய அவமானம் வேறு எதுவும் இருக்கமுடியாது என்பதால் உடனே தன் கைத்தடிகளை டில்லிக்கு அனுப்பி, கருணாநிதியும் தன்னை சந்திக்க வந்த மத்திய அமைச்சர்கள் மூலம் சொல்லி தன் மனைவியை கைது செய்வதை தடுத்துவிட்டதாக கூட தகவல்கள் உலாவந்தன, அதை இன்று வரை கருணாநிதியும் மறுக்கவில்லை. இப்போது காங்கிரஸ் ஒதுங்கிக்கொண்டு , சி.பி.ஐ விருப்பப்படி நடவடிக்கை எடுக்க பச்சை கொடி காட்டினாலே போதும், தயாளு அம்மாள் திகாரில் அடைக்கப்படுவார். மக்களை ஏமாற்றி வோட்டு வாங்குவதற்காக காங்கிரசில் இருந்து வெளியே வந்த கருணாநிதி இதையும் சந்திக்க வேண்டி இருக்கும். கருணாநிதி என்ன மாய்மால வேலைகளை செய்து தப்பிக்க நினைத்தாலும் இன்னொன்றில் மாட்டிக்கொண்டு முழிக்கவேண்டியுள்ளது. உப்பு தின்றவன் தண்ணி குடித்தே ஆகவேண்டும் என்று இதைத்தான் சொல்கிறார்களா?.
2009 யில் கருணா ஆட்சில் இருக்கும்பொழுது கொத்து கொத்தாக ஊழல்களை செய்தார். மாநிலத்தில், மத்தியில். அப்பொழுது ஊழல்களின் அட்டகாசம் அதிகம் ஆகையால் 2009யில் கருணாவில் நாட்டம் இலங்கை தமிழர்கள் மீது இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை .கருணாநிதி போல, தன்னலம் கொண்டவருக்கு, நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் வராது.காவேரியில் என்ன செய்தார் முட்டுக்கட்டை கருணா ஒன்றும் செய்யவில்லை ,யாருடைய தலைமையில் மத்திய அரசு அமைந்தாலும், கையை, காலை பிடித்து,கருணாநிதி உறவை ஏற்படுத்தி கொள்வார் & மெகா ஊழல்களையும் செய்தார் ,குழப்பம் உண்டுபண்ணுவது , ஊழல்கள் செய்வது ,திரித்து பேசுவது எல்லாம் தி.மு.க விற்கு கை வந்த கலைகள்,ஆதாரம் இல்லாமல் மிரட்டுவது ,சொத்துகளை ஆக்ரமிப்பு செய்வது எல்லாம் தி.மு.க வின் கொள்கைகள்,
நேற்று மாலை 5 மணிக்கு "தி.மு.க., மிரட்டலுக்கு காங்கிரஸ் பணிந்தது பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வருகிறது" என்ற செய்தி, இரவு 11 மணிக்கு இப்படி ஒரு செய்தி. பெரிசு ஜனங்களை குழப்பி ஒட்டு வாங்கனும்னு முடிவு பண்ணிட்ட, நடக்கட்டும். நாங்க இளிச்சவாயங்க, எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம், ஏன்னா நாங்க ரொம்ப நல்லவங்க.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.