பல்லடம்: "ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டர் 30 ரூபாயாக உயர்த்த வேண்டும்,' என, கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்க தலைவர் பாலசந்தர், காப்பாளர் ராஜகோபால் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு:
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 25 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள், கிராம பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கோவை மாவட்ட ஆவின் ஒன்றியத்துக்கு பால் வழங்கி வருகின்றனர். நடப்பாண்டில் நிலவும் கடுமையான வறட்சியால் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டு பால் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. கால்நடைகளுக்கு பசுந்தீவனங்கள் கிடைப்பதில்லை; உலர் தீவனங்கள், அடர் தீவனங்கள் கடும் விலை உயர்வாலும், பாலுக்கு கட்டுபடியான விலை இல்லாததாலும், பால் உற்பத்தியாளர்கள் பலரும், கறவை மாடுகளை விற்றுவிட்டனர்.
கடுமையான வறட்சியால் உயர்ந்துள்ள தீவன விலை, தொழிலாளர்களின் சம்பளம், மருத்துவ செலவை கணக்கிடும்போது 4.2 சதவீத கொழுப்பு சத்து, 8.3 இதர சத்துக்கள் உள்ள பாலுக்கு தரப்படும் 19 ரூபாய் 40 காசு, பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுபடியாகவில்லை.
தமிழகத்தில் தனியார் பால் உற்பத்தியாளர்களும் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளனர். ஆவினுக்கு கொள்முதல் செய்யப்படும் பால் விலை லிட்டருக்கு 19 ரூபாய் 40 காசுகள் என்பதை, 30 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
மானிய விலையில் கலப்பு தீவனம் வழங்க வேண்டும்; தரமான பால் உற்பத்தியை கணக்கில் கொண்டு 20 முதல் 25 கிராம சங்கங்களுக்கு ஒரு கால்நடை டாக்டரை தொகுப்பு ஊதியத்தில் அல்லது ஒப்பந்த அடிப்படையில் ஆவின் நிர்வாகம் மூலம் பணியமர்த்த வேண்டும். பிரதான கிராம கூட்டுறவு பால் சங்கங்களில் உள்ள பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஆவினுக்கு பால் வழங்கும் அனைத்து பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு ஆவின் மூலம் இலவசமாக காப்பீடு செய்து தர வேண்டும். கிடாரி கன்று வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், கிடாரி கன்று தாயாகும் வரை இலவச கலப்பு தீவனம் மற்றும் மருத்துவ வசதி செய்ய வேண்டும், என, அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.