"காங்கிரஸ் ஆதரவு கிடைக்கும் என்பதால், நம் வெற்றி உறுதி' என, தி.மு.க., தலைவர் கருணாநிதியும், "துரோகம் செய்த எம்.எல்.ஏ., க்களுக்கு பாடம் புகட்டுவேன்' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் பரபரப்பாக பேசியதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க., - எம்.எல்.ஏ., க்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. கருணாநிதி தலைமை வகித்தார். பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில், நாளை நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில், எம்.எல்.ஏ., க்கள் ஓட்டு அளிக்க வேண்டிய நடைமுறை பற்றி, விரிவாக விவாதிக்கப்பட்டு, கருணாநிதி அறிவுரை வழங்கினார்.
கூட்டத்தில், கருணாநிதி பேசியது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: ராஜ்யசபா தேர்தலில், எப்படி ஓட்டு அளிக்க வேண்டும் என்பதை உங்களுக்கு (எம்.எல்.ஏ., க்கள்) மாதிரி தேர்தல் நடத்தி காட்ட வேண்டிய அவசியமில்லை.அ.தி.மு.க., அணியில் காங்கிரசுக்கு இடம் இல்லை என, அக்கட்சி கதவை அடைத்து விட்டது. இதனால், காங்கிரசுக்கு நம்மை தவிர, வேறு கட்சிகளின் ஆதரவில் வெற்றி பெற முடியாது. அதனால், ராஜ்யசபா தேர்தலில், காங்கிரஸ் ஆதரவு நமக்கு நிச்சயமாக கிடைக்கும். அனைவரும், முதல் ஓட்டுக்களை மட்டுமே அளிக்க வேண்டும். இரண்டாம் ஓட்டுகளை யாரும் அளிக்க வேண்டாம்.இவ்வாறு கருணாநிதி பேசியதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜயகாந்த் ஆவேசம்:
தே.மு.தி.க.,- எல்.ஏ.,க்கள் கூட்டம் நேற்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்தார். கூட்டத்தில், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேர் பங்கேற்கவில்லை. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட, 21 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். ராஜ்யசபா தேர்தலில், எவ்வாறு ஓட்டளிப்பது என்பது குறித்து எம்.எல்.ஏ.,க்களுக்கு, செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில், விஜயகாந்த் பேசியது குறித்து அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என்பதால், கவனமுடன் இருப்பது அவசியம். கட்சி வேட்பாளரின் ஏஜென்ட்டாக அனகை முருகேசன், அவருக்கு மாற்றாக மோகன்ராஜ்; கட்சியின் அதிகாரபூர்வ ஏஜென்ட்டாக வெங்கடேசன், அவருக்கு மாற்றாக பார்த்திபனை நியமித்துள்ளேன்.இவர்களிடம் ஓட்டுச்சீட்டை காட்டிய பின் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், இவர்கள் தேர்தல் அதிகாரியை நோக்கி, கையை உயர்த்தி, காட்டுவர். இப்படி காட்டினால், அந்த ஓட்டு செல்லாததாக தேர்தல் அதிகாரி அறிவித்து விடுவார். எனக்கு துரோகம் செய்து சென்றவர்களுக்கு நான், விரைவில் பாடம் புகட்டுவேன். அவர்கள் துவக்கி வைத்த ஆட்டத்தை, நான் முடித்து வைக்கிறேன். தேர்தல் முடிந்தபின், நான் யார் என்று காட்டுகிறேன். 2016ல் என் குறிக்கோள் நிறைவேறுவது உறுதி.இவ்வாறு விஜயகாந்த் பேசியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-நமது நிருபர் குழு-